Skip to main content

எடப்பாடி பழனிசாமி அழைத்தால் செல்ல தயாரா? தங்க.தமிழ்ச்செல்வன் பதில்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

 

Tuticorin Thanga Tamil Selvan



18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராவிட்டால் மேல்முறையீடு செய்யமாட்டேன் என டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று காலை சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாகதான் வரும். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்ல நான் தயாராக இல்லை. நான் உள்பட 18 உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்கள் தான். எங்களை ஏன் எங்களை கட்சியை விட்டு நீக்கவில்லை? தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் சட்டமன்றத்தில் ஜனநாயக கடைமையாற்ற தயாராக உள்ளோம் என்றார்.
 

 

 


தொடர்ந்து அவரிடம், 18 எம்.எல்.ஏக்களில் சிலரை எடப்பாடி பழனிசாமி தரப்பு இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் 18 பேரும் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். 18 பேரையும் இழுத்தால் இழுக்கட்டும். எங்களுக்கு பிரச்சனை இல்லை.


நீங்கள் செல்லத் தயாரா? என்ற கேள்விக்கு... எங்களை அழைத்து அவர் என்ன செய்யபோகிறார்? பெரும்பான்மையை நிரூபிப்பது அப்புறம். முதலில் நாங்கள் எங்கள் ஜனநாயக கடைமையாற்ற வேண்டும். எங்களை சட்டமன்றத்தில் அமர வையுங்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. முதலில் சட்டமன்றம் செல்ல விடுங்கள் பின்னர் என்ன செய்வோம் என்பதை பார்க்கலாம்.


தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால், இடைத்தேர்தலை சந்திக்க 100 சதவீதம் தயாராக உள்ளோம். இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், 18 பேரும் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏவாக வெற்றி பெறுவோம். 18 பேரில் ஒருவர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் அனைவரும் பதவி விலகுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

 

படம்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசுக்கு சொந்தமான கோயிலை அபகரிக்க நினைக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்” - தங்கதமிழ்செல்வன்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

"The OPS family wants to usurp the government-owned temple" - Thanga Tamilselvan

 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளீதரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கதமிழ்செல்வன், “இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோயிலை, ஓ.பி.எஸ் குடும்பத்தினர் தங்கள் கோயிலாக நினைத்து கடந்த 20 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வந்தனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறுவதால் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அதனை ஏற்க மறுத்து எங்களுடன் வாக்குவாதம் செய்தனர். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு அங்கீகாரம் ஏதும் இல்லாததால் அது கலைக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று முதல் தீபம் ஏற்றி வந்த கைலாசபட்டியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உரிமையைப் பறித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக தீபம் ஏற்றி வந்தனர். இந்த ஆண்டு எங்கள் முயற்சியால் அந்தச் சமுதாயத்தினருக்கு முதல் உரிமை வழங்கி தீபம் ஏற்ற வைத்தோம். 

 

அரசுக்கு சொந்தமான கோயிலில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு பரிவட்டம் கட்டாமல், இந்தக் கோயிலின் முன்னாள் பூசாரி நாகமுத்து கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா, அவரது மகன் மற்றும் ஓ‌.பி.எஸ்-ன் மகனுக்கு பரிவட்டம் கட்டியது சமூகநீதி மீறும் செயலாகும். பெரியகுளம் எம்.எல்.ஏ. தலித் என்பதால் இது நடந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

 

எம்.எல்.ஏ. சரவணகுமார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அந்தக் கோயிலில் சமூகநீதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான கோயிலை ஓ.பி.எஸ் அதிகாரத்தால் தங்கள் சொந்தக் கோயில் என நினைத்து அபகரிக்க பார்க்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மகன் கூறுவதைப் போல ரவுடிகளைக் கூட்டி வந்திருந்தால் தீபத்தை நாங்களே ஏற்றி இருப்போம். அந்த குருக்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் கொண்டு வரும் தீபத்தை ஏற்றுவதற்காக 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தார். 

 

முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நிர்வகிக்கிற இந்தத் தமிழகத்தில் ஒரு சமூகநீதி மறுப்பு நிகழக்கூடாது என்பதால் தான் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுகின்றோம். நிச்சயமாக அந்தக் கோயில் ஓ.பி.எஸ். குடும்பத்தின் கோவில் என்று இல்லாமல் பொதுக்கோவிலாக மாறும் போது மக்கள் தாராளமாகச் சென்று தரிசனம் செய்யும் நிலைமையை உருவாக்குவோம். தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என்பதை மறந்துவிட்டு, அரசு நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். கோவில் பூசாரியின் வேஷ்டியை சட்டமன்ற உறுப்பினர் பிடித்து இழுத்ததாக கூறுவது தவறான செய்தி. தவறி கீழே விழப் போனவரைத் தான் எம்.எல்.ஏ. பிடித்தார். 

 

இந்தக் கோயிலின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரையும் பணிமாறுதல் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அந்தக் கோயிலுக்குள் வராமல் தடுக்க முடியும். இந்தக் கோரிக்கையும் ஆட்சியரின் முன் வைத்துள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் பெரியகுளம் சட்டமன்ற  உறுப்பினர் சரவணகுமாரும் மனு கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ‘இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம்’ என ஆட்சியர் உறுதி அளித்து இருக்கிறார்” என்று கூறினார்.

 

 

Next Story

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பதிவு செய்யாமல் சென்ற ஜீப்! திமுக வேட்பாளர் ஆய்வு

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

The jeep that went without registering inside the counting center Thanga Tamilselvan

 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பதிவு செய்யாமல் ஒரு ஜீப் சென்று வந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்பவர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், போடி திமுக வேட்பாளரும், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சரவண குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (21.04.2021) வந்தனர். நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி ஒரு ஜீப் வந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்த ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட வேண்டும் என்று கோரினர். 

 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்து, அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே உள்ளே அனுப்ப வேண்டும் என்றும், பதிவு செய்யாமல் வாகனங்களை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் கூறினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், சையத் பாபு ஆகியோரிடம் தங்க தமிழ்ச்செல்வன் முறையிட்டார். பின்னர் ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கடந்த 13ஆம் தேதி இரண்டு போலீஸ் ஜீப்புகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அங்கு வந்தது தெரியவந்தது. 

 

அதில் ஒரு ஜீப் வெளியே சென்று வந்தது தொடர்பாக ஆவணங்களில் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த போலீஸ் ஜீப் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளை திமுக வேட்பாளர்கள் பார்வையிட்டனர். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “கடந்த 13ஆம் தேதி பதிவு செய்யாமல் ஒரு ஜீப் வெளியே சென்று வந்துள்ளது. இங்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் எண்களையும் பதிவு செய்ய வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். போடி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள் உள்ளன.

 

அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக அந்தப் பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவற்றை தனியாக ஒரு அறையில் வைத்து, அதனை நோக்கி 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்வதாக தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்தனர்” என்று கூறினார்.