Skip to main content

இந்துத்வ அமைப்புகளால் என் உயிருக்கு ஆபத்து! - நடிகர் பிரகாஷ்ராஜ் 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

பா.ஜ.க. மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

 

Prakashraj

 

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். நாட்டில் மதவாத சக்திகள் வேரூன்றி இருப்பதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து, இந்துத்வ அமைப்பினர் அவரது வாகனத்தின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.

 

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், 'கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மதவாத மற்றும் வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்காமல், ஆராய்ந்து வாக்களிக்கவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், ‘மோடிக்கு நாட்டை முறையாக ஆட்சி செய்யத் தெரியவில்லை. தேவையில்லாத குழப்பங்களைக் கிளப்பிவிட்டு அதன்மூலம் ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சிகள் நடக்கின்றன' எனவும் குற்றம்சாட்டினார். 

 

அதேபோல், 'நான் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறேன். அதனால், என்னைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. சில இந்துத்வ அமைப்புகளில் இருந்து நேரடியாக கொலைமிரட்டல்களும் வருகின்றன. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என என் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். நான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். ஆனால், எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை’ என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.