Skip to main content

சேலத்தில் நிலநடுக்கம்! மேட்டூர் அணை நிரம்பியது காரணமா? பொதுமக்கள் பீதி!!

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
Salem


சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 22, 2018) காலை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதுதான் நில அதிர்வுக்குக் காரணம் என்ற தகவலால் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியில் இருந்து 7.50 மணிக்குள் பரவலாக லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, சித்தனூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.
 

 

 

வீடுகளில் திடீரென்று பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பலர், பாதுகாப்பு கருதி வீதிகளுக்கு ஓடிவந்தனர். இன்று காலை பொதுமக்கள் தெருக்களில் கூடி இதைப்பற்றியே ஆச்சர்யமும் பீதியும் கலந்தவாறு பேசினர்.

சேலத்தில் நில நடுக்கம் உணரப்பட்ட சில நிமிடங்களில் தர்மபுரி மாவட்டத்திலும் பரவலாக நில அதிர்வை உணர்ந்ததாக அம்மாவட்ட மக்கள் கூறினர்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில நடுக்கத்தைக் கண்டறியும் சீஸ்மோகிராப் கருவி உள்ளது. ஆனால் அந்த கருவி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்து இருப்பதால், உடனடியாக நிலஅதிர்வின் அளவைப் பெற முடியவில்லை.
 

 

SEISMOGRAFOS-1


இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பிற மாவட்டங்களில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகளின் உதவியுடன், சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு 3.3 ரிக்டர்களாக பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. காலை 7.47 மணிக்கு இந்த அளவு பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மேட்டூர் அணை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. மேலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக 10 நாள்களுக்கும் மேலாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீரின் கனம் காரணமாகவும் பூமிக்கடியில் பாறைகள் நகர்ந்து இருக்கலாம் என்ற தகவலும் பரவியது.

இந்த தகவலால் அணைக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் பரவியுள்ளது.
 

venkateswaran-hod


இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை புவியமைப்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

''தினமும் 10 ஆயிரம் தடவைக்கு மேல் நிலநடுக்கம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 3 ரிக்டருக்கு மேல் நில அதிர்வு ஏற்படும்போதுதான் அதை நம்மால் உணர முடிகிறது. 5 ரிக்டருக்கு மேல் அதிர்வு இருக்குமானால் பேரிடர்களும் ஏற்படக்கூடும்.

பொதுவாக இன்றைக்கு ஏற்பட்ட நில அதிர்வை மனிதர்களால் உண்டாக்கப்படும் (மேன் மேடு) அதிர்வாக வகைப்படுத்தலாம். பல ஆண்டுகளாக மேட்டூர் அணை வறண்டோ அல்லது நீரின் அளவு குறைவாகவோ இருந்தது. இந்நிலையில், திடீரென்று அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தம், பூமிக்கடியில் பாறைகளுக்கு இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பும்போதும் இதுபோன்ற நில அதிர்வுகள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

தொடர்ச்சியான சுரங்கப்பணிகள், நிலத்தடி நீருக்காக போர்வெல் போடுவது, வேகமான நகரமயமாதல் போன்ற காரணங்களாலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும். ஆனால் மேட்டூர் அணை நிரம்பியதால்தான் இன்று நில நடுக்கம் ஏற்பட்டதாக அரிதியிட்டுச் சொல்ல முடியாது. பெரும்பாலும் பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் அதை விட்டால் நவம்பர் போன்ற மாதங்களில்தான் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது முந்தைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகும் எபிசென்ட்ரிக் மற்றும் ஃபோகஸ் பாயின்ட் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகுதான் என்ன காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் நேற்று 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தால்கூட இன்று சேலம் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. புவி தகவமைப்புப்படி தமிழ்நாட்டிற்கு நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு,'' என்கிறார் பேராசிரியர் வெங்கடேஸ்வரன்.
 

jayamurugan-tnsf


இந்த கருத்தை முற்றாக மறுக்காமல் போனாலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் வேறு சில காரணங்களை முன்வைத்தார்.

''ஒவ்வொரு நாளுமே ஆயிரக்கணக்கான முறைகள் நில அதிர்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நமது பூமி, நிலப்பகுதியில் இருந்து உள்ளே 6400 கிலோமீட்டர் உயரம் கொண்டது. இதில், வெறும் 30 கி.மீ. உயரத்திற்குதான் நிலப்பகுதி உள்ளது. அதற்குக்கீழ் 6370 கி.மீ. உயரத்திற்கு பாறைகள் உருகி குழம்பு நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த பிளவுகளுக்கு இடையில் இருந்து குழம்புகள் வெளியே வருவதைத்தான் எரிமலைகள் என்கிறோம்.

பூமியானது ஓர் உயிரோட்டமான இயக்கத்தை உள்ளுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்திய கண்டமானது ஆசிய கண்டத்தட்டுகளை நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
 

 

 

மேட்டூர் அணையில் முழுமையாக நீர் நிரம்பியதால்தான் நில அதிர்வு ஏற்பட்டது என்பதையும் அறிவியல் உலகம் முழுமையாக புறக்கணிக்கவில்லை. ஆனால், அதுதான் காரணம் என்றால், இதற்கு முன்பும் பலமுறை அணை முழுமையாக நிரம்பியிருக்கிறது. அப்போதெல்லாம் நில நடுக்கம் ஏற்படவில்லை.

ஆனாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு, மஹாராஷ்டிராவில் லத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அதற்குக் காரணம், அங்கு ஓடக்கூடிய ஆற்றை பல இடங்களில் தடுத்து அணைகள் கட்டியிருந்தனர். அந்த அணைகள் அனைத்தும் தரமற்ற புவி பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. புவியமைப்பியல் நிபுணர் ஒருவரிடம் கேட்டதற்கு, மேட்டூர் அணைக்கும் நில அதிர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனாலும் மக்களிடம் இதுபற்றி ஒருவித பயம் இருக்கிறது. அதை போக்குவதும் கொஞ்சம் கடினம்தான்,'' என்றார் ஜெயமுருகன்.
 

 

rohini-collector



அவசர அழைப்புக்கு '1077':

இதற்கிடையே, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பயமின்றி இருக்கும்படியும், ஜன்னல், கண்ணாடி கதவுகள், அலமாரிகள், பாலங்கள், உயர்மின் அழுத்தக் கம்பிகள், விளம்பர பலகைகள் அருகில் இருக்க வேண்டாம் என்றும, லிஃப்டுகளை பயன்படுத்த வேண்டாம்.

நெருக்கமான கட்டடங்களை தவிர்த்து வெட்டவெளியில் பாதுகாப்பாக இருக்கும்படியும், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்ப கொள்ளலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.