Skip to main content

குரங்கணி தீ விபத்தில் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபிடிக்கவில்லை! அமைச்சர் சீனிவாசனின் பகீர் பேட்டி!!

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
seenivasan

      

 மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் குரங்கணி மலைப்பகுதியான கொழுக்குமலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கியதில் பன்னிரெண்டு பேர் தீக்கிரையாகி உள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர்  தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலும் அதில் பலருக்கு அறுபது சதவிகிதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் தீவிர சிகிச்சை அளித்து வந்தும் கூட கவலைக்கிடமாகத்தான் இருந்து வருகிறார்கள்.  இந்த அளவுக்கு வனத்தீயில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் ஒரு மினி பேட்டியை தொடர்ந்தோம். 

 

நக்கீரன் :  தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்படுமா? அல்லது முறைப்படுத்தப்படுமா?
சீனிவாசன் : முதல்வர் மற்றும் துணை முதல்வரின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை செயலாளர் அதுல்யாமிஷ்ராவை குரங்கணி தீவிபத்து விசாரணை ஆணையராக நியமித்து இருக்கிறார்கள். அதனால அவருடைய விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்த பின்புதான் எதுவும் சொல்ல முடியும். இப்போதைக்கு எதுவும் சொல்லக்கூடாது.

 

க்கீரன் :  தற்போது போடி ரேஞ்சர் செயில்சிங்கை சஸ்பெண்ட் செய்து இருக்கிறீர்கள். அதுபோல் துறையின் மேல்நடவடிக்கை எதுவும் இருக்கிறதா?
சீனிவாசன் :  அதற்காகத்தானே விசாரணை ஆணையமே நியமித்து இருக்கிறோம். அதன்மூலம்தான் தெரியும்.

 

நக்கீரன் : கொழுக்குமலை அடிவாரம் பகுதியில் பட்டா நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அதை சீரமைப்பதற்காக வைத்த தீ தான் வனப்பகுதியில் பரவியதாக ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது?
சீனிவாசன் : தம்பி, ஆள் ஆளுக்கு ஒன்னு பேசுவாங்க. அதையெல்லாம் உறுதிபடுத்த முடியாது. விசாரணை கமிசன் மூலம் கூடிய விரைவில் நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும்.

 

நக்கீரன் : சென்னையில் உள்ள ட்ரெக்கிங் கிளப் அனுமதி வாங்கித்தான் கொழுக்குமலை வனப்பகுதிக்கு போனதாக கூறுகிறார்களே?
சீனிவாசன் : குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசன் வரைக்கும் ட்ரெக்கிங் போவதற்குத்தான் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கி இருக்கிறார்களே தவிர கொழுக்குமலைக்கெல்லாம் அனுமதி வாங்கவில்லை. அப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அதுவும் இந்தவிசாரணை மூலம் வெளிவரும்.

 

நக்கீரன் : சம்பவத்தன்று துணை முதல்வரான ஓ.பி.எஸ்.-ன் மகன் ரவீந்திரநாத் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினால்தான் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியில் மெத்தனப்போக்கை கடைபிடித்ததாகவும் பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறதே? 
சீனிவாசன் : தம்பி, அதெல்லாம் ஒன்னும் இல்லை. சம்பவம் கேள்விப்பட்ட உடனே மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.யும் ஸ்பாட்டுக்கு சென்று தீ விபத்தில் சிக்கியவர்கள் பலரை மீட்டு உடனே போடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் போர்க்கால அடிப்படையில் போலீசார், வனத்துறை, ராணுவம் மற்றும் அப்பகுதி மக்களும் சம்பவ இடத்திற்கு சென்று தீக்காயங்களுடன் இருந்தவர்களை காப்பாற்றி விடிய விடிய டோலி கட்டி தூக்கி வந்து குரங்கணி ஆஸ்பத்திரியில் உயர்தரமான முதலுதவி சிகிச்சை அளித்தது தேனிக்கும், மதுரைக்கும் அனுப்பி வைத்தோம். அதுபோல் இறந்தவர்களை அதிகாலையிலேயே ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதுவரை துணை முதல்வருடன் நானும், உதயக்குமார் அங்கேயே இருந்தோம். அது எல்லோருக்கும் தெரியும். நீங்களும்தானே தம்பி பார்த்தீர்கள். அந்த அளவுக்கு தீ விபத்தில் சிக்கிய விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் போராடினார்களே தவிர மாவட்ட நிர்வாகம் ஒன்னும் மெத்தன போக்கையெல்லாம் கடைபிடிக்கவில்லை. அப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள் என்பது தான் உண்மை!

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...