Skip to main content

எங்களை எப்படி சுட்டாங்கன்னு தெரியுமா? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மௌனமாக இருந்த ஓ.பி.எஸ்.

Published on 28/05/2018 | Edited on 28/05/2018


 

O. Panneerselvam

 

 


ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரமே தன்னெழுச்சியாக போராடியது. போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

இவர்களை பார்வையிடுவதற்காகவும், ஆறுதல் கூறுவதற்காகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மே 28ஆம் தேதி வருவதாக இருந்தது. அவர் வருகைக்கு ஏற்ப முன்னதாக மே 27 முதல் மாவட்டத்தில் விதித்திருந்த 144 தடை உத்தரவை, ஆட்சியர் விலக்கிக்கொண்டார். 
 

இன்று காலை தூத்துக்குடி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட அலுவலகம் சென்றார். அங்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார் யாதவ், ஐஜி சைலேஷ்குமார் யாதவ், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடந்த விவரங்களை கேட்டு அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதடைந்த வாகனங்களை பார்வையிட்டர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

 

O. Panneerselvam


 

 

 

துணை முதல்வர் வருவதால் ஏதேனும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மருத்துவமனையையை சுற்றிலும், மருத்துவமனைக்குள்ளும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. காலை நேரத்தில் அவர் வந்ததால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளின் உறவினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
 

சிகிச்சைப் பெற்று வருபவர்களை பார்த்துக்கொண்டே வந்த ஓ.பன்னீர்செல்வம் அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவர் சந்தோஷ் ராஜ் என்பவரையும் பார்த்தார். 

 

O. Panneerselvam


 

அப்போது சந்தோஷ் ராஜ், மாநில அரசான உங்களுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் இந்த ஆலையை மூடவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்தார். பின்னர், வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற பன்னீர்செல்வத்திடம், எங்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை, போலீசார் என்னை சுற்றி நின்றுகொண்டு தாக்கினர். எங்களை சுட சொன்னது யார்? உங்களுக்கு தெரியும்... சொல்லுங்கள்... என்றார். தம்பி நான் சொல்லக்கூடிய நிலையில் இல்லை, சொல்லக் கூடாத இடத்தில் நிற்கிறேன். உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள். விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு மற்றவர்களை பார்க்க புறப்பட்டார்.
 

அனைவரையும் பார்வையிட்ட பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று சந்தோஷ் ராஜீடம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தம்பி நீங்க சொன்னது அனைத்தும் என் நெஞ்சில இருக்கு. நான் இது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டார். 
 

Next Story

மூளையில் ரத்தக்கசிவு; மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ் - கவலையில் ஈஷா யோகா மையம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Jaggi Vasudev undergoes surgery at Apollo Hospital due to bleeding in corner

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. காடுகளை அழித்து ஈஷா மையம் கட்டப்பட்டதாகவும், இளம் பெண்களை மூளைச் சலவை செய்து ஊதியமே இல்லாமல் பணியில் சேர்த்திருப்பதாகவும், ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்த குடும்பப் பெண் சுபஸ்ரீ என்பவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் சர்ச்சைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம். இந்த அளவுக்கு அதிகார வர்க்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து வருகிறார் ஜக்கி.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஆனந்த் நரசிம்மன் ட்விட்டரில் ஜக்கியின்  உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈஷா ஜக்கி வாசுதேவ், கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைவலி காரணமாக ஜக்கியின் டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் ஜக்கியின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈஷா மையத்தின் சார்பில் கூறுகையில், சாமியார் வாசுதேவ் கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தீவிரமாக இருந்தபோதிலும், அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். மேலும், கடந்த மார்ச் 8 அன்று இரவு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது, தலைவலி மிகவும் கடுமையாகியுள்ளது. இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் வினித் சூரியின் ஆலோசனையின் பேரில், ஜக்கி வாசுதேவுக்கு அதே நாளில் மாலை 4:30 மணிக்கு அவசர MRI பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், சாமியார் மூளையில் பெரிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 3-4 வாரங்களில் நீடித்த இரத்தக்கசிவு இருந்ததும் பரிசோதனையில்  தெரியவந்தது.

இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 17 அன்று, ஜக்கி வாசுதேவின் நரம்பியல் நிலையும், இடது காலின் பலவீனமும் சேர்ந்து உடலை மோசமாக பாதித்தது. மீண்டும் மீண்டும் வாந்தியுடன் தலைவலி ஏற்பட, உடல்நிலை மோசமடைந்தது. இறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை போக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜக்கி வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இதையடுத்து, சாமியார் ஜக்கியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மற்றும் அவரது மூளை மற்றும் உடல் இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளன என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜக்கி சிவராத்திரி விழா அன்று நடனமாடியதால் வயது மூப்பின் காரணமாக வந்த விளைவுதான் இது என்கின்றனர் அவரது சீடர்கள் சிலர்.

இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், மருத்துவர்கள் என்னுடைய தலைப் பகுதியை ஆபரேஷன் செய்தார்கள். ஆனாலும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் தையல் போட்டுவிட்டனர் என்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. இதனால், நடிகர் எஸ்.வி. சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.