Skip to main content

மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பு உண்டா? யார் பி டீம்? - விளாசிய கனிமொழி

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Kanimozhi

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வுக்காக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அவரது வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஊடகத்தினரின் கேள்விகளை எதிர்கொள்வதிலும் தன் தந்தையைப் போல எளிமையாகவும் லாவகமாகவும் செயல்பட்டார்.

 

உங்கள் பரப்புரை சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது?

 

அ.தி.மு.க. அரசின் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகையால் அவர்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மதுரையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசியபோது இதைத்தான் உணர முடிந்தது. கடந்த பத்தாண்டுகளாக எந்தவித நல்ல திட்டங்களையும் இவர்கள் கொண்டுவரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்' என கடந்த ஜனவரி மாதம் முதலே ஸ்டாலின் கூறிவருகிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திட்டத்தை ஆதரித்துப் பேசிவிட்டு, இப்போது வேறு வழியின்றி அவசர அவசரமாக அறிவிக்கிறார்

 

‘தி.மு.க.வின் பி.டீம் சசிகலா' என்று முதல்வர் கூறுவது பற்றி..?

 

அ.தி.மு.க.வினர்தான் ‘சின்னம்மா', ‘அம்மா' என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்கள். இன்று ‘தி.மு.க. வின் பி டீம்' என்று கூறுவது நகைப்பாக உள்ளது. ‘பா.ஜ.க.வின் பி.டீம்தான் அ.தி.மு.க.' இது உலகம் அறிந்த விசயம். தி.மு.க. என்றும் நேரடி அரசியல்தான் செய்யும்.

 

இந்தத் தேர்தலில் எதை முன்வைத்து மக்களிடம் பேசுவீர்கள்?

 

இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்கின்ற அதே நேரத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை நாங்கள் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள், ஆனால் அதனை செயல்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உரிய தொழில் வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும்.

 


"ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பேன்” என ஸ்டாலின் சொல்வதற்கு சமூக வலைதளத்தின் தரப்பில் விமர்சனம் எழுகிறதே?

 

இதேபோன்று கலைஞர், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவேன் என்று கூறியபோது நிறையபேர் விமர்சனம் செய்தார்கள். நிறைவேற்றினாரா இல்லையா..? அதுபோல் தி.மு.க. தலைவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பார்

 

மகளிர் அணி சார்பில் களத்திற்கு வந்துள்ளீர்கள். பெண்களிடம் எதை முன்வைக்கப் போகிறீர்கள்?

 

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த அநீதிகளுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் அ.தி.மு.க. அரசால் தீர்க்கப்படவில்லை. காவல்துறையில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்குப் பல்வேறு திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு வெளியாகும். எப்பவும் போல தேர்தல் அறிக்கையும் மு.க.ஸ்டாலினும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்

 

தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து உங்கள் பதில்?

 

தலைவர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை. இதுகுறித்து தலைவர் மு.க.ஸ்டாலின்தான் உரிய முடிவெடுப்பார்.

 

தற்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், தி.மு.க. மாநில அரசோடு மத்திய அரசையும் சேர்த்து விமர்சித்துப் பரப்புரை செய்கிறதே?

 

இந்த எடப்பாடி பழனிசாமி அரசு முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் ‘பி' டீமாகவே செயல்படுகிறது. மாநில நலனைவிட பதவி மோகமும் பணப்பித்தும் பிடித்து ஆட்டுகிறது. அதற்காக பா.ஜ.க.விடம் மண்டியிட்டு சேவகம் செய்கிறார்கள். பா.ஜ.க.வும், தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்கிறது. மோடி அரசு பதவியேற்றப் பின் பொது மக்கள், விவசாயிகள், ஊடகத் துறையினர், பத்திரிகைத் துறையினர் என அனைவரும் முடக்கப்படும் நிலையிலேயே உள்ளனர். மோடி அரசு பதவி ஏற்குமுன் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தது; தற்போது ஜனநாயகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தி.மு.க. சார்பில் மதுரையில் கலைஞருக்கு சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறாரே?

 

கலைஞர் இறப்பின்போது மெரினாவில் இடம் கொடுப்பதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள் தமிழக அரசு போட்டது? தி.மு.க.வும் எவ்வளவு சட்டப் போராட்டங்கள் நடத்தி வென்றது என்பதைத் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; தி.மு.க.வும் மறக்காது.

 

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.