Skip to main content

நாங்க சொல்றதைத் தான் கேட்கணும்... நிர்மலா தேவியை மிரட்டும் அமைச்சர்... என்ன தான் நடக்குது? வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

விசாரணையின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நிர்மலாதேவி ஆஜராகாததால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

 

nirmala devi



அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “பிடிவாரண்ட் தகவலைக்கூட நிர்மலாதேவியிடம் தெரிவிக்க முடியவில்லை. தொடர்புகொள்ளவே முடியவில்லை. கடத்தப்பட்டிருப்பாரோ?'' என்று முதலில் சந்தேகம் எழுப்பினார். அதன்பிறகு அவரால் நிர்மலா தேவியை தொடர்புகொள்ள முடிந்திருக்கிறது. 25 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ‘சரண்டர்’ ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அன்று காலை நீதிமன்றத்தில் அவர் காத்திருந்தார். அதற்குள் நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அந்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரிமளா உத்தரவிட்டார். மீண்டும் சிறை என்பதால் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய நிர்மலாதேவி கண்ணில் நீர்மல்க காவல்துறை வாகனத்தில் ஏறினார்.

 

lawyer



அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், "தமிழக அரசும் காவல்துறையும்தான் நிர்மலாதேவிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை முதலிலிருந்தே கூறிவருகிறேன். இப்பகுதியின் அமைச்சர்கள் இருவரில் ஒருவரின் பெயரைச் சொல்லித்தான் நிர்மலாதேவியை மிரட்டியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இவரைக் கடத்தி வைத்திருந்தார்களா? அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீசாரே தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தார்களா  என்பது தெரியவில்லை. ஒருபக்கம், இந்த வழக்கில் நிர்மலாதேவி ஒழுங்காக ஆஜராகக்கூடாது என்ற மிரட்டல் இருக்கிறது. இன்னொரு பக்கம், "நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும்' என்று மிரட்டுகிறார்கள். நிர்மலாதேவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் கூறுவதை என்னால் புகாராக கொடுக்க முடியவில்லை.


இன்றைக்கு திடீரென்று ரிமாண்ட். ரீகால் பெட்டிஷனைக்கூட அனுமதிக்க விடாமல் கைது பண்ணி ஜெயிலுக்கு கொண்டு போயிட்டாங்க. திரும்பவும் இது சட்டப் போராட்டமாக வந்து கொண்டிருக்கிறது. நிர்மலாதேவி வழக்கின் பின்னால் இருக்கின்ற அரசியல் பின்னணி வெகு விரைவில் உடைக்கப்படும். அமைச்சரின் மிரட்டல் உண்டு என்ற உண்மை ஓரளவு எனக்கும் தெரியும். அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அமைச்சர் பாதி நாட்கள் சாமியார் வேஷம் போடுவார். பாதிநாட்கள் தாடி வைத்திருப்பார்'' என்றார்.