Skip to main content

காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே அடியாக அடித்த உறியடி!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

செங்கதிர்மலை... தமிழகத்தில் ஒரு சிறிய அழகிய கிராமம்; எளிய மக்களைக் கொண்ட கிராமம். அதனருகே 'பக்சினி' என்ற பெயரில் இயங்கும் ஒரு தொழிற்சாலை. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில், தேவையான பராமரிப்போ பாதுகாப்பு ஏற்பாடோ இல்லாமல் கொள்ளை லாபம் ஈட்டி வரும் தொழிற்சாலை.

 

uriyadi 2

உறியடி 2



உள்ளே என்ன வாயு பயன்படுகிறது, வெளியாகிறது என எந்தத் தகவலையும் தெளிவாகத் தராத, கொடுக்கும் லஞ்சத்தால், தரத் தேவையில்லாத ஒரு ஆலை. அந்த ஆலையில் வேலைக்கு வருகிறார்கள் நாயகனும் நாயகனின் நண்பர்கள் இருவரும். நண்பர்களில் ஒருவர் வேலை நேரத்தில் தங்கள் ஆலையில் ஒரு குழாய் சேதப்பட்டிருப்பதை கவனிக்கிறார். அதை அணுகும்போது அதிலிருந்து திரவ நிலை வேதிப்பொருள் வெளியாகி முகத்தில் அடித்து, அதை சுவாசித்ததால் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கிறார். பேருக்கு சில நாட்கள் மூடப்படும் அந்த ஆலை மீண்டும் இயங்குகிறது. எதுவும் சரி செய்யப்படாமல் இயங்கும் அந்த ஆலையில் சில நாட்களில் மீண்டும் ஏற்படும் விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். ஆலையின் அதிபர் அரசின் உதவியோடு வெளிநாடு பறக்கிறார். பிறகு நடப்பது சினிமாவில் மட்டும் நடக்கக்கூடிய, 'இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே' என்று நாம் ஏங்க மட்டுமே கூடியவை.

மேலே படித்தது 'உறியடி 2' படத்தில் நிகழ்ந்தது. இதே காட்சி மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஆனால், அதன் கோரமும் அதனால் ஏற்பட்ட இழப்பும் இன்னும் மிக மிகப் பெரியது. 'உறியடி' படம் போபால் விஷவாயு விபத்தை அடிப்படையாக வைத்து முக்கிய காட்சிகளைக் கொண்டுள்ளது. படத்தில் அந்த ஆலையின் பெயர் 'பக்சினி'. போபாலில் இருந்தது 'யூனியன் கார்பைட்'. 1981ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது விஷவாயு கசிவுகள் நிகழ்ந்து அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 1984இல் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது. உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக இன்றும் அது கருதப்படுகிறது. அந்த ஆலை நிர்வாகத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு உடனே ஜாமீன் கிடைத்தது. அதன் பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை. விசாரணைக்கு வராமலேயே வயதாகி மறைந்தும் போனார். அப்போது நடந்தது காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி கொல்லப்பட்டிருந்த சமயம். தேர்தல் நேரம் வேறு. அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பால் வாரன் எளிதாக வெளிநாடு சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசும் பிற அரசுகளும் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க, தண்டிக்க, முயற்சி செய்துகொண்டே இருந்தன. இந்திய நியதிப்படி, எதுவும் நிகழவில்லை.


 

bhopal

போபால் கொடூரம்



போபாலில் வெளியான விஷவாயு மெத்தில் ஐஸோ சயனேட் (Methyl Isocyanate). 'உறியடி 2' படத்திலும் அதே வாயுதான் குறிப்பிடப்படும். போபாலில் இந்தக் கொடுமை நிகழ்ந்தபின் சுற்றுவட்டார மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆனால், எந்த மருத்துவருக்கும் வெளியானது என்ன வாயு, அதற்கு சரியான சிகிச்சை எது என்பது தெரியவில்லை. ஆலை நிர்வாகமும் அதை தெரிவிக்கவில்லை. இதனாலேயே உயிரிழப்பு அதிகமானது. அரசின் கணக்குப்படியே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 4000. இன்னும் அதிகம் என்கின்றன பிற ஆய்வுகள். பார்வை, கேட்கும் திறன் என பிற இழப்புகளை சந்தித்தவர்கள் லட்சக்கணக்கில். இன்று வரை தொடர்கின்றது அந்த விஷத்தின் தாக்கம். குற்றம் செய்தவரை தப்பிக்கவிட்டுவிட்டுத் தேடிய காங்கிரஸ் அரசின் போபால் சிறப்பைக் கூறியிருக்கும் அதே நேரம் தமிழகத்தில் நிகழ்ந்த ஸ்டெர்லைட் துயரையும் பேசுகிறது உறியடி 2.


 

sterlite gun shot

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு



படத்தில் வெளிநாடு தப்பிச்செல்லும் 'பக்சினி' ஆலை அதிபர் அங்கிருந்தபடி செங்கதிர்மலை மக்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிடுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ஒரு வீடியோ வெளியிட்டது நமக்கு நினைவுக்கு வருகிறது. மக்கள் நடத்தும் போராட்டமும் அதில் அரசும் போலீஸும் நடத்தும் தாக்குதல் தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டை  நினைவுபடுத்துகிறது. மிகப் பெரிய துயர் நிகழ்ந்த பிறகும் ஆலை விரிவாக்கத்திற்கு முயல்கிறார் ஆலை அதிபர். இதுவும் நாம் பார்க்காததல்ல. இறுதியாக தொழிலதிபர் தரும் பணத்துக்காக எதிரெதிர் கட்சிகளும் ஒன்றாக வேலை செய்வது மக்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கிறது. 'செங்கதிர்'மலை, 'லெனின்' விஜய் என பெயர்கள்... சாதிக் கட்சியின் செயல்பாடுகளைக் காட்டும் காட்சிகள்... தீர்வைத் தேடிப் பெற மக்களைத் தூண்டும் வசனங்கள் என நடப்பு அரசியலையும் அத்தனை கட்சிகளையும் ஓங்கி அடித்திருக்கிறது 'உறியடி2'. இத்தகைய ஒரு படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவும் இயக்கிய விஜய்குமாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.                                        

 

 

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.