Skip to main content

“சினிமாவை தியாகம் செய்து அமைச்சர் என்ற சுமையை ஏற்றுள்ளார் உதயநிதி...” - நாஞ்சில் சம்பத் பேச்சு

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

jlk

 

திமுக அரசில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உச்சக்கட்டமாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி முடித்துள்ளனர். அவர் வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் பேசியபோது, "ஜனநாயக நாட்டில் விமர்சனத்தை நிச்சயம் வரவேற்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனால், உதயநிதி அமைச்சராக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். இன்னும் சொல்லப்போனால் இதுவே காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டுள்ள முடிவாக நான் பார்க்கிறேன்.

 

உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகச் செய்யும் அரசியலைப் பார்க்க வேண்டும். இரண்டு தேர்தல்களில் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்து அதனை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளார். திருத்தணியில் தொடங்கி குமரிமுனை வரை மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளார்கள். அதையும் தாண்டி அவர் தமிழகத்தின் மிக முக்கியத் தயாரிப்பாளராக இருக்கிறார்.தமிழ் சினிமா உலகம் அவரை நம்பி உள்ளது. 6 படங்களில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், அமைச்சர் பொறுப்பேற்ற காரணத்தால் அத்தனை படங்களிலிருந்தும் அவர் விலகியுள்ளார். சினிமாவை தியாகம் செய்து அமைச்சர் என்ற சுமையை ஏற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

 

அறிஞர் அண்ணா துவங்கிய இந்த இயக்கத்தை இன்னும் அரை நூற்றாண்டு காலம் உயிர்ப்போடு வைத்திருக்கின்ற ஒரு தலைவன் தேவைப்படுகிறான். அந்த தலைவனாக உதயநிதி இருப்பார் என்று கட்சி தொண்டர்கள் விரும்புவதால் அவரை கட்சி அந்த பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பைக் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமிக்கா அமைச்சர் பொறுப்பை வழங்க முடியும். உதயநிதிக்கு கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது என்று அவரை விமர்சனம் செய்பவர்கள் தயவு செய்து கூற வேண்டும், தனிப்பட்ட எதிர்ப்பை முன்வைக்க வேண்டும் என்று அவர் மீது வெறுப்பை உமிழ்கிறார்களே தவிர வேறு எந்த நோக்கமும் அவர்களிடம் இல்லை" என்றார்.