Skip to main content

சபரிமலையில் நுழைவேன் என கூறிய 'த்ருப்தி தேசாய்' யார்?

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்த நாள்முதல் இன்றுவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது கேரள அரசியல்.  மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை திறக்கும் இந்த நேரத்தில், கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என கூறியிருக்கிறார் த்ருப்தி தேசாய் எனும் பெண்.  இப்படி கூறி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த த்ருப்தி தேசாய் யார்?

 

பெங்களூருவில் உள்ள நிபானி தாலுகாவில் பிறந்த இந்த பெண் தனது 8 வயதில் குடும்பத்துடன் புனேவில் குடியேறினார். பள்ளிப்படிப்பை முடித்தபின் புனே கல்லூரியில் சேர்ந்த இவர், பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டார். இந்நிலையில் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடிவு செய்த இந்த பெண் விகாஸ் சங் என்பவருடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு புனேவில் உள்ள குடிசைவாசிகளின்  மறுவாழ்விற்காக செயல்பட்டார். பிறகு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், 2010 ஆம் ஆண்டு ’பூமாதா இயக்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் 4000 பெண்களை உறுப்பினராக சேர்த்தார். 2011 ல் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு போராட்டத்திலும்  கலந்து கொண்டார். 

 

des

 

2013 ஆம் ஆண்டு சரத் பவாரின் குடும்பத்துக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பெண்களை சேர்த்துக்கொண்டு, பெண்களை உள்ளே அனுமதிக்காத சனி சிங்னாபூர் கோவிலுக்குள் நுழைந்தார். இதனை போலவே கோல்ஹாபுரில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலில் நுழைய முற்பட்டபொழுது அங்குள்ள அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். இதுபோல் மேலும் பல கோவில்களுக்குள் நுழைய முயற்சித்த அவர், அதே 2016 ல் ஹாஜி அலி தர்காவில் உள்ளே செல்ல முயற்சித்த பொழுது அங்கிருந்தவர்களின் போராட்டத்தால் உள்ளே செல்லாமல் மீண்டும் திரும்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தர்காவில் நுழைந்த அவர் அதன் உட்பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் சென்ற மாதம் உச்சநீதிமன்றம் சபரிமலை தீர்ப்பை அளித்த பின்பு, அதனை பின்பற்றி பெண்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்த, புனே வந்த பிரதமர் மோடியை அனுமதியின்றி நேரில் பார்க்க சென்றார். போலீசார் இவரை கைது செய்து, பிரதமர் சென்ற பின் விடுவித்தனர். த்ருப்தி தேசாய்க்கு திருமணமாகி, 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவரது குடும்பம் அவரது செயல்களுக்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறுகிறார்

 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.