Skip to main content

ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடந்த மர்மத்தீவு!

Published on 12/06/2018 | Edited on 13/06/2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூர் அருகே உள்ள செண்டோசா தீவில் ஒரு சொகுசு ஹோட்டலில் சந்தித்தனர். இந்தத் தீவின் சிறப்பம்சம் என்ன என்றால் மற்ற தீவுகளில் இருந்து ஒதுங்கியும், தனிமையாகவும் இருக்கிறது. செண்டோசா என்னும் இத்தீவுக்கு அமைதி என்று பொருள்படுகிறது. ஆனால், இந்தத் தீவு அரை நூற்றாண்டுக்கு முன்பு என்னவாக அழைக்கப்பட்டது தெரியுமா? 'புலாவ் பெலகங் மாடி' என்று அழைக்கப்பட்டது. அப்படியென்றால் மரணத்தீவாகும். பல நூற்றாண்டுகளாக இத்தீவு ஒரு மர்மமான ஒன்றாகவே இருந்து வந்தது. கொள்ளைக் கூட்டங்களுக்கு, உலகப் போருக்கு என எதிர்மறையாகவே இந்தத் தீவு பயன்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளின் பலவருட பகையைத் தீர்க்கும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பயன்பட உள்ளது.

 

sentosa island



வருடம் தோறும் 20 மில்லியன் சுற்றுலாவாசிகள் வந்து செல்லும் இந்தத் தீவு ஒரு காலத்தில் யாருமே போகாத மர்மத்தீவாக  இருந்திருக்கிறது. செண்டோசா தீவின் பழைய பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று கடற்கொள்ளை. 500 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்தத் தீவில் கடற்கொள்ளையர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். போரில் வீரமரணமடைந்த வீரர்களை மொத்தமாக இந்தத் தீவில் புதைத்ததும் இந்தத் தீவின் பழைய பெயருக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

 

sentosa



கதைகளாக சொல்லப்பட்ட இந்த விஷயங்களைத் தாண்டி வேறு விஷயங்களும் இருக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் மடிந்தனர். மர்மக் காய்ச்சல் ஒன்று தாக்கியதில் இந்தத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமானது. செண்டோசா தீவின் மரண ஓலம் ஓயவில்லை, இரண்டாம் உலகப் போரிலும் சிக்கிக்கொண்டது. 1942ஆம் ஆண்டு சிங்கப்பூர் என்ற நாடு ஜப்பானிடம் சிக்கொண்டபோது, ஆஸ்திரேலிய மற்றும் ஆங்கிலேயே போர் கைதிகளை அடைத்துவைக்க ஒரு சிறைச்சாலையாக பயன்பட்டுள்ளது இத்தீவு. ஜப்பானுக்கு எதிராக செயல்பட்ட சிங்கப்பூர் சீனர்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்கும் இடமாகவும் இது இருந்துள்ளது.

 

 


செண்டோசாவில் அழகிய இடமாக  இருப்பது சிலோசோ கோட்டை. அது இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரைத் தாக்க வருபவர்களை எதிர்கொண்டு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் இடமாக இருந்தது. அதை நினைவுபடுத்தும் வகையில் போரில் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

kim trump



இது அனைத்தும் 1970ஆம் ஆண்டு மாற ஆரம்பித்தது. சிங்கப்பூர் அரசாங்கம் தங்களின் நாட்டை ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக மாற்றிய போது இத்தீவையும் மாற்றி, செண்டோசா என்று அனைவரையும் கவர்வதுபோல் ஒரு பெயரை வைத்தனர். இப்பொழுது சுற்றுலாவுக்கு ஒரு இடமாக இருக்கிறது, சிங்கப்பூரின் கோடீஸ்வரர்கள் தங்குவதற்கும் விருப்பமான ஒரு இடமாக இருக்கிறது. இங்கு ஒரு வில்லாவின்  விலை 37 மில்லியன் டாலர்களில் இருந்து தொடங்குகிறது. கொடூரமாகவும், இருள்சூழ்ந்த இடமாகவும் இருந்த தீவில் தற்போது 17 நட்சத்திர ஹோட்டல்களும், கோல்ப் மைதானங்களும், சிங்கப்பூரின் யுனிவர்சல் ஸ்டுடியோவும்  இருக்கிறது.

 

 


இப்படி மர்மம் நிறைந்ததாக முன்பு இருந்த இந்தத் தீவில் உலகின் புரியாத புதிராக இருக்கும் இரண்டு தலைவர்கள் சந்தித்து இந்தத் தீவுக்கு இன்னொரு வரலாற்று சிறப்பைத் தந்திருக்கிறார்கள்.

 

 

 

 

 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.