Skip to main content

மெட்ரோ ரயில் காத்தாடுவது ஏன்???

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

சென்னையில் இதுவரை வெறிச்சோடி காணப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், கடந்த ஒரு வாரமாக திருவிழா கணக்காக மக்கள் வெள்ளம் தடம்புரண்டு ஓடுகிறது. 2015 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த ரயில் சேவை பச்சையப்பன் கல்லூரி முதல் ஏர்போர்ட் வரையும், இன்னொரு வழியில் கிண்டி முதல் ஏர்போர்ட் வரையிலும் சேவை இருந்தது. தற்போது சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை சேவை தொடரப்பட்டுள்ளது. இதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில்தான் ஐந்து நாட்களாக இலவச பயணம் அளித்து வந்தனர். அதனால்தான் கூட்டம் கோலாகலமாக இருந்திருக்கிறது. எப்போது இலவசம் ரத்து செய்யப்படுகிறதோ அப்போது லட்சக்கணக்கான கூட்டம், சொற்பமானதாக ஆகிவிடும் என்று அரசாங்கத்துக்கு தெரியாதா என்ன. இதற்கு எல்லாம் காரணம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மோசமான சேவை அல்ல, நல்ல சேவைக்காக அவர்கள் வசூல் செய்வதுதான்? நல்ல சேவை என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விலை நிர்ணயம் செய்துகொள்வது சிறிதும் ஏற்புடையதல்ல.

 

metro

 

 



இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், குர்காவன், ஜெய்ப்பூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் தொடங்கி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லக்னோ மற்றும் நொய்டா போன்ற ஏழு நகரங்களில் மெட்ரோ ரயில் நிலைய சேவை கட்டுமான பணிகளில் இருக்கிறது. மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப புரட்சிகளின் பரிணாம வளர்ச்சிகளில் ஒன்று, மற்ற நாடுகளில் புல்லட் ரயில்கள் வரை சென்றுவிட்ட போதிலும் மெட்ரோ ரயில்களுக்கான கட்டுமான பணிகளில்தான் இந்தியா இருக்கிறது. இருக்கின்ற நகரங்களில் லாபத்துடன்தான் செயல்படுகிறதா? மெட்ரோ ரயில் சேவை லாபத்துடன் செயல்படாததற்கு ஒரே காரணம் குறிப்பாக மும்பையிலும் சென்னையிலும் அதன் கட்டணங்கள்தான். 2015 ஆம் ஆண்டில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சேவையின் போதே எல்லோரையும் யோசிக்க வைத்தது இதன் கட்டணம் தான் ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையத்திற்கு பத்து ரூபாய் என்று வைத்து அதிகபட்ச கட்டணமாக நாற்பது ரூபாய் என்றனர். இது பலரால் விமர்சிக்கப்பட்டது. மூன்று லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று பார்க்கையில் 33,000 பேர்தான் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.
 

metro

 

 


தற்போது சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை சேவை நீடித்திருப்பதால் அதிகபட்ச கட்டணம் எழுபது ரூபாவாக உயர்ந்துள்ளது. இது மேலும் மக்களுக்கு பீதியையே அளிக்குமே தவிர, மெட்ரோ ரயிலை மக்கள் நாடுவதற்கு துணையாக ஒரு போதும் இருக்காது. இந்தியாவின் எல்லா நகரங்களிலும் இதே நிலைமைதான், ஆனால் சற்று பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது, சென்னையின் விலை பட்டியலையும் மும்பையின் அதிகபட்ச கட்டண விலையையும் ஒப்பிட்டு பார்க்கையில். ஆனால், கொல்கத்தா மட்டும்தான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே விலைபட்டியலை 5 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையே வைத்திருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஆரம்ப காலங்களில் லாபம் கிடைக்காது, இருந்தாலும் மக்களை மெட்ரோ ரயில் சேவையை அதிகமாக பயன்படுத்தவைக்க முடியும். அதன் பின்னர் சற்று விலைபட்டியலை கூட்டினால் கூட அது லாபத்தை அளிக்கும். டெல்லியில் வைத்திருக்கும் விலைப்பட்டியலில் மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே மூலமாகத்தான் விலைப்பட்டியல் நிர்ணயம் செய்திருக்கின்றனர். தமிழகத்தில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்பது மக்களின் மீதான அக்கறையின்மைதான் காரணமாக இருக்க முடியும்.  தனியார் நிறுவனம் போன்று லாபத்தை மட்டுமே நோக்கி, மக்களின் கவனத்தையும், மக்களுக்கான சேவையையும் செய்ய மறந்துவிடுகின்றனர். இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல, மக்களுக்கான அரசாங்கம் என்பதை மறவாதீர்கள்.       

 

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.