Skip to main content

குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை; வாஷிங் மிஷின் கொடுப்போம் என்கிறார்கள்! - உதயநிதி விமர்சனம்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

k


தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. திமுக, அதிமுக கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. திமுக தரப்பில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, வாரிசு அரசியல் என்று உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாம் தேர்தல் தொடர்பாகப் பேசி இருந்தோம். தற்போது நீங்கள், திமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். உங்கள் தந்தை ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்கள் கூட அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை ஏற்றுக்கொள்வார்கள். அண்ணா காலத்தில் ஆரம்பித்து 'மிசா' சிறை வாசத்தைப் பார்த்து, மேயராக, பிறகு அமைச்சராக இருந்துள்ளார். நீங்கள் இளைஞரணித் தலைவராகப் பொறுப்பேற்றீர்கள். தற்போது சட்டமன்ற வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். இது எதிர்க்கட்சிகள் உங்களை விமர்சனம் செய்ய ஏதுவாக இருப்பதாகப் பொதுவாகக் கூறுகிறார்கள். இதை எப்படிக் கடந்து செல்கிறீர்கள்?


தலைவர் தனது 14 வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கால் தடம் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடி ஏற்றியுள்ளார். நானும் சிறு வயதில் இருந்தே திமுகவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். தலைவர் கலைஞர் உடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளேன். அவர் பேசுவதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அப்படி வளர்ந்தவன் நான். அரசியல் எனக்கு புதிது அல்ல. அப்போது இந்த மாதிரி செல்ஃபோன்கள் கிடையாது, சமூக ஊடகங்கள் கிடையாது. தாத்தாவுக்காக சேப்பாக்கத்தில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்துள்ளேன். அப்பாவுக்காக ஆயிரம் விளக்கில் நிறைய முறை பிரச்சாரம் செய்துள்ளேன். எனவே அரசியலுக்கு அவர்கள் கூறுவது போன்ற நேற்றைக்கு வரவில்லை. தொடர்ந்து அரசியலில் தான் இருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பிறகு கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். பிறகு தலைவர் ஒருநாள் கூப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கு நீ செல்ல வேண்டும் என்று கூறினார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் என்னை அனுமதித்தார். இந்த கூட்டங்கள் என்னை அரசியல் ரீதியாகத் தயார்ப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது. 


கட்சி ரீதியாக நீங்கள் செய்வதைக் கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள். அதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? 


அவர்கள் கூறுவதற்கெல்லாம் நம்மால் பதில் அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்கிறார் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் நான் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அன்றே உங்களுக்கு எப்படி இந்த பொறுப்பை வழங்கினார்கள் என்று கேட்டார்கள். இது குடும்ப அரசியல் என்று கூறினார்கள். ஆமாம், என்னிடம் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு உண்மையாக உழைக்க எனக்கு நேரம் தர வேண்டும். அதன் பிறகு தவறு இருந்தால் என்னை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் தெரிவித்திருந்தேன். 


அனிதாவில் தொடங்கி சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. ஆனால், பிரச்சாரத்தில் இதை எல்லாம் தாண்டி பெண்களுக்குப் பணம் கொடுப்போம் போன்ற வாக்குறுதிகள் தான் பிரதானமாக இருக்கிறது. போராட்டங்களை பிரதானப்படுத்துவதை விட்டுவிட்டு இந்த மாதிரியான அறிவிப்புகள் அதிகம் பேசப்பட்டு வருவது ஏன்? 


அனைத்தையும் செய்கிறோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சிஏஏ சட்டம் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளோம். நான் பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறேன். குடிக்கத் தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் வாஷிங் மிஷினை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம். நாங்கள் இவ்வாறு சொன்னதும் அதை உடனடியாக ஜெராக்ஸ் காப்பி எடுத்து 1,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாய் என்று அறிவித்துள்ளார்கள். இந்த 10 வருடங்களாக ஏன் கொடுக்கவில்லை. அதைத்தான் நான் கேட்கிறேன். கரோனாவுக்காவது கொடுத்திருக்கலாமே? பொங்கலுக்கு கொடுத்துள்ளார்களே என்று சொல்கிறீர்கள். போன பொங்கலுக்கு இவர்கள் கொடுத்துள்ளார்களா? தீபாவளிக்குக் கொடுத்திருக்கலாமே, தேர்தல் வரப்போகிறது என்றதும் மக்களைப் பற்றி இவர்களுக்கு நினைவு வருகிறது. இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் இந்தத் தேர்தலில் எடுபடாது. நிச்சயம் அவர்கள் ஏமாந்து போவார்கள். 


 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.