Skip to main content

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழக முஸ்லிம்கள்... கவனத்தை ஈர்த்த சம்பவம்... ஆதரவு கொடுத்த எதிர்க்கட்சிகள்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றிரவே தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 

incident



சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமி ஆகியோர் அத்துமீறியதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்தே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த, கமிஷனரும் கூடுதல் கமிஷனரும் முயற்சியை மேற்கொண்டனர். அது பலனளிக்கவில்லை. இதற்கிடையில் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முடிவுசெய்தனர். போராட்டம் நடப்பது முடிவானதும் அதற்கான செயல்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின.

இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் ஒவ்வொரு தெருவிலும், சந்திலும் தகவல்தொடர்பு கண்ணிமைக்கும் வேகத்தில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு தங்களின் முழுமையான எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டுமென்ற வேகமே இதற்கான உந்துசக்தியாக அமைந்தது.

தமிழ்நாடு முழுக்க சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடிக்குமென உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி முன்கூட்டியே சொல்லியிருந்தார். அதனால், பிப்ரவரி 14-க்கு முன்பிருந்தே வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டங்களையும், மக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வந்த காவல்துறை, முற்றுகைப் போராட்டத்தை முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தவும், முடிந்தால் தடுத்துநிறுத்தவும் இன்னொரு பக்கம் செயல்பட்டு வந்தது. போராட்டக்காரர்களின் செல்போன், தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட் டன. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி பெரிய அளவுக்கு திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
 

incident



சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஆறு பேர், ரயில்வே பாதை உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பாதுகாக்க ஆறுபேர் நியமிக்கப்பட்டனர். சென்னை நகரத்தை மட்டும் சென்னை போலீஸ் கமிஷனரான ஏ.கே. விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் விடுவதென முடிவுசெய்யப்பட்டது. மற்ற இடங்களில் நடக்கிற போராட்டங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை டிஜி.பி.யான ஜே.கே. திரிபாதியும் இன்டலிஜன்ஸ் ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் எடுத்துக்கொண்டனர்.

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதியளிக்கவில்லை. அதேசமயம் இந்தப் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாதென உயர்நீதிமன்றத்திலும் வாராகி என்பவர் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு போராட்டத்துக்குத் தடைவிதித்தது. இருந்தபோதிலும் தடையை மீறி போராடுவதென போராட்டக் குழு முடிவுசெய்தது.


போராட்டத்துக்கு 23 இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவளிக்க முன்வந்தன. போராட்டத்தன்று சென்னையில் திரண்ட மக்கள் கூட்டம் காவல் துறையே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என பெருமளவில் திரண்டுவந்து கலந்துகொண்டது காவல்துறையை மட்டுமின்றி போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சிகளையும் ஆச்சரியப்பட வைத்தது.

எனினும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் சர்ச்சைக்கு ஆளான தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமியை போராட்டக்காரர்கள் காணநேர்ந்தால் உணர்ச்சிவசப்படக் கூடுமன்பதால் புத்திசாலித்தனமாக அவர்களைத் தவிர்த்திருந்தனர் காவல்துறை உயரதிகாரிகள்.

ஊர்வலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ள வஜ்ரா வாகனம், தண்ணீர் பாய்ச்சும் வாகனம், ஆயிரக்கணக்கான போலீசார் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருந்தது. காலை பத்து மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சேப்பாக்கம் நோக்கி பேரணி நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் போராட்டக்காரர்கள் கட்டுப்பாடாக நடந்துகொண்டனர்.


போராட்டக்காரர்கள் பேரணியில் முழுமையான ஒழுங்கைக் கடைப்பிடித்தனர். தேசியக் கொடியைத் தவிர வேறந்த கட்சிக் கொடியையும் ஊர்வலத்தில் கொண்டுவரவில்லை. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு, பேரணியில் நடந்து வருபவர்களுக்கு நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, போராட்டத்தின்போது போடப்பட்ட குப்பைகளை அவர்களே பொறுக்கி ஒரு முன்னுதாரணமாக நடந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக நடந்த உரையிலும் யாரும் எதிர்மறையாக, சர்ச்சையாகப் பேசாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டமென அறிவிக்கப்பட்டாலும், நீதிமன்றம் தடைவிதித்ததால் பேரணியோடு முடித்துக்கொண்டனர் போராட்டக் குழுவினர். முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்தனர். தமிழகத்தின் பல நகரங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தனர் தமிழக முஸ்லிம்கள். 

 

அருண்பாண்டியன்

படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்

 

 

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.