Skip to main content

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் ஸ்டாலின் – நாஞ்சில் சம்பத் நம்பிக்கை!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
Stalin

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இணையதளம் கேட்டது. அதற்கு அவர் கூறியது…

 

அண்ணா உருவாக்கிய அறிவு இயக்கத்திற்கு, கலைஞருக்கு பிறகு தலைவராகியிருக்கின்ற ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஸ்டாலின் கோடி நிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிறவர். வியப்பின் புதல்வராக எங்கள் கண்ணுக்குத் தெரிகிறவர். 21ஆம் நூற்றாண்டின் நாசகார பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு கனவு காணுகிற நேரத்தில் ஸ்டாலின் திமுக தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். 

 

 

 

கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு நாடு அண்ணன் ஸ்டாலினிடத்தில் நிரம்ப எதிர்பார்க்கிறது. திமுகவில் அங்கம் பெற்றிருப்பவர்கள் எதிர்பார்க்கிற எதிர்பார்ப்பைவிட தீர்ந்துபோகாத திராவிட இயக்கத்தின் மீது தீராத காதல் உள்ளவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

 

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று கச்சை கட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிடலாம் என்று கருதுகின்ற பயங்கரவாத சக்திகள் இந்த மண்ணில் எந்த நாளிலும் காலூன்ற முடியாது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் அண்ணன் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

 

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய துணைக் கண்டத்தில், இன்றைக்கு திமுகவின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், இனிமேல் அந்த இடத்தை இட்டு நிரப்ப வேண்டிய வரலாற்று கடமை ஸ்டாலினுக்கு முன் காத்திருக்கிறது.

 

தமிழகத்தினுடைய உரிமைகளையெல்லாம் பட்டப்பகலில் பறிகொடுக்கக்கூடிய பாவிகளின் ஆட்சியை எப்போது விரட்டுவோம் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிற நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும் ஸ்டாலின் முன் இருக்கிறது.

nanjil sambath

ஏற்கனவே திமுக இளைஞரணி செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர். மிசா என்கிற அக்னியாற்றில் குளித்தெழுந்தவர். ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சென்னை மாநகராட்சி மன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்கிற மதிப்பை பெற்றவர், அதையும் தாண்டி திமுகவின் பொருளாளர், கலைஞர் முதல் அமைச்சராக இருந்த நேரத்தில் துணை முதல் அமைச்சர் என்கிற பொறுப்புகளையெல்லாம் அலங்கரித்த அவருடைய பட்டறிவு, அவருடைய தந்தை பின்பற்றிய பகுத்தறிவு எல்லாவற்றையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுடைய கனவுகளுக்கு சிறகுகள் தயாரிக்கின்ற கடமையில் அவர் கருமமே கண்ணாக இருந்து கடமையாற்ற வேண்டும் என்று உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

திமுக என்கிற அறிவு இயக்கம் அண்ணா உருவாக்கிய ஆயிரங்காலத்து பயிருக்கு தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கின்ற தகுதி அவருக்கு தானாக வந்துவிடவில்லை. அவருடைய விலைமதிக்க முடியாத உழைப்பு அவரை அந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

 

 

 

ஒரு மிகப்பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறோம் என்கிற பொறுப்புணர்வை நெஞ்சில் சுமந்துகொண்டு கழகத்தை கட்டிக்காக்கின்ற கடமை மட்டுமல்லாமல் கன்னித் தமிழகத்தை பாவிகளின் பிடியில் சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பட்டப் பகலை பட்டா போடுகின்ற ஈனப்பிறவிகளிடம் இருந்து இன்ப தமிழ்நாட்டை மீட்டுத்தரவேண்டிய கடமையும் ஸ்டாலினுக்கு முன் இருக்கிறது.

 

ஏதோ தமிழ்நாடு திறந்து கிடக்கிறது என்று கருதி, திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஆளத்துடிக்கின்ற அந்த செல்லுலாய்ட் பொம்மைகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் நிரூபிக்க வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு முன் இருக்கிறது.

 

ஆகவே ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய பெரும் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று இருந்ததைவிட இன்று, இன்று இருப்பதைவிட நாளை மிக நன்று என்று சொல்லத்தகுந்த வகையில் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து தருகின்ற கடமையில் அவர் வாகைசூட வேண்டும் என்று வண்ணத் தமிழில் எண்ணெமெல்லாம் இனிக்க வாழ்த்தி மகிழ்கிறேன் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.