Skip to main content

"அது மட்டும் நடக்காட்டி, கரடிக்கும் சோகம் எங்களுக்கும் சோகம்" - கவலையில் வீட்டு உரிமையாளர்  

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இன்று காலை ஒரு வீட்டின் இரும்புக் கதவில் கரடிக்குட்டி ஒன்று மாட்டிக்கொண்டது. அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் தாய்க்கரடி தவித்த சம்பவம் அதைக் கண்டவர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த சம்பவம் குறித்து கரடி மாட்டிக்கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர் தீபன் பகிர்ந்தது...

 

 


"காலை சுமார் ஏழரை மணிபோல எங்க வீட்டு நாய் சத்தமா குரைச்சுக்கிட்டே இருந்தது. ரொம்ப நேரமா குரைக்கவும் என்னவென்று பார்க்கப் போனோம். பார்த்தா எங்க வீட்டு கேட் பக்கத்துல மூணு கரடிகள் இருந்துச்சு. எனக்கு அப்படியே அதிர்ச்சியாச்சு. சுதாரிச்சுக்கிட்டு, வீட்ல மத்தவங்கள கூப்பிட்டேன். ஆள் நடமாட்டம் தெரியவும் பெரிய கரடியும் ஒரு குட்டிக் கரடியும் கேட்டைத் தாண்டி குதிச்சு வீட்டுக்கு வெளியே போயிருச்சு. ஒரு குட்டிக் கரடி மட்டும் கேட்டில் இருந்த ஓட்டை வழியே போக முயற்சி பண்ணுச்சு. ஓட்டை சின்னதா இருந்ததால் மாட்டிக்குச்சு. மாட்டிகிட்டு வலியில் துடிக்க ஆரம்பிச்சுருச்சு. ஒரே சத்தம். அது மாட்டிக்கிட்டதைப் பார்த்து வெளியே தாய்க் கரடி தவிக்குது. எப்படியாவது காப்பாத்த முடியாதான்னு கேட்கிட்ட போய் முட்டுது. எங்களுக்கு இதைப் பார்த்து மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அதே நேரம், பக்கத்துல போகவும் பயம். கரடி தாக்கிருச்சுன்னா என்ன பண்றது?

 

 

karadi 1

 

karadi 2

 

தவிக்கும் பெரிய கரடி

 

karadi 3

 

 

karadi 5

 

karadi7

 

karadi 8

 

விடுவிக்கப்பட்ட கரடிக்குட்டி

 

வனத்துறைக்கு முன்னாடியே தகவல் கொடுத்துட்டோம். ஜீப்ல வந்தாங்க, வந்தவுடன் 'பெரிய கரடியை விரட்டினாத்தான் இதைக் காப்பாத்த முடியும், இல்லைன்னா குட்டியை நாம தாக்குறோம்னு நினைச்சு அது ஏதாவது பண்ணும்' என்பதால் தீப்பந்தம் கொளுத்தி பெரிய கரடியையும் அந்த இன்னொரு குட்டியையும் விரட்டினாங்க. முதல்ல போகாம அங்கேயே இருந்த கரடிகள் தீப்பந்தத்தைப் பார்த்து பயந்து காட்டுக்குள் போச்சு. வனத்துறை உடனே ஒரு கம்பியைப் பயன்படுத்தி குட்டிக் கரடி அதுவா கழுத்தை பின்னாடி இழுக்குமான்னு பாத்தாங்க. அதால வெளியே வரமுடில. அப்புறம் கேட்டில் இருந்த கம்பியை அறுத்து கரடியை விடுவிச்சாங்க. விட்டவுடன் துள்ளிக்குதிச்சு பின்பக்கம் ஓடுச்சு கரடிக்குட்டி. பின்னர் கரடிக்குட்டியை வனத்துறையே பிடிச்சுட்டுப் போய் காட்டில் விட்டுட்டாங்க. நாங்க எல்லோரும் அவரவர் வேலையைப் பாக்கப் போய்ட்டோம்.

 

 


அதுக்கப்புறம் நடந்ததுதான் ரொம்ப கஷ்டம். ரெண்டு, மூணு மணிநேரம் கழிச்சு குட்டிக் கரடியைத் தேடி பெரிய கரடி வந்தது, கொஞ்ச நேரம் எங்க தெருவில் சுற்றிவிட்டு சோகமா போச்சு. அது குட்டியைப் பாக்காம இந்த ஏரியாவை விட்டு போகுமான்னு தெரியல. நாங்க இதுவரைக்கும் கரடி இப்படி தெருவுக்குள் வந்து பாத்ததேயில்லை. இன்னைக்கு இப்படி ஒரு சம்பவம் ஆயிடுச்சு. குட்டியைப் பார்த்துருச்சுன்னா பரவாயில்ல. இல்லைனா கரடிக்கும் சோகம், எங்களுக்கும் சோகம்" என்று கவலையாகக் கூறினார்.         

 

 

 

 

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.