Skip to main content

'மீம்ஸ்'களால் வறுபடும் சேலம் கலெக்டர் ரோகிணி!

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

 

 

 

'அறம்' படத்தில் ரீல் கலெக்டர் என்றாலும் ரியல் ஆக வாழ்ந்தார் நயன்தாரா. ஆனால், நிஜ வாழ்வில் ரீல் கலெக்டராக நித்தம் நித்தம் நடிக்கிறார் ரியல் கலெக்டர் ரோகிணி என சேலம் மாவட்ட ஆட்சியர் பற்றி சமூக ஊடகங்களில் கேலி, கிண்டலான மீம்ஸ்கள் உலா வருகின்றன. 
 

சேலம் மாவட்டத்தில் 1790ம் ஆண்டில் இருந்து 170 ஆட்சியர்கள் பதவி வகித்துள்ளனர். 171வது ஆட்சியராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே, கடந்த 28.8.2017ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்தான், மாங்கனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்கூட. 
 

வாழ்த்துச் சொல்ல வருபவர்கள் பரிசுப்பொருள்களோ, சால்வைகளோ கொண்டு வர வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்ட ஆட்சியர் ரோகிணி, அதே நாளில் கோரிக்கை மனுக்களுடன் வந்த மாற்றுத்திறனாளிகளிடம் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டதும், முதியவர்களின் தலையில் கைவைத்து வாஞ்சையுடன் விசாரித்ததும் பெரிதும் கவனம் ஈர்த்தது.

 

collector-story-meme


 

அவர் பொறுப்பேற்ற நேரத்தில், ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய தருணம். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் நேரடி ஆய்வு, கொசுப்புழுக்களை ஒழிக்காமல் கவனக்குறைவாக இருந்த மருத்துவமனைகளுக்கு அபராதம் என அதிரடித்தார்.  
 

 

 

ஆசிரியர்கள் போராட்டம் நடந்த நேரம் அது. ஆய்வுப்பணிக்காகச் சென்றவர், அப்பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளிக்கு வாகனத்தை செலுத்த உத்தரவிடுகிறார். ஆசிரியர்கள் இல்லாததால், அவரே குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் ஒருநாள், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார். இப்படி செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் ஆட்சியர் ரோகிணியின் பெயர் ஆஹா... ஓஹோ... என்று பரவியது.

 

collector-story-meme


 

''அட... இதெல்லாம் ச்சும்மா பப்ளிசிட்டி ஸ்டன்டுங்க. இந்த பத்திரிகை, டி.வி.க்காரங்க எல்லாம் போட்டோ, வீடியோ எடுத்துப் போட மாட்டோம்னு சொல்லிப் பாருங்க. அப்புறம் அந்தம்மா எங்கேயுமே போகாது. வாரம் வாரந்தான் மனு வாங்கறாங்க. அந்த மனுக்கள் மேல எல்லாம்  இதுவரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க?,'' என்று நொந்துபோய் பேசும் குரல்களும் காலப்போக்கில் பரவலாக ஒலிக்கத் தொடங்கின.
 

அவரை உயர்த்திப்பிடிக்கும் புகைப்படங்கள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் கேலி, கிண்டல் செய்து பரப்பப்படும் மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரல் ஆகின்றன. தமிழ்நாட்டில் வேறெந்த ஆட்சியர்கள் மீதும் இத்தகைய மீம்ஸ் சீண்டல்கள் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சில திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுவதால் அவரை 'மார்க்கெட்டிங் மகாராணி' என்றும், அதீத விளம்பர வெளிச்சத்தை குறிப்பிட்டு 'ஸ்கிரீன் சுந்தரி' என்றும் கேலி செய்கின்றனர்.

 

collector-story-meme


 

''தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டுவது, தண்ணீரில் டெங்கு கொசுக்கள் இருக்கிறதா என பட்டப்பகலிலேயே டார்ச் லைட் அடித்துப் பார்ப்பது, டெங்கு  கசாயம் கொடுப்பது, கண் பரிசோதனை செய்வது என ஆட்சியர் ரோகிணி, தனிநபர் நாயக  பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கிறார். இதைத்தான் சினிமாக்காரர்கள் செய்கின்றனர். 
 

இப்படி எல்லாம் ஆட்சியர் செய்வதை ஊடகங்கள் பெருமையாக வெளியிடுகிறதா அல்லது அப்படி வெளியிட வேண்டும் என்பதற்காகவே போட்டோகிராபர், வீடியோ கேமராமேன்களை கூடவே அழைத்துச் செல்கிறாரா என்ற சந்தேகம்கூட உண்டு. 

 

collector-story-meme


 

கழிப்பறை கட்டுவதற்காக குழி தோண்டுவதுபோல ஆட்சியர் ரோகிணி கடப்பாரையுடன் போஸ்  கொடுத்தார். துப்புரவுத் தொழிலாளர்கள் இன்றும் எந்தவித கையுறைகளோ, கம் பூட்ஸ் உபகரணங்களோ இல்லாமல்தான் சாக்கடைக் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது. அதை மாற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியர், குழி தோண்டும்போது கைகளுக்கு உறை போட்டுக்கொண்டு தோண்டுகிறார். 
 

அவர் தன் சுத்தத்தை காத்துக்கொள்வதில் ஆட்சேபணை இல்லை. அப்படி எனில், அசுத்தமான வாழ்வில் சிக்கிக்தவிக்கும் வெகுசன மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

 

collector-story-meme


 

பிரதமர் நரேந்திரமோடியும், ஆளுநர் பன்வாரிலாலும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையின்போது சுத்தமான இடத்திலேயே மீண்டும் சுத்தப்படுத்துவதுபோல ஆட்சியர் ரோகிணியும், அரசியல்வாதிகளைப்போல குப்பை இல்லாத இடத்தில் குப்பை கூட்டுவதுபோல போஸ் கொடுக்கிறார்... குழி தோண்டுகிறார். 
 

 

 

 

இன்றைக்கும் வாழப்பாடி அருகே கீரிப்பட்டி கிராமத்தில் தலித்துகளுக்கு சலூன் கடைகளில் முடி வெட்ட மறுக்கப்படும் அவலமும், திரவுபதி அம்மன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட முடியாத கேவலமான சூழலும் நிலவுகிறது. அதையெல்லாம் போக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் எந்த நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை,'' என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம்.


கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்தார். இப்போது அவர்தான் தமிழக சுகாதாரத்துறை செயலராகவும் இருக்கிறார். அவர் வீட்டில் இருந்தே உள்ளூர் செய்தி சேனல்களின் வீடியோ கேமராமேன்களை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு பப்ளிசிட்டி பிரியர். 
 

ஆட்சியர் ரோகிணியையும் அவருடன் ஒப்பிட்டுப் பேசுவதோடு, ராதாகிருஷ்ணனை மிஞ்சிவிட்டார் என்றும் பகடி செய்கின்றனர். 
 

முன்பு நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த சகாயம், கிராமத்தில் இரவு தங்கல் என்ற திட்டத்தை அறிவித்தபோதும், விஏஓக்கள் அவரவர்க்கு உரிய கிராமத்தில்தான் வீடு எடுத்து தங்கியிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளை அமல்படுத்தியபோது கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அரசியல்வாதிகளுடன் பெரும்பாலும் சமரசமற்ற போக்கைக் கடைப்பிடித்ததால்தான் இருபதுக்கும் மேற்பட்ட தடவை இடமாறுதலுக்கு ஆளானார். 
 

அவருக்கும்கூட ஊடக வெளிச்சம் இருந்தது. ஆனால், கிரானைட் கொள்ளையர்களையும், தண்ணீர் திருட்டுக் கும்பலையும் ஊருக்கு அம்பலப்படுத்தியதில் ஆட்சியருக்கான முழு அதிகாரத்தையும் சமரசமின்றி பயன்படுத்தினார். அதனால்தான் அவர் இப்போதும் மக்களுக்கான அதிகாரியாக கவனிக்கப்படுகிறார். 

 

collector-story-meme


அதேநேரம், ஆட்சியர் ரோகிணி மீது திட்டமிட்டே சில காட்சி மற்றும் அச்சு ஊடகங்களால் வெற்று விளம்பரம் கட்டமைக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 
 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தை அடுத்த குப்பன்கரடு பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு ஆட்சியர் ரோகிணி சென்றிருந்தார். அப்பாவி மக்கள் கலெக்டரைக்கூட கடவுள்போலத்தானே பாவிப்பார்கள்? அங்கும் அப்படித்தான்.
 

 

 

வீட்டு மனைப்பட்டா, குடிநீர், சாலை, பொதுக்கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என்றார். அப்போது நரிக்குறவ இன குழந்தையை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்ததை எல்லாம் ஒரு காட்சி ஊடகம் பெருமையாக செய்தி வெளியிட்டது. 

 

collector-story-meme


 

ஆனால், ஆறு மாதங்களுக்கு மேலாகியும் நரிக்குறவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட இன்று வரை நிறைவேற்றித்தரப்படவில்லை. எனில், இந்த வெற்று ஆரவாரம் யாருக்காக? எதற்காக திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது? 'ரோகிணி ஃபார் சிஎம்' என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்யப்படும் வரை அவருடைய நாயக பிம்பம் உயர்த்திப்பிடிக்கப்படுவது ஏன்?
 

நரிக்குறவர் காலனிக்கு மே 16, 2018 அன்று நேரில் சென்றிருந்தோம். முன்பு ஆட்சியர் சென்றிருந்தபோது கோரிக்கை வைத்த அதே மக்கள்தான் அவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். 
 

நரிக்குறவர்கள் காலனி தலைவர் சங்கரின் மனைவி லட்சுமி, ''போன வருஷம் ஐப்பசி மாசம் கலெக்டரம்மா வந்தாங்க. எல்லாமே செஞ்சு தாரோம்னு சொன்னாங்க. ஆனா எதுவும் செஞ்சபாடு இல்லீங்க. 12 லட்சம் போட்டு பாத்ரூமு கட்டிக் கொடுத்தாங்க. ஆனா அதுக்கு தண்ணீ வசதி இல்ல. டீச்சருங்க எங்க புள்ளைங்கள பாத்து, உங்க தாய் தகப்பன் தண்ணீக்கூட ஊத்தி அனுப்ப மாட்டாங்களானு கேட்கறாங்க. தண்ணீ வசதி இருந்தாதானே பிள்ளைங்கள குளிக்க வெச்சு பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும்? 

 

collector-story-meme


 

ரோடு போட்டுத்தர்றேனு சொன்னாங்க. ஜல்லி கல்லு கொட்டினதோட விட்டுட்டுப் போயிட்டாங்க. இங்க பாறாங்கல்லு கிடக்கு. அதை அப்புறப்படுத்தற மாதிரி அதிகாரிங்க போட்டோ எடுத்துட்டு போறாங்களே ஒழிய, ஒரு வேலையும் நடந்தபாடு இல்ல. எங்க கோரிக்கை மனுவையெல்லாம் சுண்டல் கட்டறதுக்கு அனுப்பிடறாங்களா இல்ல குப்பையில போட்டுடறாங்கனே தெரியல,''  என்றார்.
 

ரமேஷ், சுமதி ஆகியோர், ''கலெக்டரம்மா வந்தாங்க... பார்த்தாங்க... பண்ணித்தர்றேனு சொன்னாங்க. அதுக்கப்புறம் வரவே இல்ல. சமையல் செய்யக்கூட தண்ணீ வசதி இல்ல. மழை வரும்போது தண்ணீ பிடிச்சிக்கிறோம். அதைத்தான் குடிக்கிறோம். நாங்க அஞ்சு புள்ளைங்களோட இந்த ஒழுகுற குடிசையிலதான் இருக்கோம். ரோடு போடுறோம்னு சொல்லிட்டு வெறும் கல்லு மட்டும் கொட்டிட்டு போய்ட்டாங்க. பாத்ரூம் கட்டிக்கொடுத்தாங்க. ஒர்ரே ஒர்ரு நாளுதான் ஒண்ணுக்கு போனோம். அன்னிக்கு புடிச்சது தரித்திரியம்... அடுத்த நாளே தண்ணீ வரல,'' என்றனர்.

 

collector-story-meme


 

அவர்களிடம் தூய்மை இந்தியா திட்டம் பற்றி தெரியுமா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ''அதெல்லாம் தெரியாதுங்க. படிச்சவங்களுக்குதான் அதெல்லாம் தெரியும். நாங்க இங்க உள்ள ஏரிக்கரையிலதான் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவோம்,'' என்றனர்.
 

 

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட விவசாயிகளை பெரிதும் பாதிக்கக்கூடிய எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களில் ஆட்சியர் ரோகிணியின் பெயர் ரொம்பவே கெட்டுப்போய் கிடப்பதாக பலரும் கூறுகின்றனர். மக்களுக்காகத்தான் நீதி பரிபாலனங்களும், அரசின் அங்கங்களும் இருக்கின்றனவே தவிர, அவர்களை அழித்தொழித்துவிட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவது முறையாகாது என்கிறார்கள் விவசாயிகள்.

 

collector-story-meme


 

சூழலியல் செயற்பாட்டாளரான பியூஷ் மானுஷ், ஆட்சியர் ரோகிணி மீது காத்திரமான சில குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
 

''ஆட்சியர் ரோகிணி, குறிப்பிட்ட சிலர் பலன் அடைவதற்காக மோசமான திட்டங்களை செயல்படுத்துகிறார். சேலத்தில் விமான நிலையம் என்பது தோல்வியடைந்த திட்டம். விமான நிலையம் விரிவாக்கத்தால் எந்தவொரு நன்மையும் இல்லை. 
 

கஞ்சமலை அடிவாரத்தில் 100 ஏக்கர் நிலத்தில் இரும்புத்தாது எடுக்கும் ஆலை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஜிண்டால், திரிவேணி போன்ற நிறுவனங்கள், இன்னும் சில பணக்காரர்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தவே ரோகிணியை இங்கு கலெக்டராக கொண்டு வந்துள்ளனர். 
 

ஒருவேளை, மக்களுக்கான கலெக்டர் என்றால் அதற்கான வேலைகள் நிறைய இருக்கின்றன. 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேக்னசைட் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்டெடுக்கவில்லை. ஓடைகள் சீரமைக்கப்படவில்லை. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நாறிக்கிடக்கிறது. சுற்றுச்சூழல் பராமரிப்பில் பெரிய ஜீரோ. பிளாஸ்டிக் ஒழிப்பில் பின்னடைவு. 
 

சும்மா பெயரளவுக்கான, ஃபோட்டோ எடுத்துப் போடுவதற்கான வேலைகளைத்தான் செய்து வருகிறார். எட்டுவழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். மத்திய அரசுக்காக செயல்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுகிறார். அவர் சொல்வதற்கேற்ப இந்தம்மா இயங்குகிறார். அந்த திட்டம், பெரிய அபாயமான திட்டம். 
 

இந்த திட்டம் ஜப்பான் நாட்டு அரசுக்காக கொண்டு வரப்படும் திட்டம். அவர்களுக்கு தேவை எல்லாம் இங்குள்ள மின்சாரம், நிலம் ஆகியவைதான். நம்ம நிலத்தை பிடுங்கிவிட்டு, நம்மையே அகதியாக்கி விடும் திட்டம். அரசு அதிகாரிகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஜையின்ஜப்பான் அடிக்கும் நிலை வந்துவிட்டது. 
 

 

 

மகரபூஷணம், சம்பத், ரோகிணி என சேலத்திற்கு வரும் கலெக்டர்கள் எல்லோரும் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்போலதான் செயல்படுகின்றனர். சேலம் மக்களுக்கும் இது பழகிவிட்டது. எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவது குறித்து மக்களிடம் கருத்து கேட்கவே இல்லை. அரசு கேட்கிறது. நாங்கள் செய்து தருகிறோம் என்று கலெக்டர் பேசுகிறார். ரோகிணி பற்றிய பிம்பம் டக்குனு உடைந்து போச்சு. அது ஒரு வகையில் நல்ல விஷயம். அவர் ஒரு மீம்ஸ் கலெக்டர்,'' என்கிறார் பியூஷ் மானுஷ். 
 

விளம்பர பிரியராக இருந்தாலும், முன்னாள் ஆட்சியர்கள் மீது சகட்டுமேனிக்கு எழுந்த கையூட்டு புகார்கள் போல ரோகிணி மீது இல்லாதது சற்றே ஆறுதல். 
 

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர், ''முதன்முதலில் கலெக்டர் ஆகியிருக்கிறார். சின்ன வயது. அதனால் விளம்பர வெளிச்சத்தை எதிர்பார்ப்பது இயல்பாகவே இருக்கும். எங்களுக்குத் தெரிந்து அவர் கையூட்டு பெற்றதாக தெரியவில்லை. ஆனால், அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை அவர் கண்டுகொள்வதில்லை,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். 
 

collector-story-meme


 

 

 

முதல்வர் மனம் கோணாமல் நடந்து கொள்வதால் அல்லது நைச்சியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதாலோதான் ரோகிணிக்கு சிறந்த ஆட்சியருக்கான விருதும் வழங்கப்பட்டதாகச் சிலர் சொல்கின்றனர்.
 

தனிநபர் ஆராதனைகள் என்பது சினிமாவின் தாக்கத்தால் விளைவது. இன்றைக்கும் சாமானியர்கள் கலெக்டர் என்பவரை கடவுளாகவே பார்க்கின்றனர். கோரிக்கைகளை ஏற்கும் கடவுள் என்றைக்குமே நிறைவேற்றியது இல்லை என்பதுதான் அறிவியல்பூர்வமான சான்று. அதை பகுத்துப்பார்க்காத மக்களும், நாயக பிம்பத்திற்கு முட்டுக்கொடுக்கும் ஊடகங்களும் இருக்கும்வரை ரோகிணிகள் காட்டில் அடைமழைதான்! 
 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.