Skip to main content

"இப்படித்தான் எங்களிடமும் சொன்னார்கள்..." - சாலைக்காக நிலத்தை இழந்து பணமும் பெறாத மக்கள்!

Published on 07/07/2018 | Edited on 13/07/2018

"அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறோம். ஐந்து தலைமுறைக்கு உங்கள் சந்ததிகள் உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று வானளவு வாக்குறுதிகளை, எட்டுவழிச் சாலைக்காக விவசாயிகளிடம் வாரி வாரி இறைக்கிறார்கள்.

 

villagers

 

இப்படிப்பட்ட திட்டங்களுக்கு இதற்கு முன்னாலும், ஆண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படித்தான் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

நெய்வேலி அனல்மின்நிலையப் பணிகள் 1955-ல் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. அதற்காக தொன்மையான ஐம்பது கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கருப்பட்டி வாக்குறுதிகளை அளித்துக் கட்டாயமாக கையகப்படுத்திக் கொண்டது அரசு.

50 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசன்பட்டு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் நம்மிடம், ""ஏக்கர் 200 ரூபாய், 500 ரூபாய் என்று வாங்கினார்கள். மாற்று இடம், அதற்குப் பட்டா, என்.எல்.சி.யில் வேலை, புதிய வீடு, அத்தனை அடிப்படை வசதிகள் என்றெல்லாம் கூறி எங்க கிராமத்து மக்களை லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் புதுக்கூரைப்பட்டு விஜயமாநகரம் காட்டுப் பகுதியில் கொட்டிவிட்டுப் போனார்கள். ஆயிற்று 60 வருட மாகிவிட்டன. இன்னும் பட்டா கிடைக்கவில்லை. நிலம் கொடுத்த வீட்டுப் பிள்ளைகள் 15 ஆயிரம் பேர் என்.எல்.சி.யில் வேலை கேட்டு காத்துக் கிடக்கிறார்கள்.

 

 


ஒரு ஏக்கர் நிலத்தில் 50 கோடி மதிப்புள்ள நிலக்கரியை வெட்டியெடுக்கும் என்.எல்.சி., நிலம் கொடுத்தவன் நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கினாலும் மதிப்பதில்லை. குஜராத்காரனுக்கும் பீகார்காரனுக்கும் வேலை கொடுக்கிறது என்.எல்.சி. ஆனால் நாங்களோ... பொன் விளையும் பூமியை கொடுத்துவிட்டு வறுமைப்பாட்டில் தவிக்கிறோம்'' பல்லாயிரம் விவசாயிகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் தரமான நிலக்கரி புதையுண்டிருக்கிறது என 1991இல் கண்டறிந்தது ஓ.என்.ஜி.சி. அந்த நிலக்கரியை தோண்டியெடுத்து ஜெயங்கொண்டத்தில் அனல்மின்நிலையம் அமைக்கப் போகிறோம் என்று விவசாயிகளிடம் இருந்து, ஏக்கருக்கு வெறும் 17 ஆயிரம் வீதம் கொடுத்து வேளாண்மை நிலங்களை வாங்கியது ஜெ. அரசு.

 

 


அதற்காக, அரசின் தொழில் முதலீட்டுக் கழகம் ஜெயங்கொண்டத்தில் அலுவலகம் திறந்தது. அரசு வாகனங்கள் புழுதி பறக்க பாய்ந்தன. தனித்தாசில்தார்களும், அதிகாரிகளும் வந்தனர்; வந்து?

""அதிக இழப்பீட்டுத் தொகை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். மாற்றுக் குடியிருப்பு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று ஆயிர மாயிரம் வாக்குறுதிகளைச் சொன்னார்கள். சொல்லி ஜெயங்கொண்டம், தண்டலை, கல்லாத்தூர், மேலூர், தேவனூர், வாரியங்காவல், இலையூர், சூரியமணல், துவரங்குறிச்சி, தேவமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலத்தை வாங்கினர். சொன்னதுபோல, இழப்பீடு தரவில்லை. நிலக்கரி யும் தோண்டவில்லை. 20 வருடமாக நிலத்தை இழந்து தவிக்கிறோம். ஏமாற்றிவிட்டது அரசு.

ஏழாயிரம் விவசாயிகள் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டோம். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஜெயங்கொண்டத்தில் இரண்டு நீதிமன்றங்களை அமைத்தது. 30 விழுக்காடு அதிகத் தொகை தர வேண்டும். ஒவ்வொரு முந்திரி மரத்திற்கும் 8000 ரூபாய் எனக் கணக்கிட்டு தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதைத் தரமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது அரசு. ஜெயங்கொண்டத்தில் நிலக்கரித் திட்டத்தை நாங்கள் ஏற்று நடத்த மாட்டோம் என்று கைவிரித்து விட்டது என்.எல்.சி. நாங்கள் எடுத்து நடத்துவோம். அதற்காக 1000 கோடி ஒதுக்குகிறேன் என்றார் ஜெயலலிதா. ஒன்றும் நடக்கவில்லை. எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பித் தாருங்கள் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் ஜெயங்கொண்டம் விவசாயியும் வழக்கறிஞருமான ஜெயக்குமார்.

villagersசென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்காக தங்கள் நிலத்தையும் வாழ்வையும் இழக்கின்ற மக்களே. உளுந்தூர்பேட்டை-சேலம் நான்குவழிச் சாலைக்காக நிலத்தைக் கொடுத்துவிட்டு, வெம்பி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்து விவசாயி கோபாலகிருஷ்ணனின் குமுறலைக் கேளுங்கள்.

 

 


""இந்தச் சாலை விரிவாக் கத்திற்காக பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும் 2000-க் கும் அதிகமான தோட்டங்கள், 2000 பம்பு செட்டுகள், கிணறுகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள், மா, பலா, தென்னை, புளியென 5 லட்சம் மரங்களையும் அழித்தது அரசு. விளைநிலத்திற்கு ஒரு சதுர அடிக்கு, ஒரு ரூபாய் 50 காசுகள் என்று கேவலமாகக் கொடுத்தது. இதை எதிர்த்து நான்காயிரம் விவசாயிகள் வழக்குத் தொடுத்தோம். 6 மாதத் திற்குள் மத்திய அரசு உத்தரவுப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரண்டு மாவட்ட ஆட்சியர்களை அழைத்து, எச்சரித்தது நீதிமன்றம். எத்தனையோ 6 மாதங்கள் ஓடிவிட்டன. இன்றுவரை எங்களுக்கான இழப்பீடுகளைத் தரவேயில்லை. இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு விவசாயிகள் தாங்களே விரும்பி வந்து நிலம் தருவதாக பொய் சொல்கிறார்கள் முதலமைச்சரும் அதிகாரிகளும்'' என்கிறார் பங்காரம் கோபாலகிருஷ்ணன்.

""இதையே எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தை தவிர்க்கலாம்'' என்கிறார், சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைக்காக 14 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த கள்ளக்குறிச்சி தி.மு.க. பிரமுகர் சுப்புராயலு. இதையெல்லாம் காதில் வாங்க எடப்பாடி அமைச்சரவைக்கு ஏது நேரம்?

 

 

 

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“நடவடிக்கை எடுப்பதுபோல் பாவலா....” - தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
EPS condemns the Tamil Nadu government

இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி தமிழக அரசுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதுபோல், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொன்னால், நானே முதல்வன், நான் ஆளும் மாநிலமே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார். ஒரு சிறந்த ஆட்சியாளர்கள் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும். மக்களின் விதிப் பயனால் நமக்கு கிடைத்துள்ள முதலமைச்சர் போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியில் நியமித்த அயலக அணி நிர்வாகிதான் வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி இருக்கிறார் என்ற உண்மையை மறைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறார்கள்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத முதலமைச்சர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்துவிடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கமோ, கடத்தலோ, விற்பனையோ இந்த திமுக அரசின் காவல்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதான் அந்தப் பணியைச் செய்து வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் 

பேரவையில் எடுத்துரைத்ததோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள். 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 29 நாட்களில் 402 பேர் கைது என்று செய்திக் குறிப்பை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு முன்புவரை இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? மேலும், இதுபோன்ற சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திமுக அரசின் முதலமைச்சர், மனித சங்கிலிப் போராட்டம் ஒரு நாடகம் என்று சொன்னதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப் பொருட்கள், திமுக நிர்வாகி கைது மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் பேட்டி போன்றவை நடைபெறவில்லை என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேலும், போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த திமுக அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். அ.தி.மு.க நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-விற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.