Skip to main content

அடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.:

Published on 23/11/2017 | Edited on 23/11/2017


எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கே இரட்டைஇலை சின்னம் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆளும் அதிமுக அணியைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளரும், மேட்டூர் எம்எல்ஏவுமான செம்மலையை தொடர்பு கொண்டோம். 

சின்னம் உங்கள் அணிக்கு கிடைத்துவிட்டதைப் பற்றி ?

தேர்தல் ஆணையத்தினுடைய முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். இரட்டை இலை சின்னம் கேட்டு நான், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் மனு செய்திருந்தோம். மனு செய்திருந்தவர்களில் ஒருவன் என்ற வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ராமபிரான் சீதையை மீட்பதற்கு அணிலும் உதவியதைப் போல, எம்.ஜி.ஆர். கண்ட இரட்டை இலையை மீட்பதற்கு நானும் ஒரு வகையில் உதவியிருக்கிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இனி உண்மையான அஇஅதிமுக யார் தலைமையில் இருப்பது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. 

மோடி நம்ம பக்கம் இருக்கிறார், ஆகையால் இரட்டை இலை நமக்குத்தான் கிடைக்கும் என ராஜேந்திர பாலாஜி பேசியதை குறிப்பிட்டு ’அதிகாரத்தை பயன்படுத்தி இரட்டை இலையை பெற்றுவிட்டார்கள்’ என எதிரணியினர் குற்றம் சாட்டுகிறார்களே?

இதில் அதிகாரத்தை பயன்படுத்தவே முடியாது. வேறொரு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தால், அரசாங்கத்தை வசப்படுத்திவிட்டார்கள் என சொல்லலாம். தேர்தல் ஆணையம் அரசியல் சட்டப்படி, தனி அமைப்பு. அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பல நேரங்களில் ஆளுகிற தரப்புக்கு எதிராகக்கூட தேர்தல் ஆணையம் தீர்ப்பு தந்திருக்கிறது. ஆட்சியில் இருக்கிறபோது காங்கிரசுக்கும், ஆளுகின்றபோது பாஜகவுக்கும் எதிராகக் கூட தேர்தல் ஆணையம் தீர்ப்பு தந்திருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தி பெற்ற உத்தரவு என சொல்லுவது முட்டாள்தனமான வாதம். 

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல் அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் முடிவு எடுப்பார்கள். 

உங்கள் கருத்தாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஜெயலலிதா இந்தக் கட்சியினுடைய குரலாக டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழையும், ஜெயா தொலைக்காட்சியையும் உருவாக்கித் தந்தார்கள். இரட்டை இலை சின்னத்தை மீட்டதுபோல, அவற்றையும் மீட்டெடுக்க வேண்டும். அதை தலைமை நிச்சயமாக செய்யும். 

நமது எம்ஜிஆரும், ஜெயா தொலைக்காட்சியும் தங்கள் பெயரில் இருக்கிறது, தங்களது சொத்து என்று தினகரன் தரப்பினர் சொல்கிறார்களே?

ஜெயா தொலைக்காட்சி உருவாவதற்கும், நமது எம்ஜிஆர் உருவாவதற்கும் எங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு என்ன என்பது உரிமை கொண்டாடுபவர்களுக்கே தெரியும். 

கட்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அலுவலகம் உண்டு. அதைக் கட்டுவதற்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்களுடைய ஒத்துழைப்போடு கட்டி முடித்தார்கள். ஆனால் அத்தனை கட்டிடங்களும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவையெல்லாம் பூங்குன்றனின் சொந்த சொத்தாகிவிடுமா? அப்படித்தான் நமது எம்ஜிஆரும், ஜெயா தொலைக்காட்சியும். 

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?... என மைத்ரேயன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளாரே?

மைத்ரேயன் சொன்ன கருத்து அனைவருடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தலைமை இந்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்காகத்தான் காத்திருந்தது. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. இனி பணிகள் வேகமாக நடக்கும். 

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்