Skip to main content

“எங்கள அரசு பேருந்து கண்டுக்கிறதே இல்ல..” - கண்ணீர் வடிக்கும் பெண்கள்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

"Our government bus does not see.." -  women!

 

தி..மு.க. அரசு, மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான இலவசப் பேருந்துகளை விட்டிருப்பதோடு, தமிழகம் முழுக்க ஓடும் டவுன் பஸ்களிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இதேபோல் மாணவர்களுக்கும் இலவசமாகப் பயணம் செய்யும் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் எல்லாம் அரசின் இந்தக் கட்டணமில்லாப் பயணச் சலுகையை முழுமையாக அனுபவிக்கிறார்களா? என்று விசாரித்தால், குமுறல்களே பதிலாக வெடிக்கின்றன. 

 

இதுகுறித்த பல்ஸ்ரேட்டை அறிய, ஒரு பானைச் சோற்றுப் பதமாக, திண்டுக்கல் மாவட்ட நத்தம் தொகுதியில் நாம் களமிறங்கினோம். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி, ரைஸ்மில், பதனிக்கடை, கூவனூத்து, விராலிப்பட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, மணியகாரன்பட்டி, எல்லைப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கோபால்பட்டி, முலையூர், உலுப்பக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதை அறியமுடிந்தது.

 

"Our government bus does not see.." -  women!

 

தவசிமடையைச் சேர்ந்த கூலி பெண் தொழிலாளர்களான சுசீலா, கவிதா, மல்லிகா, செல்வி, மேரி ஆகியோரிடம் இது குறித்துக் கேட்டபோது.. “கிராமப் பகுதிகளில் தோட்ட வேலைகள் இல்லாததால் எங்க ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தினசரி டவுனுக்கு போய் கட்டிடம் கட்டும் இடங்களில், சித்தாள் வேலை பார்த்து வருகிறோம். எங்க ஊருக்கு காலை 6 மணிக்கு பஸ் வருவதால் அதில் போக முடியவில்லை. அதனால காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி 2 கி.மீட்டர் தூரம் நடந்து போய் விராலிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்குப் போனாலும், நத்தத்தில் இருந்து வரக்கூடிய ஃப்ரீ பஸ்கள் சரி வர நிற்பதில்லை. அப்படி நின்றாலும், நாங்கள் ஏறுவதற்குள்ளேயே பஸ்ஸை எடுத்து விடுகிறார்கள். அதனாலேயே கடந்த வாரம்கூட இரண்டு பெண்கள் கீழே விழுந்து விட்டனர். 

 

அதுலயும் சில நாட்களில் பஸ் ஸ்டாப்பைத் தாண்டி நிறுத்தி, மக்களை இறக்கி விட்டுவிட்டு உடனே எடுத்துட்டு போய்விடுகிறார்கள். சில சமயங்களில் ஆம்பளைகள் நின்னா பஸ் நிக்கிது. பொம்பளைக நின்னா பஸ் நிற்பதில்லை. அதனாலயே பெரும்பாலான நாட்கள் எங்களைப் போன்ற பெண்கள் எல்லாம் தனியார் பஸ்களில் போய் வருகிறார்கள். அதனால ஒரு நாளைக்கு ரூ.50 வரை பஸ்சிற்கு செலவாகிறது. முதல்வர் ஸ்டாலின், எங்களுக்காக இலவச பஸ் வசதி செய்து கொடுத்தும் கூட கண்டக்டர்களும், டிரைவர்களும் அவங்க சொந்த பஸ்சில் நாங்க ஃப்ரீயாக போய் வருவது போல் நினைத்துக் கொண்டு, பஸ்களை நிறுத்தாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது எங்க ஊருக்கு வரும் பஸ்ஸை எட்டு மணிக்கு மாற்றி அமைத்தால், வேலைக்குப் போகும் எங்களைப் போல பல ஏரியா பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் பயனடை வார்கள்” என்றனர் ஆதங்கமாக.

 

"Our government bus does not see.." -  women!

 

இது சம்பந்தமாக கூவனூத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சுரேஷ், குமார், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது... “பெண்களுக்கும் இலவசமாக டவுன் பஸ்களில் போய் வரலாம்னு சொன்னதில் இருந்தே, எங்களைப் போல் மாணவ, மாணவிகளையும் சரிவர இலவச பஸ்ஸில் ஏற்றுவது இல்லை. எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் டிரைவர், கண்டக்டர்களாக இருப்பதால் கூட்டமாய் இருந்தால்கூட எங்களை ஏற்றிக்கிட்டு போய்விடுகிறார்கள். அவர்கள் டூட்டிக்கு வரவில்லை என்றால் எங்கள் நிலை மோசமாகிவிடும். நாங்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கும் போக முடியாது” என்றார்கள் வருத்தமாய். 


இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் டேனியல் சரவணனிடம் கேட்டபோது.. “நான் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகுது. இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவருது. அதனால உடனடியாக அப்பகுதிகளில் ஆய்வு செய்து, வழக்கம்போல் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்களை நிறுத்தச் சொல்வதோடு, பெண்களையும், மாணவ-மாணவிகளையும் கண்டிப்பாக ஏற்றிச் செல்லும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.


பேருந்து ஓட்டுநர்கள் மற்றும், நடத்துநர்களின் கனிவான கவனத்திற்கு, அரசுத் திட்டங்களுக்கு இனியேனும் பிரேக் பிடிக்காதீர்கள். ஏழை-எளிய மக்களுக்கு எதிரான திசையில் ஸ்டேரிங்கை வளைக்காதீர்கள்.