Skip to main content

“கட்டபொம்மனுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை” - நடந்ததை சொல்லும் மேஜர் பானர்மேன் செப்புப்பட்டயம்

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

Major Bannerman Cheppupattayam says that "Kattabomman was punished in such a way that he lost his life".

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பழமையான ஓலைச்சுவடிகளையும், செப்புப்பட்டயங்களையும் பராமரித்து பாதுகாத்து நூலாக்கம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை அடுத்து பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையிலான 12 பேர் கொண்ட சுவடித் திட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இச்சுவடித் திட்டப் பணிக்குழுவினருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சுவடித் திட்டப் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு செய்து அரிய ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டயங்களைக் கண்டறிந்து அட்டவணைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் இதுவரை திருக்கோயில்களில் இருந்த 25 செப்புப்பட்டயங்கள் கண்டறிந்துள்ளனர். இச்செப்புப்பட்டயங்களில் கோயிலுக்கு மன்னர்கள் வழங்கிய நிலதானங்கள், மண்டகப்படிகள், அறக்கட்டளைகள், சப்பரங்கள், வாகனங்கள் முதலியவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன.

 

Major Bannerman Cheppupattayam says that "Kattabomman was punished in such a way that he lost his life".

 

இந்நிலையில் சுவடித் திட்டப் பணிக்குழுவினர் எட்டயபுரத்தில் கண்டறிந்த செப்புப்பட்டயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்டயமாக உள்ளது. எட்டயபுரம் செப்புப்பட்டயத்தில் உள்ள விவரம் குறித்து திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: "தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி எங்கள் குழுவினர் திருக்கோயில்களில் உள்ள சுவடிகளையும் பட்டயங்களையும் தேடிக் கண்டுபிடித்து அட்டவணைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இப்பணியில் மா.பாலசுப்பிரமணியன், கோ.விஸ்வநாதன், தா.நீலகண்டன் ஆகியோர் தொடர்ந்து களப்பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு எட்டீஸ்வரமூர்த்தி திருக்கோயிலில் ஒரு செப்புப்பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது.

 

கட்டபொம்மனைப் பிடிக்க ஆங்கிலேயர் விளம்பரம் செய்தமை
எட்டயபுரம் எட்டீஸ்வரர் திருக்கோயில் சுவரின் முன்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ள செப்புப்பட்டயத்தை ஆய்வு செய்த போது, அது வரலாற்று சிறப்புமிக்க செப்புப்பட்டயம் என்பதை அறிய முடிந்தது. இச்செப்புப்பட்டயம் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிக்க கும்பினியர் விளம்பரப் பிரகடனம் செய்த வரலாறு குறித்துப் பேசுகிறது. இச்செப்புப்பட்டயத்தை வைத்தவர் கும்பினியரின் இராணுவ படைத் தளபதி மேஜர் பானர்மேன் ஆவார். செப்புப்பட்டயம் எழுதப்பட்ட காலம் 20/10/1799 ஆகும்.

 

திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கும் குடிமக்களுக்கும் தெரியும்படி மேஜர் பானர்மேன் விளம்பரம் செய்த செய்தியைப் பற்றி இந்த செப்புப்பட்டயம் பேசுகிறது. அதில், "கும்பினியார் உத்தரவுபடி திருநெல்வேலிச் சீமைகளில் எனது பாளையத்தை இறக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான் இவர்கள் அனைவரும் கும்பினியாரிடமிருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் ஈடுபட்டதால் இவர்களின் பாளையப்பட்டுகளை கும்பினியார் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது."

 

மேலும், "பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கன், அவனுடைய தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரனுக்கு தமையனும் காரியஸ்தனுமான சவுந்தரபாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது. அதுவன்றி நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களையும் சில முக்கியமான மனிதர்களையும் அவரவர் பாளையப்பட்டுகளில் இருந்து நீக்கி சென்னை பட்டணத்துக்கு அனுப்பும்படியான சூழலும் உண்டானது. மேற்படி பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்து அதில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், குடியானவர் கைகளில் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் சூழலும் உண்டானது. இது குறித்து முன்பே விளம்பரம் செய்யப்பட்டு சனங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், மேஜர் பானர்மேன் துரையவர்கள் நிமித்தமாக இன்னும் சில காரியங்கள் இந்த விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. அதாவது, இனிமேல் எந்தப் பாளையக்காரனும் கோட்டை கொத்தளங்கள் போட்டாலும் பீரங்கிகள், ரேக்குலா வெடி மருந்துகள் வைத்திருந்தாலும், இத்தியாதிகளைச் சம்பாதித்தாலும் அவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளை இழப்பர். அவர்களின் பாளையப்பட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தோணியபடி தண்டிக்கப்படுவர்.

 

Major Bannerman Cheppupattayam says that "Kattabomman was punished in such a way that he lost his life".

 

பாளையப்பட்டுகளில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், காவல்காரர், குடியானவர் முதலியோர் துப்பாக்கி, வெடி, ஈட்டி, வல்லயம் பிடித்திருந்தாலும் அல்லது வைத்திருந்தாலும் உயிர்ச்சேதம் செய்யப்படுவர். பாளையப்பட்டுகளின் குடியானவர்களுடைய நடத்தைகளுக்கு அந்தந்த பாளையக்காரர்களே பொறுப்பு. அதை மீறி எந்த பாளையக்காரர்களின் சனங்களாலும் தொந்தரவுகள் இருந்தால் அவர்களுக்கு உயிர்ச்சேதம் அடையும் தண்டனை வழங்கப்படும். மேலும், பாளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாளையக்காரனும் தோணின படி தண்டிக்கப்படுவான். சீமைக்கு நலம் ஏற்படும் வண்ணம் மேலே எழுதப்பட்டிருக்கக் கூடிய சட்டங்களைச் சகல சனங்களும் இனிமேல் என்றென்றும் அறிந்து மனதில் வைத்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் செப்புத் தகட்டிலே எழுதப்பட்டு அந்தந்தப் பாளையப்பட்டுகளின் தலைமையான கிராமங்களில் பிரபலமான இடங்களில் அடித்து வைக்க உத்தரவிடப்படுகிறது. இப்படிக்கு மேஜர் பேனர்மேன்” என்று செப்பேடு வரலாற்றுத் தகவல்களைத் தெரிவிக்கிறது. 

 

இச்செப்பேடு வழி கும்பினியரை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த செப்பேடு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படுகிறது” என்றார்.