Skip to main content

வாழும்போது சிரிக்க வைத்தவர், இறந்தபின் திகைக்க வைத்தவர்

Published on 06/03/2018 | Edited on 07/03/2018

மார்ச் – 6  கலாபவன்மணி மறைந்தார்

திரைத்துறைக்கு வந்தபின்பு, அது வழங்கும் சொகுசு வாழ்க்கைக்கு மயங்கும் பலரும் தன் கடந்த கால, கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால் தென்னிந்திய திரை நட்சத்திரமாக புகழ்பெற்றாலும் இறுதிவரை தன்னை வளர்த்த, தான் ஏற்றுக்கொண்ட இடதுசாரி இயக்கத்தின் உறுப்பினராகவே இருந்து அவர்களின் வெற்றிக்காக மேடையேறிக்கொண்டு இருந்தவர் தென்னிந்திய திரையுலகில் தன் நடிப்பால் புகழ்பெற்று விளங்கிய மிமிக்கிரி கலைஞர் கலாபவன்மணி.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், சுற்றுலாத்தலமான சாலக்குடியில் 4 சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கு அடுத்து 7வது மகவையாக ராமன் – அம்மிணி தம்பதியின் மகனாக 1971 ஜனவரி 1ந்தேதி பிறந்தவர் கலாபவன்மணி. சாலக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 4வது வரை படித்தார்.
 

kalabavan mani


மிமிக்கிரி கலைஞராக தான் தன் வாழ்வை இடதுசாரி மேடைகளில் தொடங்கினார் கலாபவன்மணி. அக்சரம் என்கிற மலையாளப்படத்தில் முதன்முதலாக ஆட்டோ ஓட்டுநராக திரையில் தோன்றினார். அதன்பின் சல்லாபம், வசந்தியும் – லக்ஷமியும் பின்பு நானும் என்கிற திரைப்படங்கள் இவருக்கு பெரிய ஏற்றத்தை மலையாள சினிமாவில் வழங்கின. அந்த படமே 1999ல் கேரள அரசின் விருதை கலாபவன்மணிக்கு வாங்கி தந்தது.

அதேபோல் இளமைப்பருவத்தில் 'நான்' என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டார் கலாபவன்மணி. திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபின் பின்னணி பாடகராக அவரை அறிமுகம் செய்ய 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதன்பின் இரண்டு நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய பாடல் தொகுப்பை எழுதி, பாடி ஆல்பமாக வெளியிட்டார் மணி.
 

kalabavan mani


2002ல் தமிழில் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் விக்ரம் நடிப்பை மறந்துவிடமுடியும். கலாபவண்மணி நடிப்பை மறந்துவிட முடியாது. மிமிக்கிரி செய்துக்கொண்டு நடமாடும் பெரும் வில்லன் கதாபாத்திரம் திறமையாக நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழ்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்மே தமிழ் திரையுலகில் பெரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது கலாபவண்மணிக்கு.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாலும் இடதுசாரி மேடைகளில் தன் நாட்டுப்புற பாடல்களை தொடர்ச்சியாக பாடி மக்களை அரசியல்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அதோடு, இடதுசாரிகளுக்காக தேர்தலில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தார். 2016ல் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் தான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அவருக்கு தரமறுத்துவிட்டது.

1995ல் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் நடித்து 2016வரை கொடிநாட்டினார். மிக குறுகிய காலத்தில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்த இந்த மிமிக்கிரி கலைஞன் 2016 மார்ச் 6ந்தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பின் மறைந்தார்.

1999 செப்டம்பர் 22ந்தேதி நிம்மி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் மணி. அவருக்கு பெரும் பலமாய் அவரது மனைவி இருந்தார். அவருக்கு ஒரு மகன் லஷ்மி. மருத்துவமனையில் கலாபவன்மணி இறந்ததும் அவரது குடும்பத்தார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என புகார் தெரிவித்தனர். இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதில் இறந்த கலாபவன்மணி உடலில் வித்தியாசமான விஷம் கலந்துயிருப்பதை கண்டறிந்து அறிக்கை வெளியிட்டனர். அது எப்படி அவரது உடலில் கலந்தது, குற்றவாளி யார் என்பது இன்னும் விடை தெரியாமலே உள்ளது. ஒரு திறமையான கலைஞனின் வாழ்க்கை முற்று பெற வைக்கப்பட்டது, வழக்கு முற்று பெறாமலே உள்ளது. மக்களின் மனதிலும் அவரின் குரல் அழியாமல் உள்ளது, அதுவே அந்த கலைஞனின் வெற்றி.

Next Story

‘நாதுராம் கோட்சே’ திரைப்படம்; வெளியீட்டுக்கு முன்பே கிளம்பிய எதிர்ப்பு 

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Opposition to the movie 'Nathuram Godse'

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய கிடுகு திரைப்படத்தின் இயக்குநர் வீர முருகன், நாதுராம் கோட்சே என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே இந்த இயக்குனர் எடுத்த கிடுகு திரைப்படத்தில், வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது எனவும், தற்போது அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது எனப் பல்வேறு சலசலப்பை இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில், சங்கி, நீட், காடுவெட்டி, ஆணவக்கொலை, திராவிட மாடல், விடுதலை சிறுத்தை, சாத்தான்குளம் என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்பட்டிருப்பதாக மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. 

முற்போக்கு அரசியல் பேசும் பலரையும் கடுமையாக விமர்சிக்கும் இந்தப் படத்தில், இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேசியிருந்ததால் இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக யூடியூப் சேனல் ஒன்றில் இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த இயக்குநர் தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் வேளையில், மதுரையில், இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீடு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டுள்ளார். 

மேலும், படத்தில் நடித்த திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்த போது, கிடுகு திரைப்படத்தை தயாரித்து, பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலே, அதை யூட்டியூப்பில் வெளியிட்டு, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற அந்தப் படக் குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்துவதாகவும், கிடுகு திரைப்படத்தில் திராவிட இயக்கங்களின் முகத் திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததால் இந்தப் பாராட்டு விழா என்றும் கூறியிருக்கிறார். மேலும், இவர்களின் அடுத்த தயாரிப்பான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிடுகு திரைப்படம் வெளியீட்டிற்கு எப்படி இந்து மக்கள் கட்சி துணை நின்றதோ அது போல் நாதுராம் கோட்சே திரைப்படத்திற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்துக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கருத்துகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏழு எட்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். எனவே இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் திமுக அரசின் அச்சுறுத்தலால் திரை அரங்குகளில் வெளியிடப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும், தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயரை வைப்பது எதற்காக? எனவும், கலைஞருக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த வளாகத்தில் தீரன் சத்தியமூர்த்தி சிலை கலைஞரின் காலடியில் இருப்பது போல கலைஞருக்கு மிகப் பெரிய சிலை வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். 

மேலும் தொடர்ந்து பேசியவர், திமுக ஆட்சி செய்யும் போது எல்லா இடத்திலும், கலைஞரின் சிலை, தந்தை பெரியாரின் சிலை போன்றவற்றை வைத்து, தமிழ்நாட்டில் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வண்ணமும் இவ்வாறு திட்டமிட்டு செய்வதாக கூறியிருக்கிறார். இதனால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்தியா முழுக்க படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் வெளி நாடுகளுக்கு சென்று மிகவும் சிரமப்படும் வேளையில், இது போன்று மத கலவரத்தை உண்டு செய்யும் படங்களை எடுத்து தமிழகத்தில் கலவரம் செய்ய விழைகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை'- பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணைவேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என்றார்.