
விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அணையை திறந்துவைத்தார். தமிழகத்தில் ஒரு முதல்வர் அணையை திறந்து வைப்பது இதுதான் முதல் முறை. முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் 20,000 கன அடிக்கு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்கண் மதகு வழியாக சம்பிரதாயத்திற்காக காவிரி நீர் திறந்துவைக்கப்படுகிறது. அதன்பின், அணைமின் நிலையம், சுரங்கம்மின் நிலையம் வழியாக நீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் செல்லும் பாதை என்றால், சேலம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் நீர் ஈரோடு, நாமக்கல், கரூர் வழியாக திருச்சி வந்தடைகிறது. திருச்சியில் இருக்கும் கல்லணை அணையில் இருந்து காவிரி நீர் பல கிளைகளாக பிரிகிறது.
மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீரால் 12 மாவட்டங்கள் வரை பாசன வசதிகள் பெறுகின்றன. அதில் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டத்திற்கும் கால்வாய் பாசனம். திருச்சி கல்லணையில் இருந்து இந்த நீர் பெரம்பலலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை வழியாக நாகப்பட்டினம் சென்றடைகிறது. இதில் பெரும்பாலும் காவிரி நீரால் பயனடையும் மாவட்டம் என்று பார்த்தால் தஞ்சாவூர் மாவட்டம் தான். மேட்டூரில் இருந்து தஞ்சாவூருக்கு காவிரி நீர் வந்தடைய மொத்தம் ஐந்து நாட்கள் ஆகிறது.
காவிரி நீரால் மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குருவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படவில்லை என்றாலும் சம்பா சாகுபடிக்கு நீர் திறந்திருப்பதை நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இறுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் மொத்தம் 10 நாட்களில் கடலில் கலக்கின்றது. கர்நாடகத்தில் தற்போதே தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை குறைத்து விட்டனர்.