Skip to main content

கலைஞர் வாழ்க! நினைவிடத்தில் கண்ணீரோடு முழக்கமிட்ட நித்யா!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
mks

 

 

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரானல் அனுசரிக்கப்பட்டது. கரோனா காலம் என்பதால் இந்த நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. 

 

 

mks

 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், திமுகவின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். திமுக ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அடங்கிய பதாகைகளை மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி தலைவர்கள் கையில் ஏந்தி முழுக்கங்கள் எழுப்பினர். 

 

mks33

 

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்பட பலர் மரியாதை செலுத்த வந்தனர். 

 

 

vairamuthu - nithya

 

2006ல் இருந்து கலைஞருடன் முழு நேரமும் உடனே இருந்து கவனித்துக்கொண்டவர் நித்யா என்று எல்லோராலும் அழைக்கப்படும் நித்தியானந்தம். இவர் 7ஆம் தேதி காலையிலேயே நினைவிடத்திற்கு வந்துவிட்டார். மு.க.ஸ்டாலின் வந்தபோது அவருக்கு வணக்கம் சொல்லி காலில் விழுந்தார். நித்யாவின் முதுகை தட்டிக்கொடுத்து புறப்பட்டார் ஸ்டாலின். அஞ்சலி செலுத்த வந்த பலரையும் நித்யா சந்தித்தார்.

 

​    ​vairamuthu - nithya

 

வைரமுத்து அஞ்சலி செலுத்தியபோது அங்கிருந்த நித்யாவை பார்த்தார். அப்போது நித்தியாவிடம் பேசிவிட்டு, நித்யாவுக்கு நான்கு 50 ரூபாய் நோட்டுகள் என 200 ரூபாய் கொடுத்தார் வைரமுத்து. இதனை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்த நித்யா, தன்னுடன் வந்திருந்த மூன்று பேருக்கும் தலா 50 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதியிருந்த 50 ரூபாயை தான் வைத்துக்கொண்டார். 

 

kalaignar Assistant Nithya

 

திமுகவின் முன்னணி தலைவர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் வந்து சென்ற பின்னர், நித்யா தனது நண்பர்களுடன் பழத்தட்டுகளுடன் வந்தார். கலைஞர் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்கள், இனிப்பு, காரம், ஸ்னாக்ஸ்கள் என அவர் கொண்டு வந்திருந்த தட்டுக்களில் இருந்தது.
 

திமுக கொடியை நினைவிடத்தில் விரித்து அதில் கொண்டுவந்திருந்த பழத்தட்டுக்களை வைத்து மரியாதை செலுத்தினார். கண் கலங்கியப்படி 'கலைஞர் வாழ்க' என அவர் முழுக்கமிட, அவரது நண்பர்களும் 'கலைஞர் வாழ்க...' 'கலைஞர் வாழ்க...' என முழுக்கமிட்டனர். 

 

 

kalaignar Assistant Nithya

 

கோபாலபுரத்தில் கலைஞர் இருந்த அறைதான் நித்யாவின் வாழ்விடம். சக்கர நாற்காலியில் கலைஞர் அமரும் நிலை ஏற்பட்டதும், அந்த நாற்காலியை இயக்கும் சாரதியாக இருந்தவர் நித்யா. கலைஞர் வீட்டில் இருந்தப்படியே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது, அவரை கவனமாக பார்த்துக்கொள்வது, உடைகளை சரிசெய்வது என முழுக்க, முழுக்க கலைஞருக்கு சேவை செய்து வாழ்ந்தவர்.

 

nithya

 

கலைஞரின் குடும்ப உறுப்பினரை போன்று கோபாலபுரத்தில் வலம் வந்தவர் நித்யா. காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணிக்கும் வரை ஐ.சி.யு. வார்டு அருகிலேயே இருந்து மருகியவர். மெரினாவில் கலைஞருக்கு அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியபோது, நித்யாவுக்கும் அந்த அந்தஸ்தை கொடுத்தனர். 

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.