Skip to main content

கொள்கை இல்லாத தேமுதிக... முத்தரசன் பேட்டி

Published on 08/03/2019 | Edited on 09/03/2019

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
 

நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது பிரச்சாரம் எப்படி இருக்கும்?
 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்கள், விவசாய உற்பத்தி பொருள்களின் விலையை உயர்த்துவதாக சொன்னார்கள் இதையெல்லாம் செய்யவில்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம். எடப்பாடி பழனிசாமி அரசு மாநில உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுத்து பாஜகவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து செயல்படுகிறது. இதனை முன்வைத்து எங்களது பிரச்சாரம் அமையும். 


 

 Muthrasan cpi



கலைஞர், ஜெயலலிதா இரணடு ஆளுமைகள் இல்லாத நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?
 

திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார். தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து உரிய மரியாதை அளித்து தொகுதி பங்கீடு உரிய வகையில் பிரித்து கொடுத்துள்ளார். எல்லோரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து செல்கிறார்.
 
 

அதிமுகவின் விதி என்னவென்றால் அக்கட்சிக்கு பொதுச்செயலாளர் இருக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று போட்டுள்ளார்கள். ஜெயலலிதா மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிந்தது கிடையாது. ஆனால் இப்போது அதிமுகவில் இருப்பவர்கள் பாஜகவின் நிர்பந்தத்தற்கு அடிபணிந்து கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அடிபணிந்து அதிமுக பரிதாப நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. 

 

ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

கொள்கை இல்லையென்றால் எங்க வேண்டுமானாலும் பேசலாம். சீட் அல்ல பிரச்சனை. ஒரு கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும். தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது. வகுப்புவாதத்தை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? வகுப்புவாதத்தை எதிர்ப்பதாக இருந்திருந்தால் அந்த அணியுடன் பேசியிருக்கக்கூடாது. ஒரு கொள்கையற்ற நிலையில் இருக்கிறது தேமுதிக. ஆளும் அதிமுக பலவீனமாக இருக்கிறது, அதனை பயன்படுத்தி அதிக இடங்களை பெறலாம் என்று நினைக்கிறது. எந்தவித கொள்கையும் இல்லாமல் கூட்டணிக்கு நெருக்கியதால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. 

 

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று அதிமுகவினர் கூறுகிறார்களே?

 

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேர்தலுக்காக ஒன்று சேரவில்லை. கடந்த இரண்டு வருடமாக மக்கள் பிரச்சனைகளுக்காக எங்கள் அணி போராடியது எல்லோருக்கும் தெரியும். மாநில அரசுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று எங்கள் அணி போராடியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று போராடியது எங்கள் அணிதான். 7 பேர் விடுதலையில் அமைச்சரவை முடிவை நிறைவேற்ற வேண்டும் என்பதும் எங்கள் அணிதான். மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராடிய நாங்கள், ஆட்சி மாற்றம் நடந்தால்தான் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதால் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. எதிரணிதான் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி. 

 


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

”ஒன்றிய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்கப்படும்” - திமுக வேட்பாளர் உறுதி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
DMK candidate KE Prakash assured that weakened textile sector will be revived

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில்  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் கேஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

ஏழைக்குடும்பங்களின் வறுமையைப் போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்களின் 100 நாள் திட்டமானது 150 நாள்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.