Skip to main content

''மோடி பெயரை கேட்டதும் பயந்து விட்டேன்!''; கிருஷ்ணகிரி பெண் 'லகலக'

Published on 30/05/2018 | Edited on 31/05/2018

பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
 

ஜம்மு - காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (மே 28, 2018) வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார். 


 

UJWALA

 

 

 

தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
 

காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது காஸ் அடுப்பில் சமைக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதன் அனுபவங்களைக் கேட்டறிந்தார். 
 

மேலும், தமிழ்நாட்டுக்கு வரும்போது கிருஷ்ணகிரி வந்தால் தனக்கு தமிழகத்தின் முக்கிய உணவுப் பண்டமான தோசை, இட்லி சுட்டு தருவீர்களா? என்றும் ஜாலியாக கேட்டார். அந்தக் கேள்வியால் மகிழ்ந்த அவர்கள் மூவரும், 'கண்டிப்பாக நீங்கள் ஊருக்கு வர வேண்டும். இட்லி, தோசை சுட்டுத் தருகிறோம்,' என்று பதில் அளித்துள்ளனர்.
 

பிரதமருடன் உரையாடிய அனுபவம் குறித்து போகிபுரத்தைச் சேர்ந்த சந்திராவிடம் பேசினோம். 
 

''காஸ் சிலிண்டர் கேட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தோம். நமக்கெல்லாம் இலவச காஸ் இணைப்பு எங்கே கிடைக்கப் போகிறது என்று நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தோம். கடந்த ஏப்ரல் கடைசியில்தான் காஸ் சிலிண்டர் இணைப்பு கிடைத்தது.

 

 

கலெக்டர் அலுவலகத்தில் காஸ் இணைப்பு புத்தகம் தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்பு சொன்னார்கள். கலெக்டர் ஆபீசில் இருந்தே உங்களை காரில் கூட்டிட்டுப் போக வருவாங்க என்று காஸ் ஏஜன்சிக்காரங்க சொன்னாங்க. 
 

சொன்னபடியே வீட்டுக்கு கார் வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். அப்போது வரைக்கும் பிரதமர் என்னுடன் பேசப்போகிறார் என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை. பிறகு, ருத்ரம்மாவின் வீட்டுக்கு கார் சென்றது. அவருடைய கணவரோ, 'வீட்டில் குழந்தைகள் இருக்கின்றன. குழ ந்தைகளை விட்டுவிட்டு கலெக்டர் ஆபீசுக்கு எல்லாம் மனைவியை அனுப்ப முடியாது. காஸ்  சிலிண்டர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை,' என்று தகராறு செய்தார். 
 

ருத்ரம்மாவின் தாயாரோ, காரில் குழந்தைகளைக் கடத்திச்செல்லும் கும்பல்தான் வந்திருக்கிறதோ என்று சந்தேகப்பட்டு அவரும் தகராறு செய்தார். உள்ளே இருந்த நான், அவர்களை சமாதானம் செய்தேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டு ருத்ரம்மாவும் கலெக்டர் ஆபீசுக்கு வந்தாங்க. ஈஸ்வரியும் வந்து சேர்ந்தார்.
 

காலை 7 மணிக்கெல்லாம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று விட்டோம். வீடியோ கான்ஃபரன்ஸ் நடந்த அறைக்குள் சென்றபோது அங்கே கலெக்டர் ஆபீசை சேர்ந்த 20 அதிகாரிகள் இருந்தனர். எனக்கு ஒரே படபடப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது. 
 

திடீரென்று ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். உடனே அந்த அறையில் இருந்தவர்கள் எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர். அவர் யார்? எதற்காக எல்லோரும் எழுந்தார்கள்? என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, அவர்தான் மாவட்ட கலெக்டர் என்று சொன்னார்கள். 

 

 

பின்னர் அவர், கொஞ்ச நேரத்தில் பிரதமர் மோடி உங்களுடன் பேசப்போகிறார். நீங்களும் அவரிடம் பேசலாம் என்றனர். எங்களுக்கு முன்பு பெரிய டிவி (வீடியோ கான்ஃபரன்ஸ் ஸ்கிரீனைத்தான் அப்படிச் சொன்னார்) இருந்தது. அதன் வழியாக பேசுவார் என்று சொன்னார்கள்.
 

மோடி பேசுவாரா? என்ற ஆச்சரியம் இருந்தாலும், அவர் பெயரைக் கேட்டதும் எனக்கெல்லாம் பயத்தில் கை, கால்கள் உதறத் தொடங்கிவிட்டது. ருத்ரம்மாவும் பயந்து விட்டார். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான் பேசினார். அவர் இந்தியில் பேசினார். அருகில் அருந்த அதிகாரிகள் தமிழில் மொழியாக்கம் செய்தனர். காஸ் அடுப்பில் சமைக்கும் அனுபவங்களைச் சொன்னோம். 
 

வீட்டில் டிபன் செய்வீர்களா? என்று பிரதமர் மோடி கேட்டார். 'விறகு அடுப்பில் டிபன் சமைக்கறது கஷ்டம். சாப்பாடு செய்துடுவோம்,'னு சொன்னோம். காஸ் அடுப்பில் சமைப்பது எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
 

அதற்கு, 'முன்னாடி எல்லாம் விறகு அடுப்பில் புகை, இருமலுடன் சமைச்சிட்டு இருந்தோம். இப்போது காஸ் அடுப்பு வந்ததால் புகை இல்லாமல் சமைக்கிறோம். வேலையும் எளிதாக முடிந்து விடுவதால், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோம். அவர்களையும் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்புகிறோம்,' என்று சொன்னோம்.
 

¢அதன்பிறகுதான், கிருஷ்ணகிரிக்கு வந்தால் இட்லி, தோசை சுட்டு தருவீர்களா எனக் கேட்டார். கண்டிப்பாக செய்து தருகிறோம். வீட்டுக்கு வாருங்கள் என்று பதில் சொன்னோம்,'' என்றார் சந்திரா.
 

இவருடைய கணவர் புங்கப்பன். விவசாயி. இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் செவிலியராக பணியாற்றுகிறார்.
 

பிரதமருடன் பேசிய விவரம் பத்திரிகை, டிவிக்களில் வெளியானதை அறிந்த சந்திராவின் உறவினர்கள் பலரும் அவருக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்களாம். 
 

''என்னம்மா, ஒரு ஃபோட்டோவுக்குக்கூட போஸ் கொடுக்க மாட்ட. இப்போது என்னடான உன் போட்டோ எல்லா பத்திரிகையிலும் போட்டு இருக்காங்க,'' என்று மகள்கள் இருவரும் கேலி செய்வதாகவும் கூறினார் சந்திரா.
 

பிரதமருடனான வீடியோ கான்ஃபரன்சிங் உரையாடலின்போது சூளகிரியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் உடன் இருந்தார். அவருடைய சார்பில் கணவர் ராமமூர்த்தி நம்மிடம் பேசினார்.
 

''நான் உள்பட என் உடன்பிறந்தவர்கள் 6 பேர். இதுவரை எல்லோரும் கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்கிறோம். சமீபத்தில்தான் கடைசி தம்பிக்கு திருமணம் செய்தோம். கூட்டுக்குடும்பம் என்பதால் காஸ் அடுப்பில் சமைத்தால் கட்டுப்படியாகாது என்பதால் இதுவரை விறகு அடுப்பில்தான் சமைத்து வந்தோம். 

 

 

இனிமேல் தனித்தனியாக வசிக்கலாம் என முடிவு செய்தபிறகு, இலவச காஸ் இணைப்புக்கு விண்ணப்பித்தோம். போன வாரம்தான் எங்களுக்கு காஸ் இணைப்பு கிடைச்சது. காஸ் இணைப்பு 'புக்' தருவாங்கனு சொல்லித்தான் என் மனைவியை கலெக்டர் அலுவலகத்துக்கு கூட்டிட்டு போனாங்க.
 

அங்கே போன பிறகுதான் மோடி பேசுகிறார் என்பதே தெரிய வந்தது. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மோடி பேசுகிறார் என்ற தகவலால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதற்றமும் இல்லை. ஆனாலும், அவர் பேசியது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும், நாங்கள் இன்னும் அந்த புதிய காஸ் அடுப்பை பயன்படுத்தவே இல்லை. அதனால் காஸ் அடுப்பு சமையல் பற்றிய அனுபவம் எங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை,'' என்றார்.

 
 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.