Skip to main content

மன்னித்த ராகுல்: விடுதலையாவார்களா ராஜிவ்காந்தி குற்றவாளிகள் ???

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

இந்திய பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜிவ்காந்தி தமிழத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது இலங்கையில் ஈழம் என்கிற தனிநாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தான் என சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் கார்த்திகேயனால் விடுதலைப்புலிகள், அதன் ஆதரவாளர்கள் என பெரும் பட்டாளமே கைது செய்யப்பட்டனர்.

rahul gandhi

தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. தடா நீதிமன்றம் 23 பேருக்கு தண்டனை வழங்கியது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் என 7 பேருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. அதில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் 4 பேருக்கு மட்டும் தூக்குதண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த 7 பேரும் 1991 முதல் சிறையில் இருந்து வருகிறார்கள்.

வழக்கு விசாரணையில் இருந்தபோதே நளினி கர்ப்பமாக இருந்தார். சிறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். உச்சநீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்பு நளினி உட்பட 4 பேரும் தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கருணை மனு தமிழக அரசுக்கு அனுப்பினார்கள். 1997 காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த கலைஞர் மு.கருணாநிதி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பினார்.

அப்போது கணவரை பறிக்கொடுத்து துக்கத்தில் இருந்த ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி, நளிளியை மன்னித்துவிட்டேன் என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார். குடியரசு தலைவர் பெண் குழந்தையின் தாய் என்ற அடிப்படையில் அவருக்கு கருணை அளித்து தூக்குதண்டனையை ரத்து செய்தார். மற்ற மூவர் விவகாரத்தை கிடப்பில் போட்டுவைத்தார்.

அதன்பின் இந்த வழக்கில் உள்ள 7 பேரும் நிரபராதிகள், சிக்கவைக்கப்பட்டவர்கள் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலாக வைத்தது. அதன்பின் தமிழகத்தில் படிப்படியாக அந்த கோரிக்கை எழுந்தது. தமிழக காங்கிரஸ்சும், அதிமுகவும் எதிர்த்து வந்தது.

இந்நிலையில் 2007ல் ராஜிவ்காந்தியின் மகளான பிரியங்காகாந்தி ரகசியமாக வேலூர் மத்திய சிறைக்கு வந்து நளினியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடிவிட்டு சென்றார்.

அதன்பின் இலங்கையில் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். ஈழமக்கள் கொத்துகொத்தாக இலங்கையின் சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்பட்டார்கள்.

2011ல் முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரின் கருணை மனுவை குடியரசுதலைவர் ரத்து செய்தார். இதனால் இவர்களை தூக்கில் போட அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா ரகசியமாக உத்தரவிட்டார். அந்த தகவல் வெளியே கசிய தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தூக்கு தண்டனைக்கு எதிராக களமாடினார்கள். இறுதியில் அதிமுக அரசாங்கம் நீதிமன்றத்தை கைகாட்டிவிட்டு பாலுக்கும் காவல் – பூனைக்கும் காவல் என்ற கதையாக நின்றது. தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளோம், எங்களை விடுதலை செய்யுங்கள் என மனுதாக்கல் செய்தனர். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தவர், மாநில அரசாங்கம் விரும்பினால் விடுதலை செய்யலாம் என்றார்.

2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த தீர்ப்பு வந்தது. இதனை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எதிர்த்தது. 2014 ஜனவரி மாதம், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீரென ஈழத்தாயாக அவதாரம் எடுத்தவர் காங்கிரஸ் அரசாங்கம் இதில் ஒரு முடிவு எடுக்கவில்லையெனில் மாநில அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி விடுதலை செய்வேன் என்றார்.

மத்திய அரசின் புலனாய்வுத்துறை, நாங்கள் விசாரித்த வழக்கில் எங்கள் அனுமதியில்லாமல் மாநில அரசு முடிவு எடுக்ககூடாது என மனுப்போட, உச்சநீதிமன்றம் விடுதலைக்கு தடைவிதித்தது. அதன்பின் 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அவர்கள் இதில் சிபிஐக்கு ஆதரவாக நின்றனர்.

இந்நிலையில் தான் மலேசியா, சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தலைவரும், படுகொலை செய்யப்பட்ட ராஜிவ்காந்தியின் மகனுமான ராகுல்காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு இந்திய வம்சாவளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

விழாவில் கலந்துக்கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் கூறும்போது, பிரபாகரன் உடலை தொலைக்காட்சியில் காட்டியபோது எங்கள் மனம் மகிழ்ந்திருக்க வேண்டும், என் மனம் மகிழவில்லை. ஏன் அவர்கள் (சிங்கள இராணுவத்தினர்) இந்த மனிதரை அவமானப்படுத்துகிறார்கள் என வருந்தினேன். அவரது குழந்தைகளுக்காக நானும், என் சகோதரியும் மிகவும் வருந்தினோம்.

எனது பாட்டி இந்திராகாந்தி நான் கொல்லப்படுவேன் என்றார். அவர் கொல்லப்பட்டபின் அரசியலுக்கு வந்த என் தந்தை ராஜிவ்காந்தியிடம் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்றேன். நான் அமெரிக்காவில் இருந்தபோது என் தந்தை கொல்லப்பட்டது சொல்லப்பட்டது. அரசியலுக்கு வந்தபின்பு தீமையை எதிர்த்து போராடுகிறோம், அவர்கள் எதிர்தது போராடியதால் கொல்லப்பட்டார்கள். தீமை அது கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய படையென்றார். இப்படி அவர் கூறி நானும், என் சகோதரியும் மன்னித்துவிட்டோம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அப்படி கூறியதால் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்கள் விடுதலையாகிவிடுவார்களா?.

நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறார்கள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை நன்கறிந்தவர்களும், பிரதமர் மோடியை அறிந்தவர்களும். பாஜகவின் கொள்கை தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் இருந்தால் முழுவதும் தண்டனை பெற வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. நாங்கள் தான் உண்மையான தேசபக்தர்கள், தேச பாதுகாவலர்கள் என்கிற பெயரை மக்களிடம் புகுத்தியுள்ளார்கள். இதனால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பாஜகவுக்கு சிக்கல் உள்ளது.

அதையும் மீறி ஆயுள்தண்டனை கைதியாக உள்ளவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்தால் காங்கிரஸ் தன் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும், இதனை சமாளிக்க வேண்டும். ஒருவேளை காங்கிரஸ்சிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லையென்றாலும், இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம்மிருந்து எதிர்ப்பு வரும். முன்னால் பிரதமரை படுகொலை செய்தவர்களையே விடுதலை செய்தால், காஷ்மீர் தீவிரவாதிகள், பஞ்சாப் தீவிரவாதிகள், அசாம் மாவோயிஸ்ட்கள் உட்பட வடகழக்கு மாநிலத்தை சேர்ந்த தீவிரவாதிகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள். அவர்களும் தங்களை விடுதலை செய்யவேண்டி கேட்பார்கள். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டி வரும், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இந்திய புலனாய்வு அமைப்புகள் ராஜிவ் கொலையாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்தியரசிடம் அறிக்கை தந்துள்ளன. இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலில் மத்தியரசு உள்ளதால் சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, தற்போது ராகுல்காந்தி என யார் மன்னித்தாலும் விடுதலை என்பது கடினமானது தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story

விளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வகுத்த வியூகம் - எதற்காக களமிறக்கப்பட்டார் தாரகை?

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது.   இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
விஜயதரணி

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை  நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக  இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். 

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
தாரகை

தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.