Skip to main content

உயிர்கள் பலியாவதற்கு முன் கட்டியிருக்கலாம்! - ராணுவம் கட்டிய எல்பின்ஸ்டோன் பாலம்

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

மும்பைக்குள் பயணம் செய்யவேண்டுமென்றாலே எல்லோரும் நமக்கு முதலில் சொல்வது, லோக்கல் ரயிலிலேயே செல்லுங்கள் என்று, IT வேலையென்றாலும் அரசு வேலையென்றாலும் தொழிலாளிகளென்றாலும் மும்பையில் பயணிப்பதற்கு அதிகமாக பயன்படுத்துவது லோக்கல் ரயில்களைதான். ஒரு நாளுக்கு எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தை மட்டுமே  3.5 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிக மக்கள் பயணிக்கும் இந்த ரயில் நிலையத்தில் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் 29 தேதி ஒரு கோரச்சம்பவம் நிகழ்ந்தது. எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்திலிருந்து பரேல்க்கு செல்லும் நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசலின் காரணமாக இருபத்தி மூன்று பேர் மரணமும் முப்பத்தி ஒன்பது பேர் காயமும் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்தது. அந்த ரயில் நிலையத்தை பயன்படுத்திய மக்கள் அரசாங்கத்தை கடுமையாகச் சாடினர். 
 

elphine stone stampened


லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த இந்த நடைமேம்பாலம் 45 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. இது குறுகலான நடைபாலம். காலபோக்கில், அந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகியது. இருந்தும் அரசாங்கம் இந்த குறுகலான பாலத்தைப் பற்றி எந்த கவலையும் இன்றி இருக்க, இறுதியாக யாரும் எதிர்பாராத அந்த துயரசம்பவம் நேர்ந்தது. கடந்த வருடத்தில் இந்தியாவில் பல ரயில்கள் தடம்புரண்டன. இதன்மூலம் முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மாற்றப்பட்டு அந்த பதவிக்கு பியூஸ் கோயலை கொண்டுவந்தனர். அவர் பதவியேற்று ஒரு மாதத்தில் தான் இந்த எல்பின்ஸ்டோன் சம்பவம் நடந்தேறியது. 'விரைவில் இந்தப் பாலம் சீரமைக்கப்படும். மேலும் பல நிலையங்களில் நடைமேம்பாலம் சீர்செய்யப்படும்' என்றார்.
 

elphin stone army


எல்பின்ஸ்டோன் ரயில் நிலையம், கரி சாலை, அம்பிவ்லி ரயில் நிலையம் போன்ற மூன்று ரயில் நிலையங்களையும் விரைவில் முடித்து மக்களுக்கு நடைமேம்பாலத்தை பயன்பட இராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம், 'நாங்கள் நடைமேம்பாலத்தை எடுத்துக் கட்ட வேண்டுமானால் எங்களுக்கு ஓராண்டாவது காலஅவகாசம் தேவை' என்றது. அதன் காரணமாகத்தான் இந்தத் திட்டம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பின்னர் விழித்த அரசு  56 நடைமேம்பாலங்களை 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்க  டென்டர்விட்டது. இதில் 22 நடைமேம்பாலங்கள் ஜூன் மாதத்துக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதமே  20 நடைமேம்பாலங்களைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இராணுவத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று ரயில்நிலைய நடை மேம்பாலங்களும்  இதில் சேரும். 
 

elphine stone new image


இராணுவத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று நடைமேம்பாலங்கள், 117 நாட்களிலேயே கட்டிமுடிக்கப்பட்டது. எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலம் 73 மீட்டர் நீளம். அதை கட்டிமுடிக்க 10 கோடி செலவாகியுள்ளது. கரி ரோடு நடைமேம்பாலம் 30 மீட்டர் நீளம், 3 கோடி செலவாகியுள்ளது. அம்பிவ்லி நடைமேம்பாலம் 20 மீட்டர் நீளம், கட்டிமுடிக்க 3 கோடி செலவுமாகியுள்ளது. இந்த நடைபாலங்கள்  80 டன் வரை தாங்கும் என்கின்றனர். ஜனவரி இறுதிக்குள்ளே முடிக்கப்படும் என்று சொல்லப்பட்ட இந்த மூன்று நடைமேம்பாலங்களும் சில காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு பிப்ரவரி 27 தேதி செவ்வாய் கிழமை அன்று மும்பையின் புகழ் பெற்ற டப்பாவாலாஸ், கூலிவேலை செய்பவர்கள் மற்றும் பயனிகள் மூலம் இது திறந்துவைக்கப்பட்டுள்ளது. ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் பேசுகையில், "முழுக்க முழுக்க இராணுவத்தின் மூலம்தான் இந்த நடைபாலம் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் சாத்தியமாகியுள்ளது" என்றார். கூட்ட நெரிசலில் தன் மகனை இழந்த  ஒரு தாய், " புதிதாக கட்டிய நடைபாலத்தினால் ஒன்றும் என் மகன் வரப்போவதில்லை" என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார். பலரின் உயிர்கள் காவு கொடுக்கப்படாமல் இவர்கள் இக்காரியத்தை செய்திருந்தால், இந்த தாயும் பாலத்தை கட்டியதற்கு பாராட்டியிருப்பார். ஆனால், எந்த பிரச்சனையென்றாலும்  அரசின் கவனத்தை ஈர்க்க  மக்கள் தங்களையே நரபலி கொடுக்கவேண்டுமே!  

Next Story

12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

nn

 

கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

 

 

Next Story

''என் கணவரை ஏன் நல்லா பாத்துக்கல'' - தேசியக் கொடியை ஏந்தியபடி ராணுவ வீரர்களிடம் கேட்ட மனைவி 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

nn

 

ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், சக ராணுவ வீரர்களிடம் 'ஏன் என் கணவரை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை' என ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் கேள்வி எழுப்பியது மனதை உறையவைத்தது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மணலி கிருஷ்ணபுரம். இப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்து கடந்த 15 வருடங்களாக திரிபுராவில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சந்தியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

 

ஜெகதீஷ் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் கமாண்டோ பயிற்சி பெற்று வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்பொழுது சுற்றி இருந்த ராணுவ வீரர்களிடத்தில் 'ஏன் என் கணவரை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை ' எனக் கேட்டது அங்கிருந்த சக ராணுவ வீரர்களைக் கண்ணீரில் மூழ்க வைத்தது.