Skip to main content

பாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
modi

 

2013ல் மோடியை பெரிய ஹீரோவாக நிரூபிக்க உதவியவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள். அந்தத் தேர்தல்களில் மோடியின் பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்தது என்று பில்டப் செய்தார்கள். 2014 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராவதற்கு இந்த பில்டப் மிகவும் உதவியது. இதோ, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய அதேதேர்தல்கள் உதவப்போவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
 

அந்த மாநிலத் தேர்தல்களுடன் மிசோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பேரவைக்கு தேர்தல்கள் நடைபெறப்போகின்றன. இந்தத் தேர்தல்களை நடத்துவதா அல்லது மக்களவைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்துவதா என்று மோடி யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனைத்து முனைகளிலும் மோடி அரசு அடைந்துள்ள தோல்வியும், மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பும் மக்களவைத் தேர்தலை தள்ளிப்போடச் செய்தது.
 

2012 ஆம் ஆண்டிலிருந்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கார்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியுடன் டிஜிடல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை போட்டோஷாப் பிரச்சாரம் என்று இப்போது சொல்கிறார்கள். உலகின் அத்தனை பெரிய கட்டுமானங்களையும் குஜராத்தில் இருப்பதாக இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாஜகவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறியடிக்க தவறிவிட்டன.
 

2013 ஆம் ஆண்டு மோடியை முன்னிறுத்திய சமயத்தில், பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. கர்நாடகா தேர்தல் மோடிக்கு முதல் சவாலாக அமைந்தது. ஆனால், அதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகுதான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
 

இந்த நான்கு மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது.  ராஜஸ்தானிலும் மிஜோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தது. அந்தத் தேர்தலில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்வதற்காக அதானியும் அம்பானியும் விமானங்களை கொடுத்தார்கள். தேர்தல் முடிவு வந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 44.88 சதவீதமும், காங்கிரஸ் 36.38 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன. சத்தீஸ்கரிலும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது. பாஜக 54.44 சதவீதம் வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.33 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பாஜக கைப்பற்றியது. அங்கு பாஜக 45.17 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 33.07 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. மிஜோரம் மாநிலத்தை காங்கிரஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. ஆக, இந்தத் தேர்தல்களில் ராஜஸ்தான் மட்டுமே பாஜகவுக்கு லாபம். அதிலும் அங்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், மோடியின் பிரச்சாரத்தால்தான் மூன்று மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியது போன்ற ஒரு தோற்றத்தை மீடியாக்கள் வழியாக உருவாக்கினார்கள்.
 

இப்போது அதே நான்கு மாநிலங்களுடன், முன்கூட்டியே கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிஜோரம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா போராட்டக்குழுவும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதை சந்திரசேகர் ராவ் கடுமையாக தாக்கியுள்ளார்.
 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இப்போது காங்கிரஸுக்கு சாதகமாக மாறி இருக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றிபெறும் என்றும், மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் முதல்கட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
 

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்து வருவதை அந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. பெட்ரோல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தது, அவர்கள் மீதான தொடர் தாக்குதல், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று இந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்போது வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் காங்கிரஸுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் கோஷ்டி மனப்பான்மையை முடிவுக்கு கொண்டுவந்து, அங்கு கட்சியைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். காங்கிரஸின் எதிர்காலம் மட்டுமின்றி, தங்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்தும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக இயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய அஜித் ஜோகியால் அந்தக் கட்சிக்கு பின்னடைவு இருக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. அங்கு அஜித் ஜோகியின் கட்சியுடன் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வெற்றியை பாதிக்காது என்று கருத்துக் கணிப்பு கூறியிருப்பதால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

 

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
PM Modi's 'Road Show' in Coimbatore today

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வரவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5:30 மணிக்கு கோவை வருகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி, கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.