Skip to main content

கூகுளை நம்பாதீங்க! -குற்றாலம் ஏமாற்றம்!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
funland

 

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் குதூகலிக்கலாம் என, இணையதளத்தில் படங்களுடன் விளம்பரப்படுத்தி உள்ளனர். கூகுள் வரைபடமும் செங்கோட்டை அருகில் பிரானூர் என்ற பகுதியில் காளீஸ்வரி தியேட்டர் எதிர்புறம் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இருப்பதாக அடையாளம் காட்டுகிறது. Explore My Trip வலைத்தளமும், ஃபன் லேண்ட் குறித்து வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களிலிருந்தும்,   மனைவி, குழந்தைகளுடன் உற்சாக மனநிலையில் குற்றாலம் வருபவர்கள்,  இந்தத் தகவலை நம்பி, கூகுள் மேப் காட்டும் திசையில், வாகனத்தைச் செலுத்துகின்றனர்.   


 

funland


 

மிகத்துல்லியமாக,  ‘இங்குதான் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது’ என்று கூகுள் மேப் அம்புக்குறியிட்டு காட்டும் இடத்தில், அப்படி எதுவுமே இல்லை. வெட்டவெளியாகவும், வயல் காடாகவும் உள்ளது. அக்கம் பக்கத்தில் விசாரித்தால்,  விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.  “அட, போங்கப்பா. உங்கள மாதிரி ஆளுங்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி நாங்க ஓய்ஞ்சு போயிட்டோம். செல்போனைத் தடவித்தடவி, இன்டர்நெட்ல இருக்கிறதெல்லாம் உண்மைன்னு நம்பி வர்றவங்க, நடு ரோட்டுலதான் நிக்கணும்.  அதுதானே இப்ப நடந்திருக்கு.” என்று கலாய்க்கிறார்கள்.  
 

 

 

வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் போன் நம்பர்களைத் (04633 – 225571/72/73) தொடர்பு கொண்டபோது, முதல் இரண்டு நம்பர்களிலும் சேவை நிறுத்தம் செய்யப்பட்டதாக, ரெகார்டட் வாய்ஸ் பதிலளித்தது. மூன்றாவது எண்ணிலோ, ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் அட்டெண்ட் பண்ணவில்லை. போன் டயல் செய்தபோது, ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் என்று காட்டியது ட்ரூ காலர். 

 

funland


 

குற்றாலம் மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆமாங்க.. மேப்ல யாரோ தப்பா போட்டிருக்காங்க. நெறய பேரு இங்கே வந்து ஏமாந்து திரும்புறாங்க. ஏன் இந்தமாதிரி பண்ணுனாங்கன்னு தெரியல. ஏதோ சீட்டிங் மாதிரி தெரியுது. ஆனா, இதுவரைக்கும் யாரும் புகார் தரல.” என்றனர். மேலும், வலைத்தளத்தில் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் குறித்து தேடியபோது, காயல்பட்டினம்.காம் என்ற வெப்சைட், 2013, மே 24-ஆம் தேதி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆஸாத் கோப்பை கால்பந்து 2013, காலிறுதிப் போட்டியில்,   குற்றாலம் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் நிறுவன அதிபர் பி.முஹம்மத் ஃபாரூக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். 
 

 

 

தேடலின் பலனாக,  ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் மேனேஜர் ரமேஷை தொடர்புகொள்ள முடிந்தது. “ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸை முஹம்மத் ஃபாரூக்கிடமிருந்து  லீசுக்கு எடுத்திருக்கிறார் புளியரை ஷ்யாம். ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இன்னும் ரன்னிங் ஆகல. தனியாக டிரான்ஸ்பார்மர் போடச் சொல்லிட்டாங்க. அம்யூஸ்மெண்ட் பார்க் விஷயத்தை நீங்க ஃபாரூக்கிடம்தான் பேச வேண்டும். அதற்கும் ஷ்யாமுக்கும் சம்பந்தம் கிடையாது.” என்றார். 

 

funland

 

ரமேஷிடமிருந்து முஹம்மது ஃபாரூக்கின் செல் நம்பரைப் பெற்று டயல் செய்தோம். தொடர்ந்து தொடர்புகொள்ள இயலாத நிலையிலேயே இருந்தார் எம்.பி.இஸட். ஃபன்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்கின் நிர்வாக இயக்குநர் முஹம்மது ஃபாரூக். அவர் யாரோ? அவருக்கு என்னென்ன பிரச்சனையோ? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். வலைத்தளத்திலும், கூகுள் மேப்பிலும் மோசடியான ஒரு தகவலைப் பதிவுசெய்து, இன்று வரையிலும்  மக்களை ஏமாற்றிவருவதை எப்படி அனுமதிக்க முடியும்? தமிழக அரசும், சட்டமும், குற்றாலத்தில் பொய்யான  ஒரு முகவரியைத் தேடி சுற்றுலாப் பயணிகள் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 
 

 

 

உலகின் தகவல்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து, உலகளவில் அனைவரும் அணுகக்கூடியவாறு, அவற்றை பயனுள்ள முறையில் ஆக்குவதே குறிக்கோள் எனச் சொல்லும் கூகுள், இதுபோன்ற தவறான தகவல்களைக் கண்டறிந்து ஏன் களையவில்லை? மதன் விக்னேஷ் குமார், புவனேஸ்வரி துரை போன்றவர்கள் ‘கூகுள் வரைபடத்தை நம்பி எங்களின் மேலான நேரத்தை வீணடித்து விட்டோம்.’ என்று பார்வையாளர் பகுதியில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை?  
 

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என, நம் முன்னோர் என்றோ சொல்லிவிட்டனர். இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில், இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூகுளையும் முழுமையாக நம்பிவிட முடியாது.  

 

 

 

 

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மினுமினுக்க மினரல் ஆயில்; பேரீச்சை சர்ச்சையில் மீண்டும் குற்றாலம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024

 

mineral oil for shimmer; Again in the date controversy

குற்றாலத்தில் அண்மையில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த ஐந்தாம் தேதி குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

mineral oil for shimmer; Again in the date controversy

இந்நிலையில், அதே குற்றாலம் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு கடையில் பேரீச்சை பழத்தின் மீது மினரல் ஆயில் தடவி புதியது போல பளபள என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பேரீச்சை பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,100 கிலோ மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு ஆயில் பூசி விற்கப்படும் பேரீச்சை உடலுக்கு மிகவும் கெடுதல் என தெரிவித்த அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.