Skip to main content

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

Discovery of 13th century Pandiyar period Tamil inscription!

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள சோழபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

 

சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணியின் போது மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்களோடு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார்.

 

இது குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, "மூன்றரை அடி நீளமும், முக்கால் அடி அகலமும் உடைய பட்டைக்கல் ஒன்றில் தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முதல் வரி சிதைந்துக் காணப்படுவதால் படிக்க இயலவில்லை. மற்ற வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

2.  பிரம்மதேயம் ஸ்ரீ சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலத்து நூ

3.  ருங் கைக்கொண்டு இக்கோயிலில் ஸ்ரீ வைகானசர்க்கு

4. லிவூட்டாக இட்டேன் காண வினியப் பெருமாள் பிள்

 

இறைவனுக்குரிய திருவிடையாட்ட பிரம்மதேயமாக விளங்கிய ஸ்ரீ சுந்தரபாண்டிய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வைணவத்தின் ஒரு பிரிவினரான வைகானசர் மூலம் பெருமாள் கோவிலுக்கு பணத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிக்கக் கூடிய கல்வெட்டாக அமைந்துள்ளது. எனினும், இதன் தொடர்ச்சியான கல்வெட்டுகளை ஒப்பிடும்போது முழுமையான செய்தியை அறிய முடியும். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கோவில் நிலங்களை பிரம்மதேயம் என்று அழைக்கப்படுகிறது. சோழபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தமச் சோழ விணணகராழ்வாரான ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும் மற்றும் விக்கிரம பாண்டீஸ்வரமுடையாரான சிவன் கோவிலும் அமைந்துள்ளது. பெருமாள் கோவில் புனரமைப்பின் போது, இக்கல்வெட்டு இடம் மாறி நாளடைவில் மண்ணில் புதைந்திருக்ககூடும். இப்பகுதியில் ஏராளமான கோவில் கற்கள் சிதறிய நிலையிலும் காணப்படுகிறது. 

Discovery of 13th century Pandiyar period Tamil inscription!

சோழபுரத்தை உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தேவியாற்றின் மேற்கு கரையோரத்தில் கிழக்கு பார்த்த நிலையில், அமைந்துள்ள சிவன் கோயில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (கி.பி.1250 முதல் கி.பி.1278 வரை) காலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றிதழ் தெரிவிக்கிறது. சிவன் கோயிலின் தென் மேற்கே அமைந்துள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. இக்கோவில் உத்தமச் சோழ விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  

 

இப்பெருமாள் கோயில் கல்வெட்டொன்றில் நந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக ஏழரை அச்சும், சந்தியா தீபம் எரிப்பதற்காக வேண்டி, ஒரு அச்சும் ஆக மொத்தம் எட்டரை அச்சுக்கள் பெருமாள் கோயிலின் திருவிடையாட்ட பிரம்மதேயமான உத்தமச்சோழச் சதுர்வேதிமங்கலத்து நல்லூர் நாராயண பட்டன் என்பவர் வழங்க இவ்வைணவ ஆலயத்தில் பெருமாள் திருவடி பிடிக்கும் பாண்டவ தூதன் யாதவனாகிய அழகிய மணவாளப் பட்டனும் பெற்றுக்கொண்டு பொலிவூட்டாக செலுத்தி பெற ஒப்புக்கொண்டு இருந்தமையை விக்கிரம பாண்டியனின் கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

 

எனவே, சோழபுரத்தில் சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் தான, தர்மங்களை பற்றி ஏராளமான செய்திகள் கல்வெட்டுக்களில் எழுதப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டை பெருமாள் கோவிலுக்குள் வைத்து பாதுகாப்பதாக பொதுமக்கள் உறுதியளித்துள்ளதாக பேராசிரியர் கந்தசாமி கூறுகின்றார். தேவியாற்றின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரில் ஏராளமான நுண்கற்கருவிகளும், ரோமானிய நாணயங்களும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 

இப்பகுதியில் கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளும் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர முடியும்". இவ்வாறு பேராசிரியர் கூறினார். 


 

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.