Skip to main content

‘முதலமைச்சர் போட்டியிலிருந்து விலகுங்கள்!’ - அனுமனைக் கையிலெடுத்த ஓ.பி.எஸ்.! 

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Did OPS planning for CM  posting

 

சசிகலா எழுச்சியை, அந்த அதிமுக பிரமுகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை, அதிமுக தலைவர்கள் மட்டத்திலேயே இல்லை என்று புலம்பினார். ‘கட்சி உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என, அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆதங்கம் இதோ;
 


வைகோ கட்சி ஆரம்பித்தபோது இதைக்காட்டிலும் பன்மடங்கு எழுச்சி இருந்தது.  எம்.ஜி.ஆர். மறைந்து, 1988ல் அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சரான பிறகு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு வந்தபோது, வழியெங்கும் உள்ள ரயில் நிலையங்களில், தொண்டர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அதனால், காலையில் வரவேண்டிய ரயில், மாலையில்தான் மதுரை வந்துசேர்ந்தது. 1989ல் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு பிரச்சாரம் செய்தபோது, அப்படி ஒரு கூட்டம். தனக்காகக் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போன வி.என்.ஜானகி, “எப்படியிருக்கு கூட்டம்?” என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டேவிட்டார். தற்போது,  சசிகலா தரப்பிலும் ‘மாஸ்’ காட்டியிருக்கின்றனர். அவ்வளவே!  இதுபோன்ற கூட்டத்தை வைத்தெல்லாம், அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தைக் கணித்துவிட முடியாது. 

 

‘அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்..’ என்ற கோஷம், தற்போது சுத்தமாக அடங்கிவிட்டது. வட மாவட்டங்களில், தனி ஒருவனாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். அதுபோல், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே! அவரோ, ‘நல்லவர்; வல்லவர்; விசுவாசம் மிக்கவர்; திறமையானவர்’ என, தன்னை மட்டுமே முன்னிறுத்தி விளம்பரம் வெளிவருவதில், அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். அவரும்கூட, ‘எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘அம்மாவின் ஆட்சியமைப்போம்’ என்றே பேசி வருகிறார்.

  

Did OPS planning for CM  posting


செய்த வினையை எடப்பாடி தற்போது அறுவடை செய்கிறார். தர்மயுத்தம் நடத்திய காலத்தில், நம்பிக்கையோடு தன் பின்னால் வந்தவர்களுக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். நினைத்ததைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்தார் அவரது ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி. எடப்பாடி, கே.பி.முனுசாமியை மொத்தமாக தன்பக்கம் இழுத்துவிட, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது. ஓ.பி.எஸ்.ஸை நம்பிச் சென்றது வீணென்று தெரிந்ததும், எடப்பாடி ஆதரவாளராகவே இருந்திருக்கலாம் என்ற முணுமுணுப்பு எழுந்து, அது நடந்தும்விட்டது. 

 

இன்னொரு கொடுமையும்கூட நடந்தது. மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் என்று  நினைத்த அந்த சீனியர் விசுவாசி, மா.செ.க்களிலிருந்து, அமைச்சர் வரையிலும் கோடிகளில் கல்லா கட்டியது தெரிந்து ஓ.பி.எஸ். வெறுத்துப்போனார். அவரை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். ஆட்சியும் கட்சியும் எடப்பாடியின் வசமாகிவிட்ட நிலையில், தாமரை இலைத் தண்ணீராக, ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் ஓ.பி.எஸ்., கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், தனிவழியில் பயணிக்கிறார். சரியான நேரத்தில் காய் நகர்த்துவோம் என்பதே ஓ.பி.எஸ்.ஸின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. அதுவரை அமைதி காப்பார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுக்குழுவும் கூட்ட முடியாது. ஆட்களையும் தூக்க முடியாது. கேட்ட சீட் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால், ஒத்துழையாமை இயக்கமே நடத்துவார்.


பிப்ரவரி 6-ஆம் தேதி, தலைமைக் கழகத்தில், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நேரடியாக சசிகலா பெயரைக் குறிப்பிட்டுப் பேசாத ஓ.பி.எஸ். ‘தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமா? ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் எப்படி சரிக்கட்டலாம்? வாய்மொழியாகச் சொல்வதற்குத் தயக்கம் இருந்தால், எழுத்துமூலமாகக் கருத்துகளைத் தெரிவியுங்கள்’ என்று கேட்டபோது, தங்களுக்குத் தரப்பட்ட பேப்பரில் யாரும் எழுதித்தரவில்லை. முதல் ஆளாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியேற, அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் வெளியேறினார்கள். ஓ.பி.எஸ். இவ்வாறு கேட்டுக்கொண்டதும்கூட, ஒரு கண் துடைப்புக்காகத்தான். ஒருவேளை, தேர்தல் முடிவுகள் சாதகமாக வராத நிலையில், ‘கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கட்சியைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா?’ என்று பின்னாளில் யாராவது கேட்டால், ‘அப்போது சரியாகத்தான் கேட்டேன். நீங்கள்தான் உங்கள் மாவட்ட நிலவரம் அறிந்து பதிலளிக்கவில்லை’ என்று சமாளித்துவிடத்தான். 


நான்கு வருடங்களுக்கு முன் சசிகலா செய்தது, பூமராங்காக திரும்பியிருக்கிறது. அப்போது என்ன நடந்தது? ‘ஆட்சியும் கட்சியும் சின்னம்மாவிடம் இருக்க வேண்டும்..’ என்று ஒவ்வொருவராகப் பேசவைத்தார். அதே பாணியில், சசிகலாவுக்கு எதிரான கருத்துகள், அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் போன்றவர்களின் பேட்டி வாயிலாக தற்போது வெளிப்படுத்தப்படுகிறது. அடுத்து, டெல்டா மாவட்டத்திலும், முக்குலத்தோர் தரப்பிலிருந்து, இதே ரீதியில் சசிகலாவுக்கு எதிராகப் பேசவைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

 

Did OPS planning for CM  posting


 
திமுகவோ, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதியை பிரச்சாரத்தில் இறக்கிவிட்டுள்ளது. அதிமுக விளம்பர அரசியல் மட்டுமே செய்கிறது. மற்றபடி, சோம்பிக் கிடக்கிறது. இந்த நிலையில், ‘கடந்த நான்கு ஆண்டுகளில், நம்மை எப்படியெல்லாம் எடப்பாடி உதாசீனப்படுத்தி இருக்கிறார். அவருக்குப் பாடம் புகட்டுவதற்காக சசிகலா பக்கம் போனாலும் தப்பில்லை’ என்று ஓ.பி.எஸ்.ஸை உசுப்பேற்றும் ஆதரவாளர்களும் உண்டு. 

 

cnc


    
ஓ.பி.எஸ்.ஸும் ‘ராம பக்தியில் அனுமனை மிஞ்ச உலகில் யாராலும் முடியாது என்று விளக்கி, அனுமன் மீது பொறாமை கொண்ட சீதை, இலக்குவன், பரதன், சத்ருக்கன் நால்வருமே போட்டியிலிருந்து விலகினார்கள்’ என்று ராமாயணக் கதையை, தனக்கு சாதகமாக எடுத்துவிட்டு, விளம்பரமாக வெளியிட்டு வருகிறார். அப்படியென்றால், முதலமைச்சர் போட்டியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலகி, தனக்கு வழிவிட வேண்டுமென்று சூசகமாகச் சொல்கிறாரா? என்ற கேள்வி, இயல்பாகவே எழுகிறது. ‘இது என்ன மாதிரியான அரசியல்?’ என்று எடப்பாடி கடுப்பாகிவிட, அவரைப் பெயரளவுக்கு ‘கூல்’ செய்யும் விதமாக ‘எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பயணித்த வழியில் சென்று சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார்’ என்று கோவையில் நடைபெற்ற 123 ஜோடி திருமண விழாவில் பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அங்கும்கூட, மீண்டும் எடப்பாடி ஆட்சி என்று குறிப்பிடாமல், ‘மீண்டும் நமது ஆட்சியை நிலைநிறுத்துவதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்’ என்று பொடி வைத்தே பேசியிருக்கிறார். 

 

Did OPS planning for CM  posting


மாவட்டங்கள் பலவற்றிலும், மாவட்டச் செயலாளர்களை உரசியபடியே எதிர் அரசியல் பண்ணுபவர்கள் உண்டு. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தாலும், இத்தகையோர் வறட்சியாகவே உள்ளனர். ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பனிப்போர் முடிவுக்கு வந்து, கட்சி உடைந்தால், மாவட்டப் பொறுப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு உண்டு. இப்படியொரு இக்கட்டான நிலைக்கு கட்சியைக் கொண்டு வந்துவிட்டார்கள், எடப்பாடியும் பன்னீரும். பிறகெப்படி ‘மீண்டும் அம்மா ஆட்சி’ அமையும்?

 

உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக, அதிமுகவில் என்னென்னவோ நடக்கிறது!

 

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.