Skip to main content

உங்களுக்கு எதிராக நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல... அமித்ஷா மீது கோபமான கெஜ்ரிவால்... உளவுத்துறை ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் வன்முறையும் சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிலிருந்து சென்ற பிறகே, கலவரம் குறித்து தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துவிட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் அவசர ஆலோசனையை நடத்தினார் பிரதமர் மோடி. "வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறியவும் நேரடி களத்தில் நீங்கள் இறங்குங்கள்'' என மோடி உத்தரவிட்டதையடுத்து, கலவர பூமியாக மாறிப்போன டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளை பார்வையிட்டார் தோவல். பா.ஜ.க.வினரின் வெறுப்பு பிரச்சாரமே கலவரத்துக்கு காரணம் என தோவலிடம் ஆவேசப்பட்டார்கள் மக்கள்.
 

bjp



இதனையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட காவல்துறை உயரதிகாரிகளுடன் 2 மணிநேரம் விவாதித்தார் தோவல். அந்த ஆலோசனையில், சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் டெல்லி அரசு தோல்வியடைந்திருக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் கெஜ்ரிவால் சீரியஸ் காட்டவேண்டும் என அஜீத் தோவல் அறிவுறுத்திய போது, பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

குறிப்பாக, "ஷாஹின்பாக்கில் நடக்கும் அமைதிவழிப் போராட்டம் டெல்லியின் வட கிழக்கிலும் பரவுவதை உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அரசியல் ரீதியாகவே சி.ஏ.ஏ.வை அணுகுகிறார் அமித்ஷா. அவரது கட்டுப்பாட்டிலுள்ள உள்துறைக்கும் உளவுத்துறைக்கும் சில உத்தரவுகள் போயிருக்கிறது. உடனே, டெல்லிக்கு வெளியே இருந்து சமூக விரோதிகள் பலர் உளவுத்துறையால் வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு மத்தியில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

bjp



பா.ஜ.க. பிரமுகர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ்சர்மா மூவரும் உள்துறையால் தூண்டப்பட்டார்கள். அவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரம் போராட்டக்காரர்களோடு கலந்திருந்த சமூக விரோதிகளை கொந்தளிக்க வைத்தது. இதை எதிர்பார்த்திருந்த பா.ஜ.க. பிரமுகர்களின் கும்பல்கள் கற்களை வீச, சமூக விரோதிகளும் எதிர்தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. காவல்துறையின் கைகளையும் உள்துறை கட்டிப்போட்டிருந்ததால் தடுக்க வேண்டிய அவர்கள் வேடிக்கை பார்த்ததோடு, உணர்வுபூர்வமாக போராடிய மக்களை தேடித்தேடிப் பிடித்து தாக்கினர். அவர்களுக்கு இணையாக சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான இளைஞர்களும் களமிறங்க, கட்டுக்கடங்காமல் போனது கலவரம். கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

வீடியோ பதிவுகளைப் பாருங்கள். போராட்டக்காரர்களுடனும் அவர்களை எதிர்க்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுடனும் கலந்து விட்ட சமூக விரோதிகள்தான்ங்கிறது புரியும். இந்த பிரச்சனையின் சூத்திரதாரி அமித்ஷாதான்.

மக்கள் விரும்பாத ஒரு சட்டத்தை அவர்கள் மீது திணிக்கிற போது அதனை அவர்கள் எதிர்க்கிற சூழலில் அவர்களது அச்சத்தை தீர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. அந்த வகையில், போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது பயத்தை போக்கியிருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்ச்சி மத்திய அரசுக்கு இல்லை. போராட்டம் நீடிப்பதும் அதில் கலவரம் உருவாவதும் உங்களுக்கு லாபம் என கருதியதுதான் வன்முறை வெடிக்க காரணம்'' என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி சீறியிருக்கிறார் கெஜ்ரிவால்.


அதனை மறுத்துப்பேசிய காவல்துறை ஆணையர்கள், "சமூக விரோதிகள் யாரும் உள்ளே வரவில்லை. சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டங்களை ஒடுக்க எதிர்ப்பாளர்கள் உருவாக்கிய சதி இது. ஷாருக் என்ற ஒரு நபர் துப்பாக்கி நீட்டி போலீசாரை மிரட்டுகிறான். அந்த நபர் போராட்டக்காரர்கள் பக்கமிருந்து சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் பகுதியில் நின்ற போலீஸ்காரரை நோக்கி சுடுவதாக மிரட்டுகிறான். அப்படியானால் வன்முறை எங்கிருந்து துவங்கியது என்பதை முதல்வர் (கெஜ்ரிவால்) புரிந்துகொள்ள வேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

அப்போது அஜீத் தோவல், பல புகைப் படங்களை காட்டி விவரித்ததோடு, "முதல்வர்ங்கிற முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முயற்சித்திருக்க வேண் டும்'' என கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்ட, "அமித்ஷாவின் சட்டத்தை எதிர்த்துதான் போராட்டம் நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல'' என்றிருக்கிறார் கெஜ்ரிவால்.


இதனையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் விவாதித்து விட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 26-ந்தேதி இரவு சந்தித்தார் அஜீத் தோவல். நள்ளிரவைத் தாண்டியும் ஆலோசனை நீடித்தது. உளவுத்துறையிடமிருந்து சேகரித்த ஆதாரங்களை மோடியிடம் கொடுத்திருக்கிறார் தோவல். அவை அனைத்துமே போராட்டக் காரர்களுக்கு எதிரானவைகள் என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

 

 

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.