Skip to main content

இங்கு சிறை, அங்கு சிறப்பு... - உலகம் முழுவதும் அம்பேத்கரின் சிலைகள் 

Published on 14/04/2018 | Edited on 14/04/2018

இந்தியாவில் சிலை என்பது மிக முக்கிய குறியீடு. நாடு முழுவதும் கடவுள்களுக்கு சிலை உண்டு. கடவுள் மறுப்பு பேசியவர்களுக்கும் சிலை உண்டு. இரண்டும் ஒன்றல்ல. இருக்கிறதா இல்லையா என்று உறுதியற்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்த முதல் வகை சிலைகள்.  கண் முன்னே இருக்கும் மக்கள் தான் முக்கியம் என்று பேசி, வாழ்ந்தவர்களின் சித்தாந்தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் சிலைகள் இரண்டாவது வகை.  இருவகை சிலைகளுக்கும் இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் உண்டு. சமீப காலமாக சிலை அரசியல் உச்சத்தில் இருக்கிறது. திரிபுரா தேர்தலில் வென்ற பாஜக லெனின் சிலைகளை அகற்றியது. அதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா பெரியார் சிலை குறித்து  வெளியிட்ட கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளன. சமூக விடுதலைக்கு பேசிய இவர்களே சிறை வைக்கப்பட்டது நம் சாதனை.

 

ambedkar caged


இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர்.பீமா ராவ் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் இவரது சிலைகளின் நிலை இப்படியிருக்க உலகம் முழுவதும் அம்பேத்கர் எப்படி போற்றப்படுகிறார் என்று பார்ப்போம். இந்திய சட்டத்தை வகுத்த அம்பேத்கரை உலகம் முழுவதும் சட்ட மேதையாக போற்றி அவரின் சிலைகள் பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் நிறுவியுள்ளனர். 

 

120 கோடி மக்களை பெருமைப்படுத்திய கனடா 

 

ambedkar in canada


கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு யார்க் பல்கலைக்கழகத்தில்  டாக்டர்.அம்பேத்கரின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அவரது  வெண்கல சிலையை திறந்து வைத்த கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரி விஷ்ணு பிரகாஷ், "டாக்டர்.அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். இந்திய நாட்டின் தலை சிறந்த குடிமகன் அவர். யார்க் பல்கலைக்கழகம் அம்பேத்கரை மட்டும் பெருமைப்படுத்தவில்லை, 120 கோடி இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது" என்று கூறினார். உண்மைதான், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அந்த தேசத்தின் மொத்த மக்களுக்குமான சட்டத்தை வகுக்குமளவுக்கு உயர்ந்து நின்றது இந்திய மக்களின் பெருமைதானே?   

 

தன் பெருமைக்குரிய மாணவனுக்கு  அமெரிக்கா செய்தது 

 

ambedkat brandeis univ


அமெரிக்காவில் உள்ள ப்ரேன்டீஸ் பல்கலைக்கழத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அவரது வெண்கல சிலை நிறுவப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்பட்ட இரண்டாவது சிலை. முதலில் நிறுவப்பட்டது, அம்பேத்கர் தன் வாழ்வின் முக்கிய பங்காகக் கருதும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான். அங்குள்ள லெஹ்மன் நூலகத்தில் 1995ஆம் ஆண்டு, தன் பெருமைக்குரிய மாணவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது கொலம்பியா பல்கலைக்கழகம். "என் வாழ்வின் சிறந்த நண்பர்களையும் சிறந்த ஆசிரியர்களையும் இங்குதான் பெற்றேன்" என்று அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தைப் பற்றி   குறிப்பிட்டார்.  

 

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் துண்டு   

 

ambedkar at australia


கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்துக்கு அதன் விருப்பத்திற்காக அம்பேத்கரின் சிலையை பரிசளித்தது இந்திய வெளியுறவுத்துறை. அப்பொழுது பேசிய இந்திய தூதரக அதிகாரி, "இங்கு இந்த சிலை வழியாக இந்தியாவின் ஒரு துண்டு இங்கிருக்கிறது" என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான துண்டு அது.    

 

லண்டனில் அம்பேத்கர்    

 

ambedkar london



லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சில் 1973ஆம் ஆண்டு முதன் முதலாக லண்டன் கிளெமெண்ட் ஹவுசில் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டது. அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு அங்குள்ள ஆர்ட் கேலரியில் டாக்டர்.அம்பத்கரின் வெண்கல சிலை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்சில் பொருளாதாரத்தில் தனது பட்டய படிப்பை முடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு லண்டனில் அம்பேத்கர் நினைவகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
 

உலகம் முழுவதும் போற்றப்படும் இந்த மேதையின் சிலைகள், இங்கு காவி வண்ணம் பூசப்படுகின்றன, கூண்டுக்குள் வைக்கப்படுகின்றன. அம்பேத்கர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைவர்கள் பலரும் மறைந்த பின் நம்மிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார்கள்.     
 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.