Skip to main content

"நான் எப்போதும் கிங்தான் யா" - கர்ஜித்த இளையராஜா

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

ஒரு சாமானியனின் இசை, வெறும் ஆர்மோனியத்தின் கட்டைகளின் அழுத்தத்தால் மட்டும் உருவானதா அல்லது கிராமத்தின் தெம்மாங்குகளால் உருவானதா என்று கணிக்கவே முடியாத அந்த இசையை உருவாக்கிய ஞானி, நாட்டுப்புற இசையை பட்டிதொட்டி எங்கும் பரப்பி பாமரனுக்கும் இசை தாகத்தை ஏற்படுத்தி அந்த தாகத்தைத் தனது இசையாலேயே தணித்த, இசைக்கே ராஜாவாக காலத்தால் அழிக்க முடியாதபடி ரசிகர்கள் மனதில் குடியிருக்கும் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் இன்று....

 

ilayaraja

 

 

 

1943-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இசை மீது கொண்ட ஆர்வத்தாலும் அண்ணன் பாவலரின் தாக்கத்தாலும் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டு, பல மேடை நாடகங்களுக்கும் கம்யூனிச சிந்தனை நாடகங்களுக்கும் இசையமைத்த அனுபவத்துடன் 1969 சமயத்தில் சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார் அந்த இளையராஜா. திறமையுள்ள எல்லா கலைஞனுக்கும் கிடைக்கும் தொடர் தோல்வி, அவமானம் என சகல மரியாதையோடு இவரையும் வரவேற்றது தமிழ் சினிமா. வெறும் நாட்டுப்புற மெட்டும், ஹார்மோனியம் வாசிக்கத் தெரியும் என்பதும் மட்டும் போதாது என்று அன்றைய திரையுலகம் அவருக்கு உணர்த்த முற்பட்டது. பிறகு தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் முறையாகப் பியானோ மற்றும் கிட்டார் கற்றுக்கொண்டு இசைக்குழுக்களில் சேர்ந்து கிட்டார் வாசிக்கத் தொடங்கினார். இப்படி தனக்கான தேடுதலின் தடுப்புச் சுவராக வந்த எல்லாவற்றையும் உடைத்து தாண்டி தனது முதல் படமான 'அன்னக்கிளி' என்ற படத்தில் இசையமைக்க ஒப்புதலானார்.

 

ilayaraja

 

அந்த முதல் படத்தின் பாடல் பதிவு பற்றி சொல்லவேண்டும். எந்த ஒரு கலைஞனும் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்திருக்க முடியாது. அன்னக்கிளி படத்தில் அவருக்கு வாய்ப்பளித்தவர் பஞ்சுஅருணாச்சலம். தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியவர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் இப்படி பல முகங்களைக் கொண்டவர். அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் தம்பிதான் என்றாலும் 'இளையராஜா பார்க்க, விஷயம் தெரியாத சின்னப் பையன் போல் உள்ளாரே, இவரை நம்பி வாய்ப்பை கொடுக்கலாமா?' என சந்தேகத்திலேயே இருந்தார். ஆனால் ராஜாவோ சினிமாவில் சாதிக்கவேண்டுமென தீவிரமாக இருந்த சமயமது. ''சரி முதலில் ஒரு ரிகர்சல் போட்டுக் காட்டு, ஒரு டம்மி ரெக்கார்டிங் போட்டுப்பார்க்கலாம், அதன் பின் சரிப்பட்டு வருமா வராதா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்" என்று கட்டளையாகவே ராஜாவின் முன் வைத்தார் அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர்.

 

ilayaraja

 

 

 

ராஜா அப்பொழுது சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். தினமும் பல மெட்டுக்களை வாயில் முணுமுணுத்தபடி பீச் ரோட்டில் காந்திசிலை வரை நடத்து போகும் பழக்கம் அவருக்கு இருந்தது. இசையமைக்கும் முன்பே தனது வாயில் அன்னக்கிளி படத்தில் ''அன்னக்கிளி என்னை தேடுதே'' பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னே வரும் ஹம்மிங்கை எத்தனை முறை பாடியிருப்பார் என்று கணக்கே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது தயாரிப்பாளர் கேட்டுவிட்டதால் ரிகர்சல் செய்து காட்டியாக வேண்டும். எனவே கவிஞர் கண்ணதாசன் வீட்டின் அருகே இருந்த பாலாஜி திருமண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பு தனியாக அமர்ந்து அந்தப் படத்தின் இசைக்காக நோட்ஸுகளை வாசித்து எழுதத் தொடங்கினார். சரி நோட்ஸ் எல்லாம் எழுதியாச்சு... ரெக்கார்டிங்க்கு முன்னமே ''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலையும் ''மச்சானா  பார்த்தீங்களா'' பாடலையும் தயாரிப்பாளர் முன்னிலையில் ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்துக் காமிக்க ஏற்பாடு செய்தார். எந்தவொரு மின்னணு கருவிகள் எதுவுமில்லாமல் ஒரு இசைக்கருவியால் மைக் இல்லாமல்  எவ்வளவு ஒலி வருமோ, அந்த ஒலி அளவில் ''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலை பாடகி ஜானகி அவர்களை வைத்துப் பாடவைத்தார். இந்த ஒத்திகையைக் கேட்ட அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மிகவும் பூரிப்படைந்து அதன்பிறகே முழுவாய்ப்பையும் இளையராஜா பக்கம் தந்தது.

 

ilayaraja

 

 

 

அதன் பிறகு தனது முதல் பாடலை ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்தார். பாடல் பதிவின் முதல் டேக்கிற்குப் பிறகு, தான் இசையமைத்து ரெக்கார்ட் ஆன அந்த முதல் பாடலை கேட்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் இளையராஜா. ஆர்வ மிகுதியால் ஏவிஎம் சம்பத்திடம் தனது பாடல் பதிவை கேட்கவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அந்த முதல் டேக்கை பிளே பண்ணிப் பார்த்தபொழுது தொழில்நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை அதில் எதுவுமே பதிவாகவில்லை. எப்படி இருந்திருக்கும் ஒரு முதல் பட இசையமைப்பாளரின் .மனநிலை? ஆனால் அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திரும்பவும் பதிவு செய்து காட்டினார். அதன் பிறகு அந்தப் படமும் முழுதாக முடிந்து திரையில் வெளியானது. திரையில் அன்று ''அன்னக்கிளி என்ன தேடுதே'' என ஆரம்பித்த அவரது இசை பயணம் இன்னும் தேடுதல்களை நிறுத்ததியபாடில்லை.
 

ilayaraja

 

அந்த முதல் படத்தில் தொடங்கி, தற்போது ஆயிரம் திரைப்படங்களைத் தொட்டுவிட்டது அவரது இசை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும்  தகுந்தாற்போல அத்தணை இசை புதுமைகளையும் தன் ரசிகர்களுக்கு அள்ளித் தெளித்தார். 70,80களில் அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஓடின. 16 வயதினிலே படத்திலே ''சோளம் வெதைக்கையிலே'' என்ற பாடலை தானே பாடினார். அதுவே அவர் பாடிய முதல் பாடல். அதன் பிறகு அவரது இசை மட்டுமல்ல அவரது குரலில் இருக்கும் காந்தமும் மக்களை கட்டிப்போட்டது. எல்லா இடத்திலும் ராஜா பாடல்களே... மூன்று நேர உணவு போல ராஜாவின் இசையும் மக்களின் தினசரி அங்கமானது. அதேபோல் அன்றைய காதல் செய்யும் இளவட்டங்கள், காதலில் தோற்ற இளவட்டங்கள் என எல்லாருக்குமே ஒரே தீர்வு இளையராஜாவின் பாட்டுதான். இப்படி நாட்கள் உருண்டோடி இன்று 2018-ல் நிற்கிறோம். இன்றும் அவர் பாட்டு இல்லாத இடம் இல்லை. காலத்தால் அழிக்கமுடியாதது அவரும் அவரது இசையும்.

ilayaraja

 

சில மாதங்களுக்கு முன்புகூட ஏவிஎம் ஸ்டுடியோவில் ''தி ஒன் மேன் ஷோ'' என்ற இசை நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டிங்கில் இளையராஜா கலந்துகொண்டார். அப்பொழுது அவர் நடந்து வருவது, கையசைப்பது, இசையமைப்பது போன்ற பல காட்சிகள் ப்ரோமோவுக்காக படமாக்கப்பட்டது. பெரிய பெரிய ஸ்டில் போட்டோகிராபர்கள் வரவழைக்கப்பட்டு லைட் செட்டிங் எல்லாம் வைத்து அவரை ஸ்டில் போட்டோ எடுத்தனர். அப்போது பியானோவில் உட்காந்திருந்த இளையராஜாவை ஒரு போட்டோகிராபர் பல விதங்களில் போட்டோ எடுத்தார். இறுதியில், "சார் 'கிங்' மாதிரி ஒரு போஸ் கொடுங்க சார்" என்றார். அடுத்த நொடியே "நான் எப்பபோவும் கிங்தான். ராஜாகிட்டயே ராஜா மாதிரி போஸ் கொடுக்க சொன்னா...'' என சிரித்தார். அவருக்குப் பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இசையில் அவர் எப்போதுமே கிங்தான்.   

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.