Skip to main content

மொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய மனிதர்கள்? - கேரளா கொடுமை   

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு இயற்கை பழிவாங்கியுள்ளது. சேதாரம் அதிகம் என்றாலும், மக்களின் மனிதாபிமானம் அதைவிட அதிகமாக வெளிப்பட்டது. மீனவர் ஒருவர் தன் முதுகில் தாங்கி நிற்க பொதுமக்கள் அதில் ஏறி படகை அடைந்தனர். தன்னுடைய 25 நாய்களும் மீட்கப்பட்டால்தான் படகில் ஏறுவேன் என்று அடம்பிடித்தார் ஒரு பாட்டி, அதுவும் நிகழ்ந்தது. கேரளாவுக்கு நிவாரண நிதி தேவைப்படுகிறது என்றவுடன் அண்டை மாநிலங்களில் ஆரம்பித்து, அரபு தேசம் வரை நிதி தரப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல், எல்லோரையும் மீட்டுக்கொண்டு வந்தனர். 

 

kerala

 

கனமழையால் கேரள மக்கள் இவ்வாறு கஷ்டப்படும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்க்கும் நமக்கே மனதில் ஒரு சோகம் வருகிறது. அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொள்கிறோம். நம்மால் முடிந்த நிவாரணப் பொருட்களை , நிதியை சேகரித்துத்தர முன்வருகிறோம். இப்படி மனிதாபிமானம் வெள்ளமாக அனைத்து மக்கள் மனதிலும் கரைபுரண்டு ஓட, சிலர் அதிலும் விதிவிலக்காக இருக்கிறார்கள். ஒருவர் மூக்கு உயரத்தில் நீர் ஓடிக்கொண்டிருக்க, படகில் சென்று சின்சியராக கல்லு விற்கும்  வீடியோ ஒன்று வந்தது. இன்னொரு வீடியோவில் ஒருவர் பாலத்தின் மீது நின்று, பாலத்திலிருந்து ஆற்றை நோக்கி தலைகீழாக தொங்கும் தன் நண்பரை விட்டுவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தார். நீரில் சிக்கியிருக்கும் யாரையோ இருவரும் காப்பாற்றுகிறார்கள் என்று எதிர்பார்த்த நமக்கு அதிர்ச்சி. மூட்டை நிறைய மதுபாட்டில்களை அவருக்கு படகில் கொண்டு வந்து சேர்க்கிறார் ஒருவர். அவரிடம் அதைப் பெற்றுக்கொள்ளத்தான் இத்தனை பிரயத்தனம். இதுபோன்ற காட்சிகளும் அங்கு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவங்களையும் தாண்டும் அளவுக்கு 28 கல்லூரி மாணவிகளுக்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவர்கள் 'வெள்ளத்தை நினைத்து பயந்ததைவிட, எங்களை சுற்றியிருக்கும் மக்களை நினைத்து பயந்ததுதான் அதிகம்' என்கின்றனர்.

 

kerala

 

கடந்த சனிக்கிழமை அன்று ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர்.  நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லையா? இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சிக்கிக்கொண்ட விடுதியில் மூன்று தளங்கள். அதில் முதல் தளம் வரை நீர் ஓடிக்கொண்டிருக்க இந்த மாணவிகள் அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனால், கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட மக்களோ 'இவர்கள் நலமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்' என்று நினைத்துக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உணவுகூடத் தராமல், உதவியாக வந்த உணவை அவர்களே சாப்பிட்டுள்ளனர். சரி இங்கிருந்த தப்பித்தே ஆக வேண்டும் என்று எண்ணிய மாணவிகள், ஹெலிகாப்டர் அந்த வழியாக வரும்போதெல்லாம் கூச்சலிட்டுள்ளனர். தாங்கள் அணிந்த வண்ண ஷால்களை காட்டி அழைப்புவிடுத்துள்ளனர். இதை எல்லாம் பார்த்த அந்த மக்கள், ஹெலிகாப்டர் கீழே இறங்கினால் அதன் இறக்கை நம் வீடுகளை சேதப்படுத்திவிடும் என்று எண்ணி மாணவிகளை கடுமையாகத் திட்டியுள்ளனர். மேலும், அந்த மக்கள் இவர்களை வசைபாடியுள்ளார்கள். உண்ண உணவு, மருந்து என்று எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு இந்த பெண்களுக்கு எதுவும் தராமல் அராஜகம் செய்துள்ளனர். விடுதியில் இருக்கும் பெண்களுடன் ஒரு வெறுப்பிலேயே இருந்திருக்கிறது அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் குழு. தங்களை ஹெலிகாப்ட்டரில் பயணம்போகத்தான் இவர்கள் இவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என்று சொல்லி சாபம் விட்டதாகவும் சொல்கின்றனர் அந்த மாணவிகள். 'அண்டைப்பகுதி பொதுமக்களுக்கு உங்கள் மேல் என்ன வெறுப்பு?' என்ற கேள்விக்கு  'இந்த விடுதியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மாணவிகள் கல்விகற்றுவருகிறார்கள். நம் ஊர்க்காரர்களில்லை என்பதுதான் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர்.  

 

image

 

ஒரு சில ஆண்கள், விடுதியில் இருக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் பேசியதாகவும் நடந்துகொண்டதாகவும் சொல்கின்றனர். முகாமில் இருக்கும் மொத்த கூட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே இப்பெண்களையும் மனிதர்களாக நினைத்து இவர்களுக்காகப் பேசியுள்ளனர். முகாமில் இருந்தவர்கள் இப்பெண்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்ற புரிதலிலேயே இருந்துள்ளனர். ஆனால், உண்மையில் மூன்று நாட்களுக்கு சாப்பாடு, குடிக்க நீர், கழிவறை இன்றி தவித்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் மொபைல்தான். அதிலும் சார்ஜ் தீர்ந்துவிடும் என்று எண்ணி ஒவ்வொரு மொபைலாக பயன்படுத்தி தகவல்களை தெரிவித்துள்ளனர். இறுதியில், ஹெலிகாப்டருக்கு அழைப்புவிடுத்து இவர்கள் மீட்கப்படும் நேரத்திலும் வந்து பிரச்சனை செய்துள்ளனர். ஹெலிகாப்டரில் இருந்து வந்த கமாண்டோ அவர்களை சமாதானம் செய்துவிட்டு, எரிபொருள் நிரப்பி வந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் கூறிச்சென்றார். அதுபோலவே வந்து சிலரை ஏற்றிக்கொண்டு, மிச்சமிருப்பவர்களை மறுநாள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அங்கிருப்பவர்களால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று மாணவிகள் போராடி, பின்னர் படகில் அழைத்துச்செல்லப்பட்டனர்.   

 

ayyappa college

 

தற்போது தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மாணவிகள், இந்த சம்பவத்தை நினைத்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த மாணவிகள் தெரிவித்தவை அனைத்தும் உண்மையா என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பெண்கள் ஆணையம் அரசை கோரியுள்ளது. இன்னும் கேரளாவில் அவலநிலை முடிந்தபாடில்லை, அது முடிந்ததும் விசாரணை தொடரும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.

 

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.