Skip to main content

2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்?

Published on 17/10/2018 | Edited on 18/10/2018

ஒரு தாதா... தான் பிறந்த ஊருக்கு நல்லது செய்யும் தாதா... அவருடன் இருப்பவர்களே செய்யும் துரோகம், கொலை, பழிவாங்கல், வன்மம், விசுவாசம், புதிய தலைவன் உருவாகுதல்.... - கதையாகக் கேட்க இது ரொம்பப் பழசுதான். அப்புறம் என்ன இருக்கு வெற்றிமாறனின் 'வடசென்னை'யில் புதுசா? கதையைத் தவிர மற்ற எல்லாமே புதுசுதான்.

 

dhanush vadachennai



கேரம்போர்ட் விளையாடினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என தன் ஊருக்கு எல்லாமுமாய் இருக்கும் ஒருவர் சொன்னதன்படி 'போர்டு' ஆடுபவராகிறான் அன்பு (தனுஷ்). தன் ஊரை சூழ்ந்திருக்கும் குற்றப்பின்னணியிலிருந்து விலகி நல்ல வாழ்க்கை வாழலாம் என்று காத்திருக்கும் நிலையில், குணா (சமுத்திரக்கனி), வேலு (பவன்), செந்தில் (கிஷோர்), பழனி (தீனா) இவர்களிடையேயான இன்னொரு ஆட்டத்தில் தானே கேரம்போர்டு காயினாகி பிறரால் சுண்டி ஆடப்படுகிறான். பத்மாவுடன் (ஐஸ்வர்யா) காதல், சந்திரா (ஆண்ட்ரியா) அன்பு, தம்பி (டேனியல் பாலாஜி) அக்கறை ஆகியவற்றுடன் அன்புவின் வாழ்க்கையில் குறுக்கே வரும் அந்த கேங்வாரின் பின்னணி என்ன, விளைவுகள் என்ன என்பதை இன்னும் இரண்டு பகுதிகளுக்கும் மீதி வைத்து பாதி சொல்லப்பட்டிருக்கும் பெரிய கதைதான் இந்த வடசென்னை.

 

ameer


'வடசென்னை' படம் உண்மையில், ஒரு பாத்திரத்தை மையமாக வைத்து சொல்லப்படும் ஒருவரின் கதையல்ல. பல வீரியமான கதாபாத்திரங்கள் சேர்ந்து நகர்த்திச்செல்லும் கதை. ரத்தத்துடன் சேர்த்து சதையும் தெறிக்கும் கொலை, ஆசன வாயில் திணித்து போதைப் பொருளை சிறைக்குள் கொண்டு செல்பவன், சிறைக்குள் நடக்கும் கேங்வார், மக்குக் ** என கெட்டவார்த்தை பேசிக்கொண்டே  அறிமுகமாகும் நாயகி, 'இன்னாமே, துன்னியா, கஸ்மாலம்' என்றில்லாமல் உண்மையான வடசென்னை மொழியைப் பேசும் பாத்திரங்கள், அறிவொளி இயக்கம், தலைவர்கள் மறைவு என அந்தந்த காலகட்டத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளையும் கதைக்குள் சேர்த்த சாமர்த்தியம், து.ஜ.த, பொ.ஜ.போ என்பது போல கற்பனை கட்சிகளை மட்டும் கதையில் வைக்காமல் அந்த காலகட்டத்தின் உண்மை அரசியல்வாதிகளையும் கட்சியையும் காட்டிய தைரியம், நாயகன் நாயகியல்லாமல் ஒரு டஜன் பாத்திரங்களின் பெயர்களை நம் மனதில் பதித்த ஆழமான கதாபாத்திர வடிவமைப்பு என  'வடசென்னை'யில் ஒரு நூறு அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் நமக்கு வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பதினோரு வருடங்களில் இது நான்காம் படம். எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு திரைப்படத்தையும் தரமான ஒரு சினிமா அனுபவமாக ரசிகர்களுக்கு அளிக்கும் வெற்றிமாறனுக்கு நன்றி. உண்மையான வடசென்னை, அதன் மொழி, வாழ்க்கை, மக்கள் என இவைதான் இந்தத் திரைப்படத்தின் பெரும் பலம். உண்மைக்கு அருகே என்பதால் மிக மெதுவாக அலுப்பாக நகராமல் கேங்வாரும் விறுவிறுப்பாய் பரபரப்பாய் இருக்கிறது.

 

kishor daniel balaji



ஒரு ஊரை, நிலத்தைப் பற்றிய படமென்பதால் அந்த வாழ்க்கையை முழுமையாகத் தூக்கிவைத்து புனிதப்படுத்தாமல், அவர்களின் தொழில், வாழ்க்கை முறை, கெட்ட வார்த்தைகள் என இயல்பாகப் படமாக்கியிருப்பது நம்மையும் வடசென்னை வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே 'இது வடசென்னை வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே' என்று அறிவித்துவிடுகிறார்கள். இருந்தாலும் வன்முறை, குற்றம், சட்ட விரோதம் போன்றவைதான் அந்த ஊரின் வாழ்க்கையோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது படம். விறுவிறுவென சென்றாலும் ஒரு கொலை, பதில் கொலை, பதில் கொலை என்று செல்வது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் ஆழமாக பல பரிமாணங்கள் கொண்டதாக இருக்கிறது. படத்தைத் தாங்கி நிற்பதும் அத்தகைய பாத்திரப்படைப்பே. சமீபமாக தமிழ் படங்களில் நாம் அடிக்கடி பார்க்கும் நில அரசியல், இதிலும் உண்டு.
 

andrea aiswarya



தனுஷ், படத்தின் இடத்தை அடைக்காமல், ஆனால் கிடைத்த இடத்திலெல்லாம் பக்குவமாக நம்மைக் கவர்கிறார். அவருக்கு அமைந்த ஓரிரு சண்டைக்காட்சிகளில் 'மாஸ்' விரும்பிகளை திருப்திபடுத்தியுள்ளார். ஒரு நாயகனுக்கு மாஸ் என்பது கதைக்குள் இயல்பாக எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் படம் உதாரணம். அமீர், சமுத்திரக்கனி, 'டேனியல்' பாலாஜி, கிஷோர், பவன், தீனா, பாவல் நவகீதன், சுப்ரமணிய சிவா தொடங்கி படத்தின் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்தவர்களும் கூட மிக இயல்பாக, சிறப்பாக நடித்துள்ளனர். காட்சிகள் ஆங்காங்கே நீளமாக சென்றாலும், நடிகர்கள்தான் அதை அலுக்காமல் கடத்திச் செல்கிறார்கள்.

'ராஜன்' அமீர் வரும் பெரும்பாலான காட்சிகள் கூஸ்பம்ப் மொமெண்ட்தான். உண்மையில் இந்தப் பாத்திரத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி மிஸ் பண்ணிவிட்டார். அமீர், அழுத்தமாக நடித்துள்ளார். கண்களில் வன்மமும், பேச்சில் பொறுமையும் வெளிப்படுத்தி நடித்திருக்கும் ஆண்ட்ரியா அசர வைக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த நாயகிக்கும் கிடைக்காத ஒரு ஓப்பனிங் காட்சி ஐஸ்வர்யாவுக்கு. அதை அசால்டாகப் பேசி, நடித்து ஆச்சர்யத்தை  உண்டாக்குகிறார், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். ராதாரவி, 'ஆடுகளம்' படத்தில் தன் குரலில் காட்டிய வஞ்சகத்தை (பேட்டைக்காரன் பாத்திரத்துக்கு) 'வடசென்னை'யில் தோன்றிக் காட்டியிருக்கிறார்.

 

radharavi



வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு உடைந்த சாமியானா பந்தலுக்கடியில் நடக்கும் சண்டைக்காட்சி ஒன்றே உதாரணம். பதற்றத்தையும் பயத்தையும் இசையுடன் இணைந்து பெருக்குகிறது ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணன், தன் 25ஆவது படத்தில் மிரட்டலான இசை ஆட்சி நடத்தியிருக்கிறார். பின்னணி இசை, காட்சிகளை ஒரு அடி தூக்கிப்பிடிக்கிறது. பாடல்கள் வணிகத்தைத் தேடாமல், படம் பேச விரும்பும் வாழ்க்கையைத் தேடிக்காட்டுகின்றன. வெங்கடேஷ்- ராமர் படத்தொகுப்பு பல்வேறு காலகட்டங்களை மாற்றி மாற்றிக் காட்டினாலும் குழப்பமில்லாமல் நல்ல திரைப்பட அனுபவத்தைத் தருகிறது. கலை இயக்கம் பீரியட்களை மிக எதார்த்தமாகக் கொண்டுவந்துள்ளது. '4 கெட்டவார்த்தை, 2 முத்தம், பல கொலைகள்... வேற எதுவுமில்லையா  வடசென்னையில்?' என்று கேட்டால் பதிலாக இத்தனை விஷயங்கள் வருகின்றன. கொஞ்சம் உற்று நோக்க வேண்டும், பக்குவமாகப் பார்க்கவேண்டும். 'A' சான்றிதழ் பெற்றிருப்பதால் குழந்தைகள் பார்க்க தடை செய்யப்பட்டிருக்கிறது. பெரியவர்களுக்குமே இந்தப் படத்தை ரசிக்க வேறொரு ரசனை வேண்டும்.

திரைமொழி என்பது பாலிஷ் செய்யப்பட்டு, வெள்ளையாக்கப்பட்ட அரிசியாக இருக்கவேண்டியதில்லை, ராவாக குருணையாகக் கூட இருக்கலாம், சுவையாக இருக்கும் என்று நிறுவியிருக்கிறது வடசென்னை. 'போதுமப்பா' என்று சொல்லவைக்காமல் இரண்டாம் பாகத்துக்காகக் காக்கவைத்து வெற்றி பெற்றிருக்கிறது 'வடசென்னை'.      

 

                                   
       

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Maajja Company Explains Santhosh Narayanan's Allegation regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்திய மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில், கடந்த 5 ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது” எனப் பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியது. 

இதையடுத்து மற்றொரு பதிவில், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர். ரஹ்மான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் நாராயனன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நோயல் கீர்த்திராஜ் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை மறுத்து மாஜா நிறுவனத்தின் பதில் அறிக்கை. சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான என்ஜாய் என்ஜாமியின் வெற்றி எமக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையடுத்து, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புகளில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்தி வைக்கும் செயல்களை செய்யவில்லை. இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அது தவிர, கலைஞர்களின் ஒப்பந்த கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு உரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“ஏ.ஆர். ரஹ்மானும் பாதிக்கப்பட்டுள்ளார்” - சந்தோஷ் நாராயணன்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
ar rahman also victim in Maajja fiasco said by santhosh narayanan regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்கள கடந்துள்ளது. 

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில் சந்தோஷ் நாராயணன் நேற்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளதாகத் தெரிவித்து இதுவரை இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த பாடலுக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றி. இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

இந்த அனுபவத்தால் நான் சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு, தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கும் வருவாயைப் பெறுவதற்கும் எந்த இடையூறும் இல்லாமல் எதுவாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதைப் பதிவிட காரணம், நான் சுயாதீன இசைக் கலைஞர்களுக்காக இருக்கிறேன். அவர்களின் வருவாயை உறுதி செய்வேன். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத் தளத்தில் சொல்ல விரும்பினேன். ஆனால் சுயாதீன இசைக் கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் ஒரு பதிவிட்ட சந்தோஷ் நாராயணன், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர் ரகுமான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிவு, தீ, நான் உட்பட யாரும் எங்களது வருமானத்தை இதுவரை பெறவில்லை. ஈமெயில்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தத் தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனது வழிகாட்டியான பா. ரஞ்சித் மற்றும் அறிவுடன் மீண்டும் பணி புரிவேன். அனைத்து இந்தியக் கலைஞர்களுமே விரைவில் அவர்களது நிலுவையைப் பெறுவார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.