Skip to main content

புதிய ஜானர் கை கொடுத்ததா? - ‘சொப்பன சுந்தரி’ விமர்சனம்!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

soppana sundari movie review

 

ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் கதையின் நாயகியாக களம் இறங்கி இருக்கும் படம். இந்த தடவை முதல் முறையாக டார்க் காமெடி படம் மூலம் களத்தில் குதித்துள்ளார். இந்த புதிய ஜானர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கை கொடுத்ததா?

 

ஸ்லம்மில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நகை கடையில் வேலை செய்கிறார். அந்த நகை கடைக்கு நகை வாங்க வரும் தன் அண்ணன் கருணாகரன் அங்கு கொடுக்கும் ஒரு கூப்பனை தன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். அந்த கூப்பனை தன் பெயர் போட்டு குலுக்களில் சேர்த்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் அந்த குலுக்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கார் பரிசாக விழுகிறது. அந்தக் காரை வரதட்சணையாக கொடுத்து தன் ஊமை அக்கா லட்சுமி பிரியா சந்திர மௌலியின் திருமணத்தை நடத்த ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிடுகிறார். அந்த நேரம் பார்த்து அந்த கார் தனக்கு தான் சொந்தம் என அண்ணன் கருணாகரன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை அடுத்து போலீஸ் அந்த காரை ஜப்தி செய்து விடுகிறது. இப்போது அந்த கார் யாருக்கு சொந்தம்? போலீஸில் இருந்து அந்த கார் மீட்கப்பட்டதா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

ஒரு காம்பாக்ட்டான பட்ஜெட்டில் சில பல சுவாரஸ்ய எலிமெண்ட்களோடு சேர்ந்து டார்க் காமெடி படமாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் எஸ் ஜி சார்லஸ். இந்த படம் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் சாயலில் எடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு சற்று பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் அதுவே படத்திற்கு பல இடங்களில் பாதகமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதி ஆங்காங்கே தொய்வாக இருந்தாலும் இரண்டாம் பாதி பல்வேறு திருப்பங்களுக்கிடையே பயணித்து சுவாரசியத்தை கூட்டி ரசிக்க வைத்து கரை சேர முயற்சி செய்திருக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த வேகமும் டிவிஸ்டுகளும் முதல் பாதியில் இருந்திருந்தால் இன்னும் கூட கவனிக்கத்தக்க படமாக இது மாறி இருக்கும்.

 

வழக்கம்போல் லோக்கல் பெண்ணாக வரும் கேரக்டரை சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தெந்த இடங்களில் எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் வேணுமோ, எந்த அளவு நடிப்பு வேண்டுமோ அதை சரியான அளவில் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்திருக்கிறார்கள்

 

அவருடைய அம்மா விஜய் டிவி தீபா மற்றும் அக்கா லட்சுமி பிரியா சந்திரமௌலி. இதில் தீபா வழக்கமான கலகலப்பு நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருந்தாலும் இவரைக் காட்டிலும் வாய் பேச முடியாத கேரக்டரை மிகச் சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனிக்க வைத்துள்ளார் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இவரின் சின்ன சின்ன முக அசைவுகளும் ஏக்கமான பார்வையும் கேரக்டரை அப்படியே உள்வாங்கி என்ன வேண்டுமோ அதை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளது. அண்ணனாக நடித்திருக்கும் கருணாகரன் தனக்கு என்ன வருமோ அதை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி, டான்ஸ் மாஸ்டர் சதிஷ், போலீஸ் அதிகாரி சுனில் மற்றும் சிறிது நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு ஜீவனாக அமைந்திருக்கின்றனர். 

 

ஸ்லம் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலமுருகன். அதேபோல் இரவு நேர காட்சிகளும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை கதையோடு ஒன்றி அமைந்துள்ளது. பல இடங்களில் அதுவே நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறது. ஒரு சிம்பிளான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதில் மெனக்கெட்டு டார்க் காமெடிகளை சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் இரண்டாம் பாதியில் அவர் கதைக்கு கொடுத்த கவனத்தை முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

 

சொப்பன சுந்தரி - கலகலப்பான சுந்தரி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

மீண்டும் கவர்ந்ததா குறட்டை செண்டிமெண்ட்? - டியர் விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
gv prakash aishwarya rajesh starring dear movie review

குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது? 

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

gv prakash aishwarya rajesh starring dear movie review

நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.

ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

gv prakash aishwarya rajesh starring dear movie review

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். 


டியர் - பாவம்!