Skip to main content

ஆக்‌ஷன் கதைக்களம் வெற்றி கிட்டியதா? - மிஷன் சேப்டர் - 1 விமர்சனம்!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
mission chapter 1 movie review

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பொங்கல் ரேஸில் சைலன்டாக கலந்து கொண்டிருக்கும் திரைப்படம் மிஷன் சேப்டர் - 1. அவ்வப்போது சறுக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய் அதிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கில் அருண் விஜய்யோடு கைகோர்த்து இப்படத்துடன் கோதாவில் குதித்திருக்கிறார். இதில் அவருக்கு வெற்றி கிட்டியதா இல்லையா? என்பதை பார்ப்போம்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் தன் மகளுக்கு உடனடியாக தலையில் ஆபரேஷன் செய்ய லண்டனுக்கு விரைகிறார் போலீஸ் ஆபிஸர் அருண் விஜய். போன இடத்தில் மகளின் ஆபரேஷனுக்காக பணம் குறைவாக இருப்பதால் ஹவாலா மூலம் பணம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் அருண் விஜய். அந்த சமயம் சில கொள்ளைக்காரர்கள் அவரிடம் இருக்கும் அடையாள ரூபாய் நோட்டை திருடப் பார்க்கிறார்கள். இதனால் அருண் விஜய்க்கும் அவர்களுக்கும் ஒரு பப்ளிக் பஸ்ஸில் மோதல் ஏற்படுகிறது. அந்த சண்டையில் அருண் விஜய் போலீஸிடம் சிக்கி லண்டன் ஜெயிலுக்கு செல்ல நேர்கிறது. குறித்த நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால் தன் மகளைக் காப்பாற்ற இயலாத ஒரு சூழ்நிலை அருண் விஜய்க்கு ஏற்படுகிறது. எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியேறும் நோக்கில் இருக்கும் அருண் விஜய் எடுக்கும் முயற்சிகளில் தோல்வியே கிடைக்கிறது. இதனால் மிகுந்த ஏமாற்றத்தோடு சோர்ந்த நிலையில் இருக்கும் அருண் விஜய் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து விடுகிறது. அந்த நேரம் பார்த்து அதே சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் சிலர் வெளியே இருக்கும் வேறொரு தீவிரவாதிகளின் உதவியோடு சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியை அருண் விஜய் சோலோவாக முறியடிக்கிறார். இதனால் அந்த தீவிரவாதிகளின் பார்வை அருண் விஜய் பக்கம் திரும்புகிறது. இதையடுத்து அருண் விஜய் எப்படி தீவிரவாதிகளை சிறையில் இருந்து தப்பிக்க விடாமல் தடுக்கிறார்? தன் குழந்தையின் ஆபரேஷன் என்னவானது? அக்குழந்தை உயிர் பிழைத்தாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆக்சன் படத்தோடு பொங்கல் ரேசில் களம் இறங்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அவருக்கு இந்த மிஷின் படம் வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்ததா என்றால்? ஆம்!! என்று சொல்ல வைத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க படத்தை சிறையிலேயே எடுத்து அதையும் சுவாரஸ்யமான திரைக்கதையோடு கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். கதை புதியதாக இருந்தாலும் அவர் எடுத்துக்கொண்ட திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் சற்று யூகிக்கும்படி அமைந்திருந்தாலும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் பெரிதாக சோர்வை ஏற்படுத்தாமல் இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இந்த படம் மூலம் ஏ.எல். விஜய் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே ஒரு சிறைச் சாலையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் அவை விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படி அமைந்திருப்பது பொங்கல் ரேசில் மெதுவாக கலந்து வேகமாக வெற்றிக்கனியை பறித்திருக்கிறது. 

நாயகன் அருண் விஜய் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இப்படத்திற்காக கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இவரது அர்ப்பணிப்பான நடிப்பும் உடல் மொழியும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. போலீஸுக்கான அத்தனை விஷயங்களும் இவருக்கு அழகாக அமைந்திருக்கிறது. அந்த அளவு மிடுக்கான தோற்றத்திற்காக தன் உடலை நன்றாக வருத்தி பாடி பில்டிங் செய்திருக்கிறார். இவருடன் இணைந்த நாயகி எமி ஜாக்சன் இந்த முறை ரொமான்ஸ் செய்யாமல் ஆக்‌ஷனிலும் கலக்கியிருக்கிறார். லண்டன் சிறைச்சாலையின் ஜெயிலராக வரும் இவர் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாகவே காணப்படுகிறார். தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சிறையில் அருண் விஜய்யின் நண்பராக வரும் அபி ஹாசன் மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அவருக்கு இது ஒரு நல்ல கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. படத்தில் இன்னொரு நாயகியாக வரும் நிமிஷா சஜயன் தன் பங்குக்கு மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். படத்தின் மெயின் நாயகியாக வரும் அருண் விஜய்யின் மகள் சிறுமி பேபி இயல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இந்த சிறுமியின் எதார்த்த நடிப்பு படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. நிமிஷா சஜயன் தம்பியாக நடித்திருக்கும் நடிகர், நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த மற்ற ஹாலிவுட் நடிகர்களும் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர்.

பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையை சிறப்பாக மீண்டும் ஒருமுறை கையாண்டு படத்திற்கு பக்கபலமாய் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். பொதுவாக ஏ.எல். விஜய் கூட்டணியில் இவர் இணையும் படங்களில் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமையும். ஆனால் கடைசியாக இவர்கள் இணைந்த சில படங்களில் பாடல்கள் சுமார் ரகமாகவே இருக்கின்றன. அது இந்தப் படத்திலும் அப்படியே இருப்பது சற்று மைனஸ் ஆக பார்க்கப்பட்டாலும் பின்னணி இசையில் மாஸ் காட்டி அதை சரி செய்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இருந்தும் ரசிகர்கள் மிஸ் செய்யும் விஜய் - ஜிவி பிரகாஷ் காம்போ மீண்டும் ஒரு ஆல்பம் ஹிட் தர இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது சந்தீப் கே விஜய்யின் நேர்த்தியான ஒளிப்பதிவு. பொதுவாக ஏ.எல். விஜய் படங்கள் என்றாலே ஒவ்வொரு ஃப்ரேமும் மிக அழகாகத் தென்படும். அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை வைத்துக்கொண்டு அவர் செய்யும் மேஜிக்கை இந்த படத்தில் அறிமுக ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய்யை வைத்துக்கொண்டே அதே மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தீப். அவருடைய உழைப்பு நன்றாக தென்படுகிறது. குறிப்பாக சிறைச்சாலை சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அது படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு அதுவும் ஒரே ஒரு சிறைச்சாலைக்குள் நடக்கும் கதையை ஒரு முழு நீளப் படமாகக் கொடுத்து, அதை விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் திரைக்கதை அமைத்து ரசிக்கும்படி கொடுத்து பொங்கல் ரேஸில் சைலண்டாக ஃப்ரண்ட் ரன்னர் லிஸ்டில் இணைந்திருக்கிறது இந்த மிஷன் சேப்டர் - 1 திரைப்படம்.

மிஷன் சேப்டர் - 1 - இட்ஸ் ஏ.எல். விஜய் கம்பேக்!

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார். 

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.