Skip to main content

'செஞ்சுடுவேன்’ மாரி... செஞ்சது என்ன? யாரை? மாரி 2 விமர்சனம்  

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

புறா பந்தயத்தையும் செம்மரக் கடத்தலையும் மையமாக வைத்து ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் மாரி. தனுஷ் அந்தப் படத்தில் மாரியாக செய்யும் சேட்டைகளும், ரோபோ ஷங்கர், வினோத் கூட்டணி காமெடிகளும் படத்திற்கு பெரிய ஹைலைட்டாக அமைந்தன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது மாரி 2.
 

mari 2



முதல் பாகத்தில் வேலு அண்ணனாக நடித்த சண்முகராஜனின் மகனாக கிருஷ்ணா... தனுஷும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சண்முகராஜன் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்போது ஒரு நாள் தனுஷ் வில்லன் டோவினா தாமஸின் அண்ணனை கொலை செய்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த டோவினா தாமஸ் ஜெயிலிலிருந்து தப்பித்து தனுஷை கொலை செய்ய வெளியே வருகிறார். இதற்கிடையே அராத்து ஆனந்தி என்ற சாய்பல்லவிக்கும் தனுஷுக்கும் காதல்... டோவினா தாமஸுக்கும் தனுஷுக்கும் ஒரு பக்கம் பிரச்சனை, அதேநேரம் தனுஷ் - கிருஷ்ணா நட்பிலும் விரிசல் ஏற்படுகிறது. பிரச்சனைகளையும், தன் எதிரிகளையும் மாரி என்ன செஞ்சார், எப்படி செஞ்சார் என்பதுதான் மாரி 2.

 

sai pallavi



நடிகர் தனுஷ் அதே வழக்கமான நடிப்பால் மாரியை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்துகிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சில சேட்டைகள் செய்து ரசிக்க வைத்துள்ளார். நாயகி சாய்பல்லவி வரும் இடங்கள் எல்லாம் அமர்க்களம். அசால்டாக சென்னை பாஷை பேசி அதகளப்படுத்தி உள்ளார். குறிப்பாக தன் நடனத்தால் நம்மை ப்ரேமம் கொள்ள வைக்கிறார். படத்தோடு பார்வையாளர் உணர்வுப்பூர்வமாக இணையும் ஒரே புள்ளியாக சாய் பல்லவி இருக்கிறார். ரோபோ ஷங்கர் மற்றும் அடிதாங்கி வினோத் கூட்டணி காமெடிகள் சென்ற பாகத்தைக் காட்டிலும் இதில் சற்று குறைவு. ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் நகைச்சுவை குறைவாக இருப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. வில்லன் டோவினா தாமஸின் பேச்சில் மலையாள வாசனை அதிகம். இருந்தும் சில இடங்களில் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். மலையாளத்தில் நன்றாக வளர்ந்துவரும் ஹீரோவான டோவினா தாமஸின் தமிழ் அறிமுகம் சற்றே காமெடியானது போலத்தான் தோன்றுகிறது. வரலட்சுமி சரத்குமார், சற்றே சர்காரை நினைவுபடுத்துகிறார். கிருஷ்ணா, அஜய் கோஷ், வித்யா பிரதீப், ஆகியோர் அவரவர் பாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளனர்.

 

tovino thomas



'மாரி' படம் விமர்சனப் பார்வையில் ஒரு சிறந்த படமில்லையென்றாலும் மாரி, சனிக்கிழமை, அடிதாங்கி இவர்கள் 3 பேரும் சேர்ந்து செய்த சேட்டையான காமெடிகள், பாடல்கள், தனுஷின் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் போன்றவற்றால் பொழுதுபோக்குப் படமாக வெற்றி பெற்றது. மாரி என்ற ஒற்றை பிராண்டை மனதில் வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். படம் ஆரம்பத்தில் மிகுந்த பில்டப்புடன் ஸ்லோவாக ஆரம்பித்துப் பின் ஆங்காங்கே சில அட்டகாச காமெடிகளை வைத்து முதல் பாதி நகர, பின் இரண்டாம் பாதி நிறைய சென்டிமெண்டுடன் உணர்ச்சிபூர்வமான காட்சிகளோடு செல்கிறது. இந்த சென்டிமென்ட் காட்சிகள் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் இந்தப் படத்தில் இது தனித்தே நிற்கிறது. முதல் பாதி அறிமுகம், காமெடி, சாய் பல்லவி என சற்று வேகமாக சென்று விட இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'மாரி'யில் வில்லன் பாத்திரம் பலவீனமாக இருக்கும், 'மாரி 2'விலும் அதே குறை.

மாரியின் பெரும் பலம் அனிருத்தின் இசை. யுவன் சங்கர் ராஜா, தன் ஸ்டைலில் அதற்கு ஈடு கொடுத்துள்ளார். இரண்டு பாடல்களும் வில்லன் டோவினா தாமஸூக்குக் கொடுத்த பின்னணி இசையும் மிரட்டல். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை வேகமாகக் காட்ட முயற்சி செய்துள்ளது.

மாரி அடிக்கடி சொல்லும் வார்த்தை 'செஞ்சுருவேன்', என்ன செய்கிறார் யாரை செய்கிறார் என்பது படம் பார்த்தால் புரியும். பலமான கதை, பாத்திரம் ஆகிய அடித்தளங்களுக்கு மேல் கட்டப்படும் ஹீரோயிசம்தான் சிலிர்ப்பூட்டும், கொண்டாடப்படும். பாலாஜி மோகன் இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.      
   

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.