Skip to main content

என்ன வகையான காதல் கதை? - ‘குஷி’ விமர்சனம்!

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Kushi Movie Review

 

இந்திய சினிமாவில் அவ்வப்போது ஏதோ ஒரு காதல் காவியம் வெளியாகி ரசிகர்கள் மனதை வருடி வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது நேரடி காதல் காவியங்கள் வெளியாகி ஹிட் அடிக்காவிட்டாலும் சமீப காலங்களாக பேன் இந்தியா படங்களாக வெளிவரும் காதல் காவியங்கள் அனைத்து மாநிலங்களையும் கடந்து தமிழிலும் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவை மையப்படுத்தி தமிழில் வெளியாகியிருக்கும் பேன் இந்தியா படமான குஷி எந்த அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளது?

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத விஜய் தேவரகொண்டாவுக்கு காஷ்மீரில் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதனால் அவர் காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு போன இடத்தில் முஸ்லிம் பர்தா அணிந்திருக்கும் சமந்தாவை பார்க்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு பார்த்த உடனேயே காதல் பற்றிக் கொள்கிறது. சமந்தாவை துரத்தி துரத்தி விஜய் தேவரகொண்டா காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவின் காதலை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் தான் ஒரு ஆர்த்தடாக்ஸ் பிராமின் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார் சமந்தா. இதனால் இரண்டு பேர் குடும்பத்திலும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளும் இவர்களது வாழ்க்கையில் மத வழிபாடு ஒரு தடையாக வந்து நிற்கிறது. இதனால் இவர்களுக்குள் ஒரு பிரிவு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா சமந்தா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிபிக்கல் சினிமாடிக் லவ் ஸ்டோரியை கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே காதல் டெம்ப்ளேட்டில் உருவாகி இருக்கும் இந்த காதல் கதையில் வித்தியாசமாக கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும் ஒருவருக்கும் இடையிலான காதல் என்ற புதுமையான விஷயத்தை உட்புகுத்தி அதற்குள் நடக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும், காதலையும், பாசத்தையும், பிரிவையும், நேசத்தையும் கலகலப்பாகக் கூறி படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் சிவ நிர்வாணா. ஆத்திகம் பேசும் சமந்தா குடும்பம், நாத்திகம் பேசும் விஜய் தேவரகொண்டா குடும்பம். இவர்களுக்கு இடையே நசுக்கப்படும் விஜய் தேவரகொண்டா - சமந்தா காதல் எப்படி மீண்டும் துளிர்விட்டு, இரு வீட்டார்களை சமாதானம் செய்து அதே சமயம் நாயகன் நாயகி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கலகலப்பாகவும் ஜனரஞ்சகமாகவும் கூறி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்படி செய்திருக்கிறார் இயக்குநர் சிவா நிர்வாணா.

 

முதல் பாதி முழுவதும் கலகலப்பான காதல் காட்சிகளாக நகர்கிறது. அது சற்றே நம்மை சோதிக்கும்படி இருந்தாலும் மனதை வருடும்படியான பாடல் காட்சிகளும் அழகாக காட்சி அமைக்கப்பட்ட காஷ்மீரின் அழகும் இதையெல்லாம் மறக்கடிக்கச் செய்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சனை இரண்டாம் பாதியில் ஆரம்பித்து படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனைகளை மிக ஜனரஞ்சகமாகவும் நேர்த்தியாகவும் கூறிய இயக்குநர் அதற்கான சரியான தீர்வை கூறி படத்திற்கு பாஸ் மார்க் வாங்கி கொடுத்திருக்கிறார். நாயகன் விஜய் தேவரகொண்டா வழக்கம்போல் அழகாக இருக்கிறார் அளவாக நடித்திருக்கிறார். இவருக்கும் சமந்தாவுக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக அமைந்திருக்கிறது. இருவரும் மிக அழகாக தோற்றமளித்து மிகவும் சார்மிங்காக இருக்கின்றனர். அதற்கு இருவருடைய பிட்னஸ் லெவல் வெகுவாக உதவி புரிந்துள்ளது. இருவரும் கல்லூரி மாணவர்கள் போல் அவ்வளவு இளமையாக தோற்றமளிக்கின்றனர். அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

 

காதல் காட்சிகளிலும் சரி திருமணம் ஆன பிறகு வரும் கணவன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சரி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர். காதல், பாசம், சண்டை, பிரிவு, நேசம் என ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஏற்றார் போல் தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். காமெடி காட்சிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தா, ராகுல் ராமகிருஷ்ணா, முகமது அலி ஆகியோர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தில் கலகலப்பை கூட்டி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்து திரையரங்கில் கைதட்டல் பெற்றுத் திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் தேவர் கொண்டாவின் அப்பாவாக வரும் நாத்திகவாதி சச்சின் கெடேகர், சமந்தாவின் அப்பாவாக வரும் ஆத்திகவாதி முரளி ஷர்மா ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இப்படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் சின்ன சின்ன வில்லத்தனம் காட்டி படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். இவர்களின் அனுபவ நடிப்பு சிறப்பாக அமைந்து படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

 

விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் கடவுள் பக்தியோடு நடித்து ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறார். சமந்தாவின் பாட்டியாக வரும் மூத்த நடிகை லட்சுமி அவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் திருப்புமுனையாக நடித்திருக்கும் ஜெயராம், ரோகிணி ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி கதைக்கும் திரைக்கதைக்கும் தூண் போல் நின்று காத்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் நடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். ஹிருதயம் புகழ் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். இவரது பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதுவே இந்த படத்தின் யூ.எஸ்.பியாக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. அதேபோல் இவரது பின்னணி இசையும் காதல் காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் மிக அழகாக நம்முள் ஊடுருவி படத்திற்கு உயிரூட்டி உள்ளது.

 

முரளி. ஜி ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சமந்தா - விஜய் தேவரகொண்டா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒரு காதல் படமாக பார்க்கும் பொழுது நாம் ஏற்கனவே பார்த்து பழகிய டெம்ப்ளேட்டில் இப்படம் இருந்தாலும், மனதை வருடும்படியான பாடல்களோடு படமும் ரசிக்கும்படி அமைந்துள்ளது இப்படத்திற்கு பிளஸ் ஆக மாறி படத்தையும் வெற்றிப் படமாக மாற்றி இருக்கிறது. அதேபோல் படத்தில் சொல்லப்பட்ட ஆத்திகம், நாத்திகம் சம்பந்தப்பட்ட மெசேஜும் இந்த கால காதலுக்கு ஏற்றார்போல் அமைந்திருப்பதும் படத்திற்கு இன்னொரு பிளஸ்.

 

குஷி - கலர்ஃபுல் காதல்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகரின் கேள்வியும் - சமந்தாவின் பதிலும்  

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
samantha reacted fans comment regards naga chaitanya

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு 'விண்ணைத் தாண்டி வருவாயா' தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக சமந்தா தொடங்கிய திரையுலகப் பயணம் குறுகிய காலத்தில் பேன் இந்திய அளவில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தனித்துவமாக நடித்து தனக்கென்று தனியிடத்தை திரையுலகில் பிடித்தவர் சமந்தா. திரையுலகில் வளர்ந்த நட்சத்திரமாக சமந்தா இருந்தாலும், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தின் மூலம் சமகால உச்ச நட்சத்திரம் நயன்தாராவுடன் எந்த வித ஈகோவுமின்றி நடித்தார். 

இதனிடையே, நடிகை சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யா உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்தார். இருவரும் விலகி தனியாக வசித்து வருகின்றனர். அதன் பிறகும் நடித்து வந்த சமந்தா, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா..' என்ற பாடலுக்கு மட்டுமே நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான 'சிட்டாடெல்'-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.

தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ஹெல்த் பாட்கேஸ்ட்' ஒன்றைச் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஒருசில படங்களிலும் கமிட்டாகி தனது பணியை மீண்டும் தொடர்ந்து வருகிறார். நடப்பு ஆண்டு மூலம் சமந்தா திரைத்துறைக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியம் தொடர்பான பாட்காஸ்ட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகா வீடியோ ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார். தனது தினசரி வழக்கத்தில் யோகா எவ்வளவு முக்கியமானது? என்பதையும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் வீடியோ ஒன்றை சமந்தா பதிவிட்டிருந்தார். அதில், "நான் தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன். சூரிய உதயத்தில் சில நிமிடங்கள் இருப்பேன். அதன்பிறகு மூச்சு பயிற்சி செய்வேன். 25 நிமிடங்கள் தியானம் செய்வேன். உற்சாகமாக அன்றைய தினத்தை தொடங்க இதன் மூலம் எனக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது..'' என ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.  

ஆனால், அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவர் சமந்தாவை சங்கடப்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டார். அந்த ரசிகர், “ஏன் உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏமாற்றினீர்கள் என்பதை சொல்லுங்கள்..” என்று பதிவிட்டார். அந்த வீடியோவிற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட் குவிந்த நிலையில், முன்னாள் கணவர் பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு மட்டும் சமந்தா பதில் அளித்துள்ளார். அதில், “மன்னிக்கவும்.. இந்த யோகா நடைமுறைகள் உங்களுக்கு உதவாமல் போகலாம். உங்களுக்கு வலிமையான ஒன்று தேவைப்படலாம்.. நல்லா இருங்க..” என்று பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்தக் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற ஹேட்டர்களுக்கு பதிலளித்து உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் எந்த விஷயமும் தெரியாமல் இதுபோன்ற கேள்விகளை எப்படி உங்களால் கேட்க முடிகிறது, அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய பயனருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.