Skip to main content

விஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி? - சண்டக்கோழி 2 விமர்சனம் 

Published on 19/10/2018 | Edited on 19/10/2018

2005இல் வெளிவந்த 'சண்டக்கோழி' திரைப்படம் பலருக்கும் பல விதங்களில் முக்கியமானது. விஷாலை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் செய்தது 'சண்டக்கோழி'. 'ஜி' தோல்விக்குப் பிறகு லிங்குசாமியை மீண்டும் வெற்றி இயக்குநராக்கியது 'சண்டக்கோழி' திரைப்படம்தான். ராஜ்கிரண், அதற்கு முன்பே 'கம்-பேக்' கொடுத்திருந்தாலும் தன் பழைய பாணி கெத்துடன் வளம் வந்தது இந்தப் படத்தில்தான். யுவனுக்குத் தேவைப்பட்ட மாஸ் வெற்றி உள்பட பல விதங்களில் இந்தப் படம் முக்கியமான படமாக இருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக சண்டக்கோழி 2 வெளிவரும்போது இயல்பாக எதிர்பார்ப்பு உருவாகிறது. தனது இரண்டாம் படமான சண்டக்கோழியில் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகும் சேவலாக விஷால் கலக்கியிருந்தார். இப்போது, சண்டக்கோழி-2, விஷாலுக்கு 25ஆவது படம். விஷாலுக்கு வாழ்த்துகள்... படம் எப்படியிருக்கிறது?

 

sandakozhi 2



ஏழு வருடங்களுக்கு முன், வேட்டைக்கருப்பு கோவில் திருவிழாவில், பந்தி பரிமாறும்போது ஏற்படும் ஒரு சண்டையைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளால் திருவிழா தடைபடுகிறது. அதனால், சுற்றியுள்ள ஊர்களில் தண்ணீர் பிரச்சனையிலிருந்து பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் நம்புகின்றனர். தன் முயற்சியால் கோவில் திருவிழாவை நடத்துகிறார் அந்தப் பகுதிக்கே பெரியவரான துரை அய்யா (ராஜ்கிரண்). திருவிழாவை முன்னிட்டு ஏழு வருடங்களாக வெளிநாட்டிலிருந்த பாலு (விஷால்) ஊருக்கு வருகிறார். அந்த பழைய பிரச்சனையில் இழப்பை சந்தித்த வரலக்ஷ்மி, அதே திருவிழாவிலேயே பழிக்குப் பழிவாங்கவேண்டுமென வன்மத்துடன் காத்திருக்கிறார். அதைத் தடுப்போம், திருவிழாவை சுமூகமாக நடத்துவோம் என்று வாக்குத் தந்திருக்கும் துரை அய்யாவும் பாலுவும் வென்றார்களா என்பதுதான் 'சண்டக்கோழி-2'.

 

sandakozhi vishal



படத்தின் அடிப்படை களம் திருவிழா என்பதால், கோவில், திருவிழா, அதைச் சுற்றிய ஊர் என வண்ணமயமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. 'பருத்திவீரன்', 'வெயில்' போல வெயில் தகிக்கும் கிராமங்கள் அல்ல லிங்குசாமியின் கிராமங்கள். 'அய்யா சொல்வதுதான் கடைசி சொல்' என்று ஊர் மக்கள் மதிக்கும் துரை அய்யா, அமைதி அதிரடி கலந்த நாயகன் பாலு, கலகல துறுதுறு நாயகி, அழுத்தமான சண்டைக்காட்சிகள், உணர்வுபூர்வமான உறவுகள் என சண்டக்கோழியின் பாசிட்டிவ் விஷயங்களை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் லிங்குசாமி. அது நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஆனால், மிக முக்கிய பாசிட்டிவ் விஷயங்களான நாயகனுக்கும் வில்லனுக்குமான அந்த வலுவான பிரச்சனை, நாயகனின் பின்னணி தந்த சர்ப்ரைஸ் என இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் மிஸ் பண்ணிவிட்டார். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்த விதமும் இடங்களும் புத்திசாலித்தனம். மீரா ஜாஸ்மின் இல்லாத காரணத்தை லாவகமாகக் கூறிவிட்டார் இயக்குனர். முதல் பாகத்தில் வரவேற்பை பெற்ற வசனங்களை ஆங்காங்கே அதே பாணியில் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கது.

 

sandakozhi varalakshmi



தொடக்கத்தில் காட்டப்படும் படத்தின் முக்கிய பிரச்சனை, பலவீனமாக இருப்பது மிகப்பெரிய குறையாக இருந்து படம் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது. லிங்குசாமியும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கும் கதை இன்னும் 'சண்டக்கோழி' என்ற பிம்பத்துக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி வசனங்கள் ஊர்ப்பாசம், மரியாதை, விசுவாசம் என அனைத்தையும் அழகாகப் பேசுகின்றன. ஆனால், முக்கிய உணர்வான ஆவேசம், கோபத்தை மட்டும் சற்றே சுமாராகப் பேசுகின்றன. 'திருவிழாவுல புலி வேஷம் போடலாம், புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது', 'இது ஆடுபுலியாட்டமில்ல, ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்' என்று அழுத்தமாக இருக்க வேண்டிய பன்ச் வசனங்கள் பெரும்பாலும் எதுகை மோனையாக மட்டுமே இருக்கின்றன. வரலக்ஷ்மியின் பாத்திரம் ரசிக்கவைத்தாலும் இன்னும் கொஞ்சம் நுணுக்கங்கள் இருந்திருக்கலாம். வில்லன் பக்கம் கொஞ்சம் வீக்காக இருப்பதும் படத்துக்குப் பின்னடைவு. வட்டார வழக்கு, சொலவடைகள் போன்ற விஷயங்களில் தமிழ் படங்கள் உண்மைக்கு நெருக்கமாக வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படம் காட்டும் தேனி வட்டாரவழக்கில் 'நேட்டிவிட்டி' கம்மியாக இருக்கிறது.

விஷால், பக்குவமாக இருக்கிறார், சண்டை வரும்போது பொறிபறக்க வைக்கிறார். முதல் பாகத்தின் குறும்பு இல்லை, அதற்கு காரணமும் இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், படத்தின் மிகப்பெரிய ஆசுவாசம். தப்புத்தப்பாக தேனி பாஷை பேசினாலும் குறும்பால் கவர்கிறார். ராஜ்கிரண், அதே கம்பீரம், அதே நடிப்பு. அவர் இந்தப் பாகத்திற்கும் பெரும் பலமாக இருக்கிறார். கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் ராமதாஸ் காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை. சண்முகராஜனுக்கும் 'கை' தென்னவனுக்கும் சில காட்சிகள், வசனங்கள் இருக்க ஜோ மல்லூரி, கஜராஜ், பிறைசூடன், உள்ளிட்ட பல நடிக்கக்கூடிய நடிகர்கள் வெறும் 'பேக்டிராப்'பாக நிற்கிறார்கள். யுவன் இசை பலவீனமான பல காட்சிகளில் தனியாகப் போராடுகிறது. பின்னணி இசையில் உற்சாகமூட்டிய யுவன், பாடல்களில் ஏமாற்றிவிட்டார். சக்தியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது.           
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!