Skip to main content

ஆதிக்கத்தை எதிர்த்து வென்றானா? - ‘கேப்டன் மில்லர்’ விமர்சனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
captain miller movie review

ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் பல கோணங்களில் வன்முறையைக் காட்டி கலங்கடிக்கச் செய்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் டீமில் இணைந்த தனுஷ் கேப்டன் மில்லராக உருவெடுத்திருக்கிறார். சாதாரண அனல் ஈசனாக இருக்கும் தனுஷ் எப்படி சுதந்திரப் போராட்டத்திற்கு முன் ஏற்படும் கிளர்ச்சிகள் மூலம் கேப்டன் மில்லராக மாறுகிறார்? என்பதைப் பார்ப்போம்.

சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக இருக்கும் அனல் ஈசன் தனுஷ், மன்னர்கள் மற்றும் ஆதிக்க சாதிக்காரர்கள்,  பிரிட்டிஷ்காரர்களால் ஒடுக்கப்படுகிறார். அந்த கிராமத்தில் தனுஷ் மட்டுமல்லாது கிராமத்து பழங்குடியின அனைத்து மக்களும் இவர்களின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கண்டு வெகுண்டு எழும் அனல் ஈசன் தனுஷ் மிலிட்டரியில் சேர்ந்தால் தனக்கு சரிசம மரியாதை கிடைக்கும் என எண்ணி ராணுவத்தில் சிப்பாயாக சேருகிறார். போன இடத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தன் இன மக்களையே தனுஷ் கையால் கொல்ல வைக்கின்றனர். மரியாதை கிடைக்கும் என எண்ணி சென்ற இடத்தில், தனக்கும் தன் மக்களுக்கும் நடக்கும் அடக்குமுறைகளை கண்டு வெகுண்டெழும் தனுஷ், அதன் பிறகு மண்ணுக்கும் மக்களுக்குமான போராளியாக உருவெடுத்து எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறார்? என்பதே கேப்டன் மில்லர் படத்தின் மீதி கதை.

ஆதிக்க மனிதர்களின் ஒடுக்குமுறைகளுக்கு இடையே ஒரு சாதாரண மனிதன் எப்படி அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக உருவெடுக்கிறான் என்பதை எதார்த்த காட்சி அமைப்புகளோடு கூடிய வன்முறை நிறைந்த காட்சிகளாகப் படம் விரிகிறது. தனது வழக்கமான வன்முறை நிறைந்த திரை மொழியோடு காட்சிகளை அமைத்து அதனுள் தனது ட்ரேட் மார்க் திரைக்கதை அமைப்பு மூலம் ஒரு வன்முறை நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இந்த முறை இவர் எடுத்திருக்கும் கதைக் கரு என்பது சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு அக்காலகட்டத்தில் இந்தியா எங்கும் நடந்த சுதந்திரப் போராட்டக்காரர்களின் கிளர்ச்சிகள், தியாகங்கள், கோபங்கள், சாதிக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்கு முறைகள், அடக்குமுறைகள் என அத்தனை விஷயங்களையும் சற்று பேண்டஸி நிறைந்த வன்முறை சினிமாவோடு கலந்து கொடுத்து ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தந்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

சமூக ரீதியான பிரச்சனைகள், ஒரு வீரன் எப்படி உருவாகிறான், அதற்குள் நடக்கும் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுடன் சுவாரசியமாக நகரும் முதல் பாதி படம் பின்பு ஒரு நாயகனின் எழுச்சி, அவருக்கான மாஸ் காட்சிகள், அதற்கிடையே ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்குள் உள்ளடக்கிய கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என இரண்டாம் பாதி சற்றே நீண்டு அதே சமயம் பல்வேறு திருப்பங்களுடன் அதிரடியாக முடிந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. குறிப்பாக படத்தின் பிளஸ் ஆக ஹாலிவுட் தரத்தில் இருக்கும் மேக்கிங்கும், அதற்கு ஏற்றார்போல் அமைந்த கதாபாத்திரங்களும், படத்திற்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும், அதேபோல் அவர்கள் வாழும் பகுதியில் இருக்கும் அக்கால விஷயங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்த கலை இயக்கமும் என அனைத்தையும் சேர்ந்து ஒரு தரமான படமாக கொடுத்திருக்கின்றன.

வழக்கம்போல் இந்த படத்தை தன் தோள்மேல் சுமந்து தனியாளாக ராஜநடை போட்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது யதார்த்த நடிப்பும், அதிரடியான ஆக்சன் சம்பவங்களும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மூன்று கெட்டப்புகளில் வரும் தனுஷ் அந்தந்த கெட்டப்புகளுக்கு ஏற்றவாறு தரமான நடிப்பை மிகச் சரியான அளவில் வெளிப்படுத்தி படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாயகியாக வரும் பிரியங்கா மோகன் கதாபாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் அது ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது மனதில் பதியும்படி இருக்கிறது. தனுஷின் அண்ணனாக வரும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர் பார்க்கும் பார்வையிலேயே மிரட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் தனுஷோடு சேர்ந்து இவர் வரும் காட்சி செம மாஸ். அதேபோல் சிறிது நேரமே வந்தாலும் சின்ன வேடத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டியிருக்கிறார் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தனுஷின் நண்பராக வரும் இவர் தேவையான நேரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு பரவசத்தை கொடுத்துள்ளார். கூடவே இருந்து கொண்டு குழி பறிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமாஸ்தா காளி வெங்கட் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரிடத்திலும் வெறுப்பை சம்பாதித்து கவனம் பெற்றிருக்கிறார்.

போராளி குமரவேல் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். மன்னர் குடும்பத்து வில்லன்களாக வரும் ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன் ஆகியோரும் சிறப்பான நடிப்பின் மூலம் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நிவேதிதா, விஜி சந்திரசேகர், அருணோதயன், வினோத் கிஷன், கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் நபர், அதிதி பாலன், ஆங்கர் சுவாதி, ஆங்கர் ஐஸ்வர்யா, அப்துல் லீ உட்பட பலர் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் அவரவருக்கான வேலையை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். இப்படத்தின் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது இயக்குநருக்கு பிறகு கலை இயக்குநர் தா. இராமலிங்கம். இவரது கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன் இருந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வியல் அவர்கள் பயன்படுத்திய நிலம், வீடு பொருட்கள் துணிமணிகள் ஆகியவற்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து அக்காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார். கர்ணன் படத்திற்குப் பிறகு தனுஷ் உடன் இணைந்து இவர் செய்திருக்கும் கலை இயக்கம் கவனிக்கத்தக்கவாறு அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

அதேபோல் இன்னொரு நாயகனாகப் பார்க்கப்படுவது ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை காட்சிக்கு காட்சி பின்னணி இசையில் அதிரடி இசை மூலம் படத்திற்கு மாஸ் கூட்டி இருக்கிறார். குறிப்பாக கில்லர் மில்லர் பேக்ரவுண்ட் பாடல் காட்சி சிறப்பு. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளும் சேசிங் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கால விண்டேஜ் விஷயங்களை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி அதிலும் பல இடங்களில் நன்றாக விரிந்து தெரியும் வைட் ஆங்கில் காட்சிகளையும் கொடுத்து அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இவர்களது உழைப்பு இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மிகவும் பின் தங்கியிருக்கும் ஒரு சாமானியனின் கோபம், ஏக்கம், தவறு, குற்ற உணர்ச்சி, இதனால் அவன் எடுக்கும் அதிரடி முடிவு என அனல் ஈசன் என்ற தனுஷ் எப்படி கேப்டன் மில்லர் என்னும் போராளியாக உருவெடுத்து தன் கேள்விகளுக்கு எந்த வகையில் விடை தேடிக் கொள்கிறான் என்பதை அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சி அமைப்புகளோடு கூடிய படமாக கேப்டன் மில்லர் அமைந்திருக்கிறது.

கேப்டன் மில்லர் - போராளி!

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.