Skip to main content

நிலைகொள்ளா கால்கள், படபடக்கும் இதயம்... ஒரு படம் பார்த்து இப்படி ஆனதுண்டா உங்களுக்கு? 96 - விமர்சனம் 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சில படங்கள் தான் அந்தத் தலைமுறையின் காதல் படங்களாக கொண்டாடப்படும். உதாரணத்திற்கு அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே போன்ற படங்களை சொல்லலாம். அப்படி இந்த தலைமுறைக்கான காதல் படமாக உருவாகியிருக்கிறது '96'.

 

vijay sethupathi



டீசரில், ட்ரெய்லரில் நமக்கு கோடிட்டுக் காட்டப்பட்ட அதே பள்ளிக்கூட, முதல் காதல் கதைதான். ஆனால் உணர்வுப்பூர்வமாக அது நம்முன் விரியும் விதம், ஒரு கவிதையின் நயத்துடன் இருக்கிறது. 1996ஆம் பேட்ச் பள்ளி மாணவர்கள் 20 வருடங்கள் கழித்து ஒன்றுகூடுகிறார்கள். பள்ளிக் காலங்களில் காதலித்து, சூழ்நிலைகளினால் பிரிந்த ராமும் ஜானுவும் அத்தனை வருடங்கள் கழித்து அங்கு சந்திக்கிறார்கள். ஆனால், இருவரின் சூழலையும் காலம் வேறு வேறாக்கி தூரமாக்கியிருக்கிறது. இருவரும் பேசி, சிரித்து, அழுது கழிக்கும் அந்த ஓர் இரவுதான் படம். இடையிடையே ஃப்ளாஷ்பேக்குகளின் மூலம் இருவரது பள்ளிக் காதல், பிரிவு உள்ளிட்ட சுவாரசியமான சம்பவங்களும் விவரிக்கப்படுகின்றன.

 

trisha



மூன்றாம் பிறை சீனு முதல் விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் வரை தமிழ் சினிமா எத்தனையோ காதலர்களை கண்டிருக்கிறது. '96' ராம் அவர்களை விட பெருங்காதலன் ! பொதுவாக பல இயக்குனர்கள் விஜய் சேதுபதியின் வழக்கமான பலத்தைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனாலயே விஜய் சேதுபதியின் மீது ‘எல்லா பாத்திரங்களிலும் விஜய் சேதுபதிதான் தெரிகிறார்’ எனும் விமர்சனம் உண்டு. ஆனால் '96'ல் விஜய் சேதுபதியைத் தாண்டி ராம் தெரிகிறார். ஜானுவின் மேல் உள்ள அளவற்ற காதல், ஆனால் அவளை பார்க்கும்போது நிலைகொள்ளா கால்கள், படபடக்கும் இதயம் என ராம், விஜய் சேதுபதியின் சிறந்த பாத்திரப் படைப்புகளில் ஒன்று.

 

janu 96



ஜானு, இந்த படத்தின் உயிர்நாடி. த்ரிஷா வரும் ஒவ்வொரு நொடியும் ஜானு நமக்குள் ஆழச்செல்கிறாள். சின்னச் சின்ன பார்வைகள் முதல், புன்னகை, கண்ணீர் என மிக இயல்பான நடிப்பில், நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் த்ரிஷா. இளவயது விஜய் சேதுபதியாக வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், இளவயது த்ரிஷாவாக வரும் கௌரியும் மிக இயல்பாக ராமையும் ஜானுவையும் நமக்கு அறிமுகம் செய்துவைத்து விடுகிறார்கள். அதுவும் பல இடங்களில் ஆதித்யா விஜய் சேதுபதியின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலித்திருப்பது அட்டகாசம். ஜனகராஜ், இந்த இனிப்பான நினைவுகளுக்கு மேலும் இனிப்பு சேர்க்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ். பகவதி பெருமாள், தேவதர்ஷினி உள்ளிட்ட பிற நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு துணை நிற்கிறது.

 

ram 96



முதல்காட்சி முதல் முற்றும்வரை ஆட்கொள்கிறது இசை. இரண்டே பேர், ஒரு இரவு. இசைக்கு எத்தனை பெரிய இடமிருக்க வேண்டும்? அத்தனை இடத்திலும் பிரவாகமெடுத்திருக்கிறது கோவிந்த் வசந்தாவின் இசை. மிகப்பெரும் ஹிட்டடித்த ‘காதலே காதலே’ பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் இடம் அற்புதம். அதைப்போல தளபதி படத்தில் வரும் ‘யமுனை ஆற்றிலே’ பாடலை வைத்து ஒரு சிறிய கதை பின்னியிருக்கிறார்கள். அதன் முடிவு அழகான கவிதையாய் இருக்கிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று துண்டுதுண்டாக பிரித்து பாராட்ட இயலாத தொழில்நுட்பம்தான் ஒரு படத்தின் கலையழகை கூட்டும். ’96 ல் ஒளிப்பதிவு செய்த மகேந்திரன் ஜெயராஜு, சண்முகசுந்தரம், படத்தொகுப்பு செய்த கோவிந்தராஜ் அளித்துள்ள ஒத்திசைவு படத்தின் கலைத்தன்மையை கூட்டுகிறது.

‘அய்யோ… இந்த காதல் சேர்ந்துவிட வேண்டுமே’என்று நம்மை பித்துக்கொள்ள வைக்க சில காதல்களால்தான் முடியும். அப்படியொரு காதல் இருக்கிறது '96' படத்தில். ‘அச்சோ.. இப்படி ஆயிருச்சே.. இப்படி பண்ணிருக்கலாமே.. ச்சே’என்று ரசிகர்கள் ஆதங்கப்படுவதே ஒரு நல்ல படத்தின் வெற்றி. வெறும் திரைப்படம்தான், இது நிஜமல்ல என்று தெரிந்தும் மிகச் சில படங்கள்தான் அந்த பாத்திரங்களுக்காக நம்மை பலநாட்கள் ஏங்கவைக்கும். அப்படி நம்மை ஏங்க வைக்கிறார்கள் ராமும் ஜானுவும்.

காதலின் கொண்டாட்டமான தருணங்களையும் பெருவலிகளையும் இயல்பாய் இணைத்த வகையில், இந்த படம் மறக்கவியலாத ஒரு காதல் கதையாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறது. தமிழ் ரசிகர்கள் சிரித்து, அழுது, வலியுற்று, மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டாடப் போகும் ஒரு படமாக '96' இருக்கக்கூடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
trisha do a cameo role in vijay the goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்டுள்ளதகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆறாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கிறார். ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Next Story

மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
mansoor ali khan trisha case update

மன்சூர் அலிகான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலி கான். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது. 

இதனை தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் மன்சூர் அலிகான் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராத உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் த்ரிஷாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்தது.