Skip to main content

சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை அளிக்காத ஜெயலலிதா... மேடையிலேயே சுட்டிக்காட்டிய ரஜினி!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசுவது மிக உயர்ந்த குணம். சிலர் மனதில் ஒன்று நினைப்பார்கள். ஆனால், பேசும்போது அது வேறாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் பெரும்பாலும் போலியான குணம் கொண்ட மனிதர்களாகவே இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடிய உயர்ந்த குணம் கொண்டவர். ரஜினிகாந்தின் இந்தக் குணத்தை நான் வியந்து பார்த்த ஒரு தருணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 

 

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெற்றன. அவர்கள் விழா மேடையிலும் அமரவைக்கப்பட்டனர். இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் குஞ்சுமோன் உட்பட பலரும் அந்த விழா மேடையில் அமரவைக்கப்பட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி கணேசனுக்கு மேடையில் இடம்வழங்கப்படாமல் பார்வையாளர்கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் இடத்தில் வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால் விழாவிற்கே வந்திருக்க மாட்டார்கள். ஆனால், சிவாஜி கணேசன் பெருந்தன்மையுடன் வந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். இதை சிவாஜி கணேசனுக்கு நிகழ்ந்த அவமரியாதையாக உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கருதினர். உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசனுக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் இந்தச் செயல் கலை ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

 

இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து, சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கும் விழா திருவல்லிக்கேணி சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போதும் ஜெயலலிதாதான் முதலமைச்சர். அந்த விழாவை அவர்தான் தலைமையேற்றும் நடத்தினார். அப்படி ஒரு விழா இந்தியாவில் எந்தவொரு நடிகருக்காகவும் இதற்கு முன் நடந்ததில்லை. இந்தியாவின் அனைத்து மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்களும் அந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர். இருபது பேர் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கிவந்து சிவாஜி கணேசன் கழுத்தில் போட்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தவறு செய்வது என்பது மனித இயல்புதான்; தான் செய்த தவறை திருத்திக்கொள்வது அதைவிட பெரிய விஷயம். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி சாருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை. நான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து இன்று சிவாஜி சாருக்கு மிகப்பெரிய விழா எடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்’ என்றார். ஜெயலலிதாவும் அதே மேடையில்தான் இருந்தார். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாதது பற்றி பேசிய முதல் நபர் நடிகர் ரஜினிகாந்த்தான். பலருக்கும் இது தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று எவரும் அது பற்றி பேசவில்லை. ஏன் பத்திரிகைகள்கூட அது தொடர்பாக எதுவும் எழுதவில்லை.

 

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் வந்தது. மனதில் இருந்ததை தைரியமாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.