Published on 27/04/2020 | Edited on 27/04/2020
![vdg](http://image.nakkheeran.in/cdn/farfuture/66opzHTi-J2VqegAe5dIlxgqoe4NswOolgrDyfXmV_8/1587989346/sites/default/files/inline-images/1584115755_vijay-devarakonda-to-team-up-with-palasa-director.jpg)
கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா கரோனா பாதிப்புகளுக்காக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அதில்...
''என் தேவரகொண்டா அறக்கட்டளையில் மொத்தம் 35 பேர் பணிபுரிகின்றனர். தற்போது என்னிடம் எந்த நிதியும் இல்லை. நான் இப்போது இரண்டு விஷயங்களை கையில் எடுத்துள்ளேன். உடனடி தேவைகள், எதிர்கால தேவைகள். இதில் எதிர்கால தேவை என்பது கரோனா பாதிப்பு முடிந்து, வரும் நாட்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. அதுதான் உண்மையான யுத்தமாக இருக்கப்போகிறது. ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதால் இந்த பிரச்சனையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். கடந்த ஆண்டு நான் ஒரு ரகசிய திட்டத்தை தொடங்கினேன். அதன் மூலம் 650 பேரை நேர்காணல் செய்து அதிலிருந்து 50 பேரை இறுதி செய்தோம். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து அதிலிருந்து 2 பேரை ஏற்கெனவே தேர்வு செய்து விட்டோம். மீதமுள்ள 48 பேரும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்புக்காக ரூ.1 கோடி வழங்குகிறேன். இன்னும் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி வழங்கப்படும். வழங்கப்பட்ட மொத்த தொகையும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பயன்படும். ‘ரவுடி’ மற்றும் ‘கிங் ஆஃப் தி ஹில்’ குழுமங்களின் மூலமும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம். மக்களின் தற்போதைய உடனடி தேவைகளுக்காக ரூ.25 லட்சம் வழங்குகிறேன். ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். உடனடி உதவி தேவைப்படுபவர்கள் எங்கள் thedeverakondafoundation.org இணையதளத்தை பார்க்கவும். அதில் அனைத்து தகவல்களும் உள்ளன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் என்னுடைய படங்கள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. தற்போது நான் வேலையின்றி இருக்கிறேன். தேவையுள்ளவர்களுக்கு உதவுதற்காக என் நண்பர்களிடம் பணம் கேட்டிருக்கிறேன். மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அவர்களுக்கு திரும்ப அந்த பணத்தை கொடுத்து விடுவேன்'' என கூறியுள்ளார்.