Skip to main content

“ஜல்லிக்கட்டில் சாதி கிடையாது” - பேட்டைக்காளி இயக்குநர் ராஜ்குமார்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

"There is no caste in Jallikattu" - Pettaikali director Rajkumar

 

ஜல்லிக்கட்டினை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான பேட்டைக்காளி வெப்சீரிஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ல.ராஜ்குமார் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக சந்தித்தோம். அவரிடம் கேட்கப்பட்ட ஜல்லிக்கட்டு பற்றிய பல கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரசியமான பதில்கள் பின்வருமாறு...

 

ஜல்லிக்கட்டு என்பது பொதுவான விளையாட்டு தான் என்கிற பார்வை பொதுவாக எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சாதி மக்களின் வீர விளையாட்டு. ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டைப் பிடிக்கக்கூடாது என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை?

 

ஜல்லிக்கட்டில் சாதி கிடையாது. சாதிக்காகத்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சாதிக்காகத்தான் ஜல்லிக்கட்டிற்குள் சண்டை வந்தது என்ற ஆதாரம் இதுவரை எங்குமே இல்லை. ஜல்லிக்கட்டிற்குள் சாதி இருக்கிறது என்று அரசியல் கருத்தியலை உண்டாக்குகிறார்களே தவிர, ஜல்லிக்கட்டிற்குள் அரசியலும் இல்லை, சாதியும் இல்லை. அது ஒரு வீர விளையாட்டு.

 

இது ஒரு முல்லை நிலத்து விளையாட்டு. ஆரம்பக்காலங்களில் குறிஞ்சி நிலத்தில் இருக்கிற பெண்கள் புலியை வேட்டையாடி புலிப்பல்லைக் கொண்டு வருகிற ஆண் ஒருவனைத் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தப் புலிப்பல்லைத் தான் தாலியாக அணிந்திருக்கிறார்கள். இது நம் இலக்கியத்தில் உள்ளது. அதேபோலத் தான் முல்லை நிலத்துப் பெண்கள், மாடு பிடிக்கிற ஆண் ஒருவனைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறார்கள். மருத நிலத்தில் இளவட்டக் கல்லைத் தூக்குகிற ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்கள். நெய்தலில் நெய் மீனைப் பிடிக்கிற ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு விளையாட்டு இருக்கிறது. அதுபோலத் தான் முல்லை நிலத்து விளையாட்டு ஜல்லிக்கட்டு.

 

முல்லை நிலம் என்பது தற்போதைய ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை வரையிலான தென் மாவட்டங்களை உள்ளடக்கியது. இது அந்த நிலத்திற்கான விளையாட்டு. அங்கு இருக்கின்ற சாதிக்கான விளையாட்டு அல்ல. எல்லா சாதிக்காரர்களுமே விளையாடுகிறார்கள். மற்ற நிலத்துக்காரர்கள் விளையாடுவது இல்லை. பேட்டைக்காளி வெப்சீரிஸில் நான் சாதி பற்றி சொல்லவில்லை. பாகுபாடுகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதில் மாடு பிடிக்கிறவர்களுக்கும் மாடு வளர்க்கிறவர்களுக்குமான முரணையும் சண்டையையும் பற்றியது தான் பேட்டைக்காளி. ஒரு குறிப்பிட்ட சாதி பற்றி சொல்வது இல்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்