Skip to main content

“நான் மன்னிப்பு கேட்டனா..!” - அமைச்சருக்கு தங்கர் பச்சான் விளக்கம்.

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

vgvdasvsa

 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மின்சார கட்டண உயர்வு குறித்த சர்ச்சை அதிக அளவில் எழுந்துள்ளது. வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிக அளவிலான கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில், மின்சார கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டமன்றத்தில் நிகழ்ந்த கேள்விக்கான பதிலுரையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தங்கர் பச்சான் குறித்து பதிலளித்தார். பிறகு தன்னுடைய கோரிக்கை குறித்த செந்தில் பாலாஜியின் பதில் மிகவும் தவறானது என்று தங்கர் பச்சன் விளக்கமளித்தார். இந்நிலையில் மீண்டும் மின் கட்டண கோரிக்கை குறித்து நடிகர் தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

"எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்துவிட்டதாகவும், நான் அதற்குப் பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன், ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார். எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக் கோரி அல்ல; மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். முதலமைச்சர் இதுகுறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின்போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கிறேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டிலுள்ள அனைவரின் பிரச்சினை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.