Skip to main content

"அவ்ளோ சந்தோஷம் தருது... ரொம்ப ரொம்ப நன்றி சார்" - இயக்குனருக்கு சூர்யா  நன்றி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

suriya

 

நடிகர் சூர்யாவை, தனது 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர், இயக்குனர்  வசந்த். தற்போது, 'சூரரைப் போற்று' படம் வெளியாகி, சூர்யாவின் நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் வசந்த் சூர்யாவிற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  

 

அந்தக் கடிதத்தில், "அன்புள்ள சூர்யாவுக்கு, இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை... நெடுமாறன் இராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமில் இருந்து, ரோலிங் டைட்டில் ஒடுகிற கடைசி ஃப்ரேம் வரை, உன் ஆட்சிதான். ஃபிரேம்க்கு ஃப்ரேம், சீனுக்கு சீன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த, உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று, கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை, இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது, இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!!! 

 

நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை. இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய். முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி, உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது. கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும் போது, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது, உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக, அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

 

cnc

 

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன். 'ஹேட்ஸ் ஆப் டூ மை டியர் சூர்யா...' என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சிமுகந்து, உச்சிமுகந்து மகிழ்கிறேன்" என சூர்யாவை பாராட்டியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குனர் வசந்திற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்த் எழுதிய கடிதத்தை ரீ-ட்விட் செய்துள்ள அவர், "உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்