
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் 1 குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார். மேலும் நிறைய நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போனதாக இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், மும்பை போலீஸ் பக்கத்தை டேக் செய்து, "தனது பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண், நேற்று மாலை 7 மணி முதல் காணவில்லை. அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, ரூ.11,000 கொடுக்கப்படும் என" என குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாது அவர் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் காணாமல் போன அந்த சிறுமி தற்போது கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்தது. கடவுள் மிகவும் பெரியவர். கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. 24 மணி நேரம் கழித்து அனுஷ்காவை மீட்டெடுத்தோம்” என குறிப்பிட்டு மும்பை காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.